நூல் வெளியீடு
இளம் கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டி
மதுரா
கம்யூனிஸ்ட் இயக்கத்தில், தனிநபர்கள் முன்னி றுத்தப்படுவதில்லை; தத்துவமே முன்னிற்கிறது. எனினும் வரலாற்றில் தனிநபர்களுக்கு ஒரு சிறப்பான பாத்திரம் உண்டு, என்று அங்கீகரிக்கிறது, மார்க்சியம்.
ஒரு கம்யூனிஸ்டைப் பொறுத்தவரை, தனிமனித வாழ்க்கை என்பது, பொதுவாழ்க்கையின் ஒரு பகுதியே! அந்த வகையில், அறுபதாண்டுகளுக்கு மேலாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு, தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக வும், மூன்றாவது முறையாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வரும், தோழர் என்.வரதராஜன். அவரது வாழ்க்கை அனுபவத்தை "மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என்.வரதராஜன்" என்ற தலைப்பில், கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி, நூலாக எழுதியுள்ளார். பதிப்புத்துறையில், பல சிகரங்களை தொட்டுவரும் பாரதி புத்தகாலயம், இந்நூலை மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், இந்நூலை வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக நூல் வெளியீட்டு விழா, நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, என்.வி.யின் காலடித் தடங்கள் படாத கிராமங்களே இல்லை என்று கூறலாம். இவர் உள்ளிட்ட தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால், செங்கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும், அனைத்து பகுதிகளிலிருந்தும் உழைக்கும் மக்கள், ஊர்த் திருவிழா போல, உற்சாகமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நூலை வெளியிட்டு பிரகாஷ் காரத் பேசும்போது, "என்.வி.யின் வாழ்க்கை, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஒரு பகுதி தான்; என்றும், அடக்குமுறை களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு, இயக்கத்தை வளர்த்த இவர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை அனுபவத்தை, இளம் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஒரு பாடமாக கருதி பயில வேண்டும்" என்றார்.
நூலைப் பெற்றுக்கொண்டு, ஆர்.நல்லகண்ணு பேசும்போது, "இளமைக் காலத்திலிருந்தே எனக்கும் என்.வி.க்கும் நெருக்கமான தோழமை உண்டு. 1948 அடக்குமுறைக் காலத்தின் போது, மதுரை மத்தியச் சிறையில் என்.வி.யோடு நானும் அடைக்கப்பட்டிருந்தேன். தியாகி பாலு, தூக்கிலிடப்பட்ட அன்று இரவு, நாங்கள் எழுப்பிய முழக்கம் இன்னமும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசும்போது, "இந் நூல் தனியொரு மனிதனின் வரலாறு அல்ல; இயக்க அனுபவத்தின் பிரிக்க முடியாத பகுதி" என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசும்போது, "அருந்ததிய மக்களின் ஆவேச முழக்கமாக அரசியல் அரங்கில் என்.வி.யின் குரல் ஒலிக்கிறது. அந்த ஆவேச நெருப்பு இன்னமும் கூட அவரிடத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது" என்றார்.
நூலை எழுதிய கே.பாலபாரதி பேசும்போது, "தோழர் என்.வி. பொதுவாக தன்னை, தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்திக் கொள்பவர் அல்ல; இந்நூலை எழுத அவரிடம் ஒப்புதல் பெறுவது, எளிதான ஒன்றாக இருக்கவில்லை. கம்பளியம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பொதுவுடமை இயக்கத்தின் தளபதியாக உயர்ந்த இவரது வாழ்க்கை, ஒரு தியாக சரித்திரம்" என்றார்.
என்.வரதராஜன் பேசும்போது, "எனது வாழ்க்கை முழுவதும், கட்சியினால் வழிநடத்தப்பட்டே வந்திருக்கிறேன். எனக்கென்று எதுவுமில்லை. நான் அணிந்திருக்கும் உடை, சாப்பிடும் உணவு, எனக்குள் இருக்கும் உணர்வு அனைத்துமே கட்சி கொடுத்தது தான். இயன்றவரை சொந்த நலனை கட்சி நலனுக்கும், நாட்டு நலனுக்கும் உட்படுத்தி, வாழ்ந்து வந்துள்ளேன். இனியும் அப்படியே இருப்பேன்" என்றார்.
நூலின் பிரதிகளை அருந்ததிய அமைப்புக்களின் தலைவர்கள் முதலாவதாக மேடைக்கு வந்து பெற்றுச் சென்றது, என்.வி.யின் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|