நூல் அறிமுகம்
இ.எம்.எஸ்.ஸின் சிறார் பருவ வரலாறு நூலிலிருந்து... வாசிப்பின் உலகம்
பையன்னூர் குஞ்ஹிராமன்
குஞ்சுவின் உலகம் விசாலமாகி வளர்ந்து கொண்டிருந்தது. பள்ளியில் மலையாளம் ஆசிரியர்தான் அவனை மிகவும் ஈர்த்தவர் ஆவார்... மகாகவி உள்ளூர் குமாரன் ஆசான், வள்ளத்தோள் ஆகியோரின் கவிதைகளை அழகாகச் சொல்லிப் பாராயணம் செய்வார். அதனதன் பொருளையும் சுவைபட எடுத்துக் கூறுவார்.
குஞ்சு மலையாள ஆசிரியரின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கூர்ந்து கவனிப்பான். அவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் பதிய வைப்பான்...
ஜாதிப் பிரச்சனை இந்தக் கவிதைகளில் துடித்துக் கொண்டிருந்தது...
மகாபாரதம் ஓர் இதிகாசக் காவியமாகும்... அந்த இதிகாசத்தைப் படைத்தவர் வேதவியாசர்... வேதவியாசர் கீழ் சாதியில் ஒரு மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர் ஆவார். இருப்பினும் மகாபாரதம் போற்றப்பட்டு வேதவியாசரும் ஆதரிக்கப்பட்டார்.
இந்த பூமியில் உத்தமமானவன் மனிதன் என்று கூறப்படுகிறது. அந்த மனிதன் ஒருவனை ஒருவன் தொடாமல்... தீண்டாமல் வாழ வேண்டும் என்று விதிக்கப்படுவது எவ்வளவு இழிவானது...! வள்ளத்தோளின் தோணிப் பயணம், பசி போன்ற கவிதைகளும் குஞ்சுவை ஈர்த்தன... அந்தக் கவிதைகளைத் தன்னுடைய பாணியில் விளக்கவும் முயற்சியை மேற்கொண்டான். ஜாதி, மதம் போன்ற சமூக ஏற்றத்தாழ்வு அனாச்சரங்களுக்கு எதிராகச் சிந்திக்கத் தூண்டும் ஏராளமான கவிதைகளை ஆசிரியர் ஆலபித்து விளக்கிக் கொண்டிருந்தார்...
குஞ்சுவை இலக்கியத்துக்கு வழிநடத்திச் சென்றவர் மலையாள வகுப்பெடுக்கும் ஆசிரியர்தான். சாமான்ய மக்கள் எழுதப் படிக்க கற்றுக் கொள்வது குற்றமா...? குஞ்சுவின் மனதில் இந்தக் கேள்வி எழுந்தது... தோணிப் பயணம் என்ற கவிதையில் ராமாயணத்தைத் தொட்டு விட்டதற்காக குற்ற உணர்வுடன் சங்கடப்படும் படகோட்டியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது... சிறு வயதிலிருந்தே குஞ்சு இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வளர்ந்தான். தன்னுடைய இல்லத்தின் நுழைவுப் பாதைக்கு வெகு தொலைவில் விலகி நிற்பவர்களும் மனிதர்கள்தானே...? ஜுரம் வந்தபோது தனக்கு வைத்தியம் பார்த்த முஸ்லிமும் மனிதன்தானே...?
வள்ளத்தோளின் மன்னிப்பு என்ற கவிதையும் குஞ்சுவின் அடிமனதில் ஆழமாகப் பதிந்திருந்தது...
இறப்பு சாதாரணமானது. ஆனால் பசியால் எரிவது நமது நாட்டில் மட்டும்தான். முதலாளி தன்னுடைய சொந்த மாளிகையில் சுகத்தை அனுபவித்து சொகுசாக வாழ்கிறார். அவருக்கு சொர்க்கத்தைப் படைத்தளித்த பாட்டாளிகள் பசிதாளாது கண்ட கண்ட இடங்களில் விழுந்து மடிகிறார்கள். இதுதான் வள்ளத்தோள் கவிதையின் சாரம்...!
இந்த முரண்பாடு ஏன்? எதனால்...? குஞ்சுவை அசாதாரணமாக்கியது இந்தக் கேள்விகள்தான்! வாரமும் குத