நூல் அறிமுகம்
நீர்மையும் வலிமையும் உதயசங்கர்
சிறுகதையின் வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. கதையின் முதல் பாராவில் துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டிருந்தது என்று எழுதினால் அது கதை முடிவதற்குள் வெடிக்க வேண்டும் என்ற சிறுகதைக் கருதுகோள்கள் இன்று மாறிவிட்டன. இறுக்கமான செறிவான வடிவம் என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
தமிழ்ச் சிறுகதை உலகிற்கும், முற்போக்கு இலக்கிய முகாமிற்கும் மற்றுமொரு புதியவரவாக விமலனும் அவருடைய காக்காச்சோறு என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளது.
விமலனின் கதைகளில் நீர்மையான வடிவம் ஒன்று உருவாகி விடுகிறது. இந்த நீர்மையினூடாக எள்ளில் சிறுசிறு குமிழ்களாக வெடித்துச் சிதறிக் கொண்டேயிருக்கிறது. சில நேரம் வாசிக்கும் வாசகனுடான உரையாடலாகப் பரிமாணம் கொள்கிறது. சில நேரம் சுயவிசாரணைகளாக கேள்விகளைக் கேட்கிறது. சில நேரம் டைரிக் குறிப்பாக உருமாறுகிறது. சில நேரம் வலிமையான படிமங்களால் பின்னி விந்தையான ஒளி சிந்தும் ரகசிய முணுமுணுப்புகளாக கேட்கிறது அல்லது உரத்த குரலாக நம் செவிப்பறையில் முட்டி மோதுகிறது. சில வரிகளில் வாழ்வின் முழுமை துளிகளாக தெறிக்கிறது.
விமலனின் மனிதர்கள் எளியவர்கள். விமலனின் சமூக அக்கறை கொண்ட மனம், எளியவர்களின் துயரங்களைக் கண்டு துடிக்கிறது. வாழ்வின் விசித்திர விதிகளில் சிக்கித் தவிப்பவர்களைக் கண்டு கருணை கொள்கிறது. அழிக்கெடங்குகளில் முங்கித் திளைப்பவர்களைக் கண்டனம் செய்கிறது. திணிக்கப்பட்ட ஒழுங்குகளை கேலி செய்கிறது. நிராதரவானவர்கள் மீது நேசம் கொள்கிறது. வண்ணத்துப்பூச்சிகளாய் பறக்க சிறகுகள் விரிக்கும் குழந்தைகளைக் கொண்டாடுகிறது. இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளாக காக்காச்சோறு, அழிக்கெடங்கு, இடக்கரடக்கல், வேனற்காடு, வாய்க்கரிசி, கிழிசல், வண்ணத்தப்பூச்சி, போன்ற கதைகள் திகழ்கின்றன. சுளுவான, சரளமான மொழி நடை விமலனுக்கு வாய்த்திருப்பது கூடுதலான பலம் என்று சொல்லலாம்.
விமலனின் பாதை புதியது. இந்த நம்பிக்கைக்குரிய படைப்பாளி விரிந்தவானில் தன் சிறகுகளை இன்னும் வலிமையாக விரித்து பறக்கும்போது விசித்திரங்களும் விந்தைகளும் மிக்க ஒரு பேருலகு வாசிக்கக் கிடைக்கலாம். எனவே விமலன் தன் சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கட்டும், ஓயாது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|