நூல் அறிமுகம்
பீடங்களின் குழியிலிருந்து வந்த கதையும் வேறு சில கதைகளும்
நெல்லை பாஸ்கரன்
“ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’
உதயசங்கர்
வெளியீடு: வாசல், மதுரை பக். 80, ரூ. 50
வாழ்க்கை நதியில் கணவனால் துன்புற்று துயருற்று வருந்தித் தற்கொலை செய்யும் அபலையின் குரலாய் ஒலிக்க வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரச மரம் சொன்ன கதை’ கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சிறுகதை இலக்கியத்தின் முதல் படிக்கல்.
அடுத்த நூற்றாண்டில் நாம் நிற்கிறோம். உதயசங்கரின் பூனை வெளி கதையோடு காடு, நதி, கடலைத் தவிர மற்ற இடமெல்லாம் வீடுகள். திசையெங்கும் பல தினுசுகளில் கதவுகள் பூட்டப்பட்ட வீடுகள் மல்லாந்து கிடக்கின்றன. பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே தனிமையிலும் வெறுமையிலும் பெண்கள் உழன்று தவிப்பதை பச்சை நிற கண்களோடு நடுச் சாமத்தில் வந்து மிரட்டும் பூனையோடு பூனைவெளி வெம்பரப்பில் நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளின் மிகச் சிறந்த சிறுகதை.
இருண்மை வெளியில் சூட்சுமம் நிறைந்த பாம்பின் பின்னலாய் சுற்றித் திரிந்த சொற்றொடரை அழகிரிசாமியின் ஆண்மை கதையிலிருந்து விரித்து நடுச்சாமத்தின் சிறு விளக்கின் வெளிச்சக் கீற்றில் மனசை ஆசுவாசப்படுத்துகிறது. உதயசங்கரின் கதைகள், அலைபாயும் வெதும்பிய மனநிலையில் ஊடாடி மனக்கிலேச மூடுபனி திரையை விலக்கி நட்டநடு சமூக வீதியில் நின்று மாந்தரை அழைக்கிறது ஏதேனும் ஒரு தொன்மையின் குரலில் ராகத்தை இசைத்தபடி.
“ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ சிறுகதை தொகுதியில் உள்ள பத்து சிறுகதைகளும் வேறு வேறு தளங்களில் நின்று மானுடத்தை ஈரம் கசிய ஆழ்ந்து உற்று நோக்குகிறது. ரணமிக்க தேசப் பிரிவினையை பதிவு செய்ய ஆள் அரவமற்ற குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓர் இரவு நம்மையும் அழைத்துச் செல்கிறது.
“வந்து நின்ற வண்டியிலிருந்து ஒருவர் கூட இறங்கவில்லை. சானிசிங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆள் இருக்கிற அரவமே தெரியவில்லை. ஆனால் திடீரென ஏதோ ஒரு வாடை பிளாட்பாரம் முழுவதும் பரவியது. அப்போதுதான் சானிசிங் கவனித்தார். ஒவ்வொரு பெட்டியின் வாசலில் இருந்தும் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது’.
சலனமற்ற சமூக இடுக்குகளில் கடிகாரம் பார்த்து வாழ்ந்து கெட்ட ‘ஃபெர்பக்ஷனிஸ்ட்டுகளின்’ பிடியிலிருந்து உலகை ரட்சிக்கும் மனதை தரும் கதைகள் வாரி நம்மை அணைத்தபடி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. நக்கலும் நையாண்டியும் அதனூடே வாழ்வின் வலிகளை சென்னை நகருக்கு சென்று வேலை கிடைக்காமல் திரும்பும் பரமுவின் நண்பன் தடுமாறித் திரிகிற நகர நரகத்தைப் பதிவு செய்கிறது. ‘அண்டகாகசூம்..... அபூக்கா குசும்’ பலவீனமானவர் களைப் பலசாலிகள் உதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘ஊழி’ காலத்தை சாட்சியாய் கண்முன் நிறுத்துகிறது.
இரைச்சலுக்கிடையே ஊரில் கால் பதித்தவுடன் நதியின் சலசலப்பு எல்லோருக்கும் கேட்டு விடுவதில்லை நடக்க நடக்க அக்கரையின் மரங்கள் மறைந்து கரை தெரிந்து நீரின் ஓட்டம் வந்து முழு நதியும் மனசில் நிற்கும் நதியினூடான வாழ்வின் இணைப்பை ஓங்கியடித்து நீதி என்பதாகப்பட்டது. அரசின் வன்முறையென்பதை ஆற்றின் மேல் நகரும் காலத்தின் மறுகாட்சியமைப்பிலிருந்து ஒளி தெறித்து கண்ணில் விழுகிறது. கரையின் வடதிசையில் சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் விலங்கிடப்பட்டு கொட்டடி செல்கிறார்கள். விக்னேஷின் மழலைச் சிரிப்பொலி வாணதீர்த்தத்திலிருந்து பழைய காயல் வரை அரற்றி அழுகிறது.
பரவசத்தையும், நம்பிக்கையையும் தந்தபடி கதைகள் அடுத்தடுத்த காட்சியாய் விரிகிறது. சாதாரண நடையில் அசாதாரண விஷயங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்து, மனித மனங்களைச் சற்று அசைத்தபடி, மிக அருகிலே நம்மோடு பேசும் இந்தக் கதைகள் இன்றைய உலகை எதிர்கொள்ளும் சக்தி கொண்டதாய் இருக்கிறது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|