வாசித்ததும் யோசித்தது ‘மெக்காலே’, இரா சுப்பிரமணி,
வெளியீடு : சாளரம், சென்னை15. பக். 118, விலை ரூ. 50
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலம் இன்னும் வெளியேறியபாடில்லை. ஆங்கிலத் திணிப்பு என்பது வெறும் மொழி சார்ந்த விஷயமல்ல. கல்வி, பண்பாடு, கலாசார திணிப்பாக அதை முதலில் சரியாக அடையாளம் கண்டார் கார்ல் மார்க்ஸ். நாம் ஆங்கிலேய கல்வி முறை மெக்காலே கல்வி முறை என்கிறோம். மெக்காலே ஒரு கல்வியாளர் அல்ல. அந்த ஆள் ஓர் ஆங்கிலேய அதிகாரி. சட்ட வல்லுநர். சட்ட வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் லீட்ஸ் நகரில் வாழ்ந்த அவர் பிறகு மில்டன் பற்றிய ஒரு கட்டுரையின் மூலம் ‘எழுத்தாளர்’ ஆனார்.
இன்று இந்திய கல்வியின் ஆங்கிலமயமாதலை எதிர்ப்பவர்கள் இரண்டு விஷயங்களை மறந்து விடுகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் உணரமுடியும். முதலாவது ஆங்கில கல்வி முறை முதன்முறையாக இந்தியாவின் மனுவின் கல்வி ஆதிக்கத்தை உடைத்து அதை ஜனநாயகப்படுத்தியது என்பது. அதனால்தான் ராஜாராம் மோகன் ராய் முதல் பி.சி. ராய் கடந்து அம்பேத்கார் வரை அனைவரும் ஆங்கிலக் கல்வியை தீவிரமாக ஆதரித்தார்கள். இரண்டாவது விஷயம்.. கார்ல் மார்க்ஸ் தனது ‘இந்தியாவில் ஆங்கில ஆட்சி ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள்’ என்ற நூலில் முன்வைத்த விஷயம். இந்தியாவை ஆக்கிரமித்த பிற அந்நிய தேசத்தவர்கள் (அரேபியர்கள் போன்றோர்) விரைவில் ‘இந்தியர்’களாகிப் போனார்கள். ஆங்கிலேயர்களோ இந்தியர்களை (நடை_உடை_கலாசார ரீதியில்) ஆங்கிலேயர்களாக ஆக்கினார்கள். இதன்மூலம் உலகளாவிய ஒரு பிரஜையாக நாம் நம்மை பாவிக்க முடிந்தது. மெக்காலே கல்வி முறையால் நாம் அடைந்த இதுபோன்ற பல வெளியில் தெரியாத விஷயங்களை இந்தப் புத்தகம் அழகாக முன்வைக்கிறது.
இந்தப் புத்தகத்தில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி ஆங்கிலேய கல்வியாளர் பிரெடெரிக்ஷேரே குறித்தும் அவரது கட்டுரைகள் குறித்தும் விரிவாக இடம்பெறும் விஷயங்கள் உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. பேராசிரியர் முனைவர் இரா. சுப்பிரமணியன் நடை இன்னும் சற்று எளிமையாக இருந்திருக்கலாம். சில இடங்களில் ஏதோ ஒரு கல்லூரி கருத்தரங்கில் உட்கார்ந்திருக்கும் உணர்வு ஏற்பட்டு லேசாக வியர்க்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|