நூல் அறிமுகம்
காலம்தோறும் பிராமணியம்
தே.இலட்சுமணன்
“காலம்தோறும் பிராமணியம்’
(முதல் பாகம்), அருணன்,
வெளியீடு: வசந்தம், மதுரை1.
ஸ்ந்நூலாசிரியர் அருணன் ஆழ்கடல் நீந்தி, மூழ்கி பல ஆச்சரியமான விவரங் களை அளித்துள்ளார். ஒரு மூவாயிரம் ஆண்டுக ளுக்கு மேலோடிய வரலாற்றை’ அதாவது வேதகாலம் தொடங்கி, பிராமணிய மன்னர்களின் இறுதி காலம் வரை அதாவது முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி தொடங்கி, அதன்பின் பிரிட்டிஷாரின் ஆட்சி துவங்கும் வரையிலான வரலாறு வரை பிராமணியத்தின் எழுச்சிபற்றி, சூழ்ச்சி பற்றி, ஆதிக்க தந்திரம் பற்றி நூலின் முதல் பாகத்தில் விரிவாகவே தந்துள் ளார். பல நுணுக்கமான விஷயங்களை, பல விஷம மான விவரங்களை தந்துள்ளார். வாசிக்கும்போது வாசகனுக்கு சலிப்போ, சோர்வோ ஏற்படாத வகையில் விவரங்களை சுவைபட, ஆர்வத்தை அடுத்தடுத்து தூண்டும் வகையில் எழுத்து நடையை யும் பின்னித் தந்துள்ளார். உள்ளடக்கமும் உருவமும் இணைந்து அழகியலை மெருகேற்றுகிறது. ஆசிரியர் இந்த நூலை சிங்காரவேலருக்குக் காணிக்கை யாக்கியுள்ளார். ஏன்? அவரே சொல்லும் காரணம்.
“பிராமணியத்தை மார்க்சிய நோக்கில் விமர்சித்த முதல் தமிழர் அவர்” என்கிறார். இதில் யாருக்கும் இரண்டுவிதக் கருத்துகள் இருக்க முடியாது.
“அடுத்து பிராமணியம் என்றால்...” எனத் தலைப்பிட்டு பயணிக்கிறார். எடுத்த எடுப்பிலேயே சில வியப்புகள். “பிராமணியம்” “பிராமணியம் அல்லாதார்” என்ற சொல்லாடல், பிராமணியத்துக்கு எதிரானவர்கள் கண்டுபிடித்த சொல்லாடல் அல்ல. இது இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்த சொல்லும் அல்ல என்கிறார். பழம் பெரும் பார்ப்பன இலக்கியங்களிலேயே அவர்களே பயன்படுத்திய சொல் என்பதற்கு ஆதாரங்கள் காட்டுகிறார்.
“கஷ்டமான காலங்களில் ஒரு பார்ப்பனமானவர் ஒரு பார்ப்பனரல்லாத குருவிடமிருந்து பாடங்களைக் கேட்கலாம்”என்றும் மனுதர்மத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது என்கிறார் ஆசிரியர். ஆக “பார்ப்பனர்” “பார்ப்பனர் அல்லாதார்” எனும் சொற்கள் அவர்கள் பயன்படுத்திய சொற்களே என்பது புரிகிறது.
இப்படி வேதகாலம், இதிகாச காலம், திரிபீடகங்கள் அர்த்த சாஸ்திரம் காலம், சங்க காலம் களப்பிரர் காலம், புராணங்கள் காலம், தர்ம சாஸ்திரங்கள் காலம், குப்தர் காலம், குப்தர்களுக்குப் பிந்திய காலம், சோழர் காலம், பார்ப்பன மன்னர் களின் இறுதிக் காலம் எனப் பிரித்து, “காலம் தோறும் பிராமணியம்” என்ற தலைப்பிட்டுத் தந்துள்ளது பொறுத்தமானதே!
நூலாசிரியர் அருணன் இந்த ஆய்வுக்காக பயன்படுத்திய நூல்கள், படித்த நூல்கள் ஏராளம். நான்கு வேதங்கள், இரண்டு இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள், இருபது தர்ம சாஸ்திரங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், வாத்ஸ்யாயனரின் காம சாஸ்திரம், வேதாந்த வியாக்கியானங்கள், தர்ம சாஸ்திர விளக்கவுரைகள், மூவர் தேவாரங்கள், ஆழ்வார் பாசுரங்கள், கம்பராமாயணம், சங்க இலக்கியங்கள் இப்படிப் பல நூல்களை அலசியுள்ளார். இவைகளிலிருந்தெல்லாம் சில பல மேற்கோள்களை ஆதாரமாகக் காட்டி யுள்ளார். கோசாம்பி, டி.சி. கங்குலி போன்ற வரலாற்று ஆசிரியர்களின் நூல்களிலிருந்தும் பல ஆதாரங் களைத் தேடித்தந்துள்ளார்.
