உலகப் புத்தக தினக் கொண்டாட்டம்
உலகப்புத்தக தினம் ஏப்ரல் 23 அன்று ஆண்டுதோறும் கொண்டாடினாலும் இந்த வருடம் ‘புதிய புத்தகம் பேசுது’ உலகப் புத்தக தினத்தை புது மாதிரியாய் கொண்டாடியது.
உலகப் புத்தக தினத்தை ஒட்டி இந்த ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் ஆகியவைகளுடன் “புதிய புத்தகம் பேசுது’’ மாத இதழும் சேர்ந்து சென்னைப் பல்கலைக்கழக பவள-விழா மண்டபத்தில் ஏப்ரல் 22 கருத்தரங்கத்தை நடத்தியது.
தமிழ்மொழி இன்று செம்மொழியாகி ஆகி-விட்டது. மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். ஆனால் முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் ஆரம்பித்து இன்றுவரை உள்ள புத்தகங்களின் பட்டியல், தமிழ் புத்தகங்களின் வரலாறு என்று தேடினால் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. இந்த வரலாற்றை தொகுக்கும் முயற்சியாகத்-தான் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதன் துவக்க விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையர் திரு. உதயச்சந்திரன் தம்முடைய உரையில், ‘இந்த நீண்ட நெடிய வரலாற்றை தொகுக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் இருக்கிறது. ஆனாலும் இரண்டு நாள் கருத்தரங்கத்தில் எந்த முடிவை எட்ட முடியாது என்றாலும் ஒரு துவக்கமாக இருக்கும் என்றார். இதற்கு அடுத்ததாக சென்னைப் பல்கலைக்-கழக தமிழ் இலக்கியத் துறை ஆய்வாளர்கள் எழுதி தொகுத்து, பாரதி புத்தகாலயம், தமுஎகச இணைந்து வெளியிட்ட ‘சென்னை நூலகங்கள்’ என்ற நூலை அமெரிக்க யேல் பல்கலைக்கழக மானுடவியல் துறைப் பேராசிரியர் திரு. பெர்னாட்பேட் வெளியிட நூலக ஞானி ப. பெருமாள் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்ட பேரா. பெர்னாட்பேட் தம்முடைய உரையில், உலகில் எந்த எந்த நூலகங்கள் தீக்கிரை-யாக்கப்பட்டன என்று விவரித்தார். கடைசியாக யாழ்ப்பாணம், பாக்தாத் நூலகங்கள் எரிக்கப்பட்டதை கூறினார். இதற்கான காரணம் என்ன என்று பார்க்கும் போது ஒரு எதிரியை அழிப்பது என்பது அவர்க-ளுடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும் என்று கூறுவர். அதனால்தான் அந்த மக்களின் பண்பாட்டு சின்னங்களான நூலகங்கள் அழிக்கப்பட்டன என்றார். மேலும் அடுத்ததாக இந்-நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கப் பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்-செல்வன் தமது உரையில், தமிழகத்தில் நம்முடைய சம காலத்திலே நூலகம் நாகர்கோவிலில் எரிக்கப்-பட்டது என்றார்.
இதற்கு அடுத்த நிகழ்வாக பதிப்புலகத்தின் முன்னோடிகளில் ஒருவரான மா.சு. சம்பந்தன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இதற்கு அறிமுக உரையை பேரா. வீ. அரசு நிகழ்த்த, மா.சு. சம்பந்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கின் முதல் அமர்வுக்கு சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக இயக்குனர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் தலைமையேற்க, 19ம் நூற்றாண்டில் புத்தக உருவாக்க முறைமைகள் என்ற தலைப்பில் பேரா. வீ. அரசு அவர்களும், 1900_1945 வரை உள்ள புத்தக உருவாக்க முறைமைகள் பற்றி அ. சதீஷ் அவர்களும், சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில் புத்தக உருவாக்க முறைமைகள் பற்றி ஸ்ரீரசா அவர்களும், உலகமய பின் காலனிய சூழலில் புத்தக உருவாக்கம் பற்றி எஸ். பாலச்சந்திரன் அவர்களும் உரையாற்றினர்.
மதியம் ஆரம்பித்த இரண்டாம் அமர்வில் ச. தமிழ்ச்செல்வன் தலைமையேற்க, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு புனைகதைகள்’ பற்றி பெருமாள் முருகன் அவர்களும், ‘1900_1945 வரை உள்ள மரபு இலக்கியங்கள்’ குறித்து கா. அய்யப்பன் அவர்களும் ‘சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில் உள்ள அரசியல் குறு நூல்கள்’ பற்றி ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களும் உரையாற்றினர்.
அடுத்த நாள் கருத்தரங்கம் அரசின் பந்த் அறிவிப்பால் முதல் நாளே முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மறுநாள் கலந்து கொள்ள வேண்டிய கட்டுரையாளர்கள் முதல் நாளே விழாவிற்கு வந்திருந்தவர்கள் கட்டுரை படித்தனர். இந்த அமர்விற்கு ஞானலாயா கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்க, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய பதிப்புப் போக்குகள்’ பற்றி வெ. ராஜேசும், ‘பதிப்புலகில் மறைமலையடிகள் நூலகத்தின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் ரெங்கையா முருகனும், ‘இணையத்தில் தமிழ் நூல்கள்’ பற்றி விருபா. து.குமரேசனும், ‘தமிழும் கணிப்பொறியும்’ பற்றி ஆண்டோ பீட்டரும், ‘புத்தக உருவாகத்தில் தொழில் நுட்பம்’ பற்றி அசோக்குமாரும் உரையாற்றினர்.
விழாவிற்கு பாரதி புத்தகாலய மேலாளர் க. நாகராஜன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கை-யட்டி வெளியிடப்பட இருந்த “பதிப்பு உலக சிறப்பு மலர்’’ மே மாதம் 20ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது.
தமிழ் நூல் பதிப்புமுறைகள், பதிப்பாசிரியர்கள் நூல்களில் பதிப்பிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், புத்தகத்தின் உள்ளடக்க மாறுதல்கள், மரபு இலக்கியம், புனைவு இலக்கியம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டதை பார்க்கும் போது பதிப்பு உலக சிக்கல்களை நாம் புரிந்து கொள்ளக்-கூடியதாக இருந்தது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|