முதல் பிரசவம் மணிநாத்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சோகம், துக்கம், இன்பம், விரக்தி, பயம், ஏமாற்றம் என பலவும் வந்து செல்லும். நான் ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றப்பட்ட காலம் அது. கல்யாணம் வரைக் கூடவந்தது. பெண்ணின் தந்தை முதலில் பெண் கொடுக்க ஒத்துக்கொண்டு பிறகு மறுத்துவிட்டார். அவளோ, அப்பா கிழித்தக் கோட்டை தாண்டாத-வள். காதல் சுக்கு நூறாய் உடைந்தது. பெண் கொடுக்க மறுத்தவனின் வார்த்தைகளில் ஏராளமான பொய்கள் குவிந்து கிடந்தன. அதை எப்படி தோலுரிப்பது? எந்த வடிவத்தில் அம்பலப்படுத்துவது? எதிர்கொண்டு வாதிடலாமா? கடிதம் எழுதலாமா? என குழப்பத்தில் இருந்தபோதுதான் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் ‘பொண்ணு ராசியின் காதல் கதை’ வாசிக்க நேர்ந்தது. என்ன ஆச்சரியம் தீர்வு அதில் இருந்தது. வடிவம் கிடைத்தது. கதை எழுதினேன். ஆத்திரத்தின் உக்கிரத்தில் பெயர்களை கூட மாற்றவில்லை. கதை பிரசுரமாகி சிக்கலில் மாட்டிக் கொண்டேன். இதுதான் என் முதல் பிரசுரம், ஒரு பக்கம் சிக்கல் மறுபக்கம் மகிழ்ச்சி. ஆனாலும் நம்மாலும் கதை எழுத முடிகிறதே என்கிற துள்ளல்.
அந்தக் கதையை படித்துவிட்டு தமுஎகச தோழர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு போய் சாத்தனூர் அணையில் உட்கார வைத்து சிறுகதைக்-கான பயிற்சிக் கொடுத்தார்கள். பயிற்சியில் எழுதிய கதையை விமர்சித்து மீண்டும் மீண்டும் என்னை எழுதத்தூண்டி உருவாக்கியவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள். கதை எழுதும்போது சிக்கல், சிடுக்குகள் வரும் போதெல்லாம் அவர் முன்னால் போய் நிற்பேன் மனம் கோணாமல் ஒரு தாயின் அரவணைப்பில் கற்கிற கல்வியின் சுகத்தை அவர் தந்தார். தாழ்வு மனநோயில், கூனி குறுகிக் கிடந்த-வனை ஒவ்வொரு கதையும் நிமிர நிமிர வைத்து மனிதனாக்கியது.
பிரபல எழுத்தாளர்களின் பார்வையும் சிறுகதை போட்டிகளில் கிடைத்த பரிசுகளும் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. 15 கதைகள் கொண்டு தொகுப்பை கொண்டு வர காலம் கைகூடிய போது பதிப்பகம், மதிப்புரை, ஓவியம் என அனைத்து வகையிலும் தொகுப்பு வெளிவர வழிகாட்டியவர் கவிஞர் இரா.தெ. முத்து அவர்கள். பதிப்பாளர் சண்முக-சுந்தரம் அவர்களின் முதல் பாராட்டும், ஓவியர் சந்தானம் அவர்களின் புகழ் மாலையும், ஒவ்வொரு கதைக்கும் உள் ஓவியம் வரைந்து கொடுத்த கார்த்திக் மற்றும் அவர் குடும்பமே கதைகளை படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நாட்களும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும்.
சுனாமியின் தாக்குதல், கலைஞரின் மறைவு என வதந்தி இவைகளால் வெளியீட்டு விழா பிசுபிசுத்துப் போனது. வருவதாக இருந்த பிரபஞ்சன் அவர்களால் வர முடியாமல் போனது. வெளியீட்டு விழாவில் ச. செந்தில்-நாதன் அவர்கள் வருத்தப்பட்டு பேசினார். ‘தவிப்பு’ என்கிற என் முதல் தொகுப்பு வெளிவந்த மகிழ்ச்சிதான். புறச்சூழல்கள் என் விழாவை பாதித்-திருக்கலாம். ஆனால், என்னை எந்த பாதிப்புக்கும் உள்ளாக்கவில்லை. வாழ்வின் சிக்கல் சிடுக்குகளை நீக்கவும் வழிகாட்டவும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் சிறுகதை இலக்கியத்தால் முடிகிறது.
எனது எல்லாக் கதைகளையும் பிழை திருத்தும் போதே நல்ல விமர்சகராகவும் என் உள்ளத்தில் என்றும் வழி நடத்துபவராக இருந்து வருகிறார். நண்பர் இல. பாஸ்கரன் அவர்கள். கலை இலக்கிய பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தகமும் இணைந்து நடத்திய பரிசும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமைப்பித்தன் பரிசும், திருப்பூர் தமிழ் சங்கத்தின் பரிசும், என மளமளவென மூன்று பரிசு-களை வாங்கித் தந்த தொகுப்பாக முதல் தொகுப்பு அமைந்தது. எப்போதாவது திடீர் திடீரென தொலைபேசி அழைப்பு வரும். அறிமுகம் இல்லாத குரல்கள். ““சார் உங்கள் புத்தகத்தை ஆய்வு செய்கி-றோம் உங்களைப் பற்றி சிறு குறிப்பு வேண்டும்”“ என கல்லூரி மாணவர்கள் கேட்கிறபோது நான் என்னையே கண்ணாடியில் பார்த்துக் கொள்வேன். மகிழ்ச்சியில் பூ பூக்கிற சுகம் அதில் தெரியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|