பெரும் பணியை எடுத்து வெற்றிகரமாக முடித்துள்ளார்! பிராமணியம், சமுதாயத்தில், ஆட்சி அதிகாரத்தில், பொருளாதார அந்தஸ்தில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள இந்தச் சாதிய அமைப்பு முறையை எப்படியெல்லாம் கட்டிக் காத்தது, வாளை எடுக்கவும், வளைந்து போகவும் தயங்காது சூட்சி செய்யவும் சுணங்காது, ஆட்சி கவிழ்க்கவும் தயங்காது என்பது போன்ற ஏராளமான நிகழ்ச்சி களை வாசகர்கள் படித்துதான் ரசிக்க முடியும். நிற்க,
“பிராமணியம்” என்ற சொல்லுக்கு யார் காரண கர்த்தா என்பதை சொன்ன நூலாசிரியர் “இந்து”, “இந்துக்கள்” என்ற சொல்லாடை முஸ்லிம் நூலாசிரியர்களின் எழுத்துக்களிலிருந்துதான் காண முடிகிறது என்கிறார். இது ஏற்கனவே தெரிந்து விஷயம் என்றாலும். யார் இந்து, இந்து மதம் என்று சொல்லி, அதன் அடிப்படையில் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார்களோ, பகைத்தார்களோ அவர்களுக்கு இந்த ‘இந்து’ என்கிற நாமகரணத்தைத் தந்தர்வர்களே இஸ்லாமியர்கள் தான் என்பது ஒரு வரலாற்று விநோதம் என எண்ணத் தோன்றுகிறது. இதை யொட்டி நூலாசிரியர் மேலும் சில தகவல்களைத் தந்துள்ளதை அறிவது நல்லது.
கஜினி முகமது இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது (கி.பி. 973 1048) அபுரேஹன் பெரூனி என்கிற ஒரு வரலாற்று ஆசிரியையும் உடன் அழைத்து வந்தானாம். ஆனால் கஜினி வென்று திரும்பியபோது, இந்த வரலாற்றாளரை இந்தியாவி லேயே தங்க வைத்து விட்டு சொந்த நாடு திரும்பி விட்டானாம். இந்தப் பெரூனி 13 ஆண்டு காலம் இந்தியாவில் தங்கி சமஸ்கிருதம் பயின்றார். அதிலிருந்த நூல்கள் பலவற்றை அரேபிய மொழியில் மொழி பெயர்த்தார், அரேபிய மொழியாக்கத்தில் இருந்த கிரேக்க இலக்கியங்களை சமஸ்கிருதத்தில் தந்தார். இந்த மண்ணின் மக்களுக்கு மேற்கு உலக சிந்தனையை அறிமுகப்படுத்தியர் ஒரு முஸ்லிம்தான். அதோடு சமஸ்கிருதத்துக்கும் தொண்டு புரிந்தார். பிராமணிய வாதிகளுக்கு வெளியுலகத்திலிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்ற நினைப்போடு இருந்தவர்கள். அபூரேஹன் பெரூனி ‘கிதாப் உல் ஹிந்த்” என்ற புகழ்பெற்ற நூல் ஒன்று எழுதினார். “ஹந்த்” என்ற வார்த்தை இங்கும் வந்திருப்பதை கவனிக்க வேண்டும். அவர் எழுதிய நூலில் ஒரு பகுதியை ஆசிரியர் அருணன் காட்டியுள்ளது பிராமணியத்தின் சுய ரூபத்தை பளிச்செனக் காட்டுகிறது.
பிராமணியத்தின் மற்றொரு பிரிவாகிய சைவத்திலோ இது கோர வடிவம் எடுத்தது. “காபாலிகம் மற்றும் காளாமுகம் என்று இரு உட்பிரிவுகள் வளர்ந்தன. இவர்களது வழிபாடே மது மற்றும் புணர்ச்சி சம்பந்தப்பட்டதாக இருந்தது. கூடவே சில இடங்களில் மயானச் சடங்குகள், நரபலி என்றும் பயங்கர வடிவம் கொண்டிருந்தது. பெரிய புராணத்தில் இவர்களுக்கும் தெய்வீக அங்கீகாரம் தரப்பட்டிருப்பதை அறிவோம்” என்கிறார்.
இப்படி வைணவம் மற்றும் சைவம் என்ற பிராமணியத்தின் இரு பெரும் பிரிவுகளிலே ஏற்பட்ட இந்தச் சிதைவுகளுக்கு வேறு வகையான எதிர் வினையும் ஏற்பட்டது. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவம் மற்றும் சைவ சித்தாந்தம். இவை நடைமுறை ரீதியாக தாந்தீரிகத்திற்கு மாற்றாக இருந்ததோடு தத்துவரீதியாக சங்கரரின் அத்வைதத்திற்கு எதிராகவும் எழுந்தன என்ற ஆறுதல் செய்தியையும் சுட்டுகிறார்.
பௌத்தமும், ஜைனமும், பிராமணிய தாக்குதல் களுக்கு ஆளானது பற்றியும், காலத்தின் கட்டாயத்தால் அவற்றில் உள்ள சில நல்ல அம்சங்களை பிராமணி யம் எப்படி உள்வாங்கி விட்டது என்பது பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். மனம் கனக்கிறது. இப்படி 276 பக்கங்களைக் கொண்ட இந்த முதல் பாகத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. இவைகளைப் படிக்கின்ற போது மனம் பலவித உணர்வுகளுக்கு ஆளாகிறது. ஆச்சரியம், அதிர்ச்சி, கோபம், வேதனை இப்படி பல உணர்வுகள் நம்மை சிறை பிடிக்கின்றன.
வாசகர்கள் இந்த நூலை வாங்கி படிக்கின்றபோது, தாமும் பெரும் கடலில் மூழ்கி நீந்தி வருவது போல் உணர்வுகளுக்கு ஆளாவார்கள். இரண்டாவது பாகம் விரைவில் வெளிவர காத்துக் கிடப்போம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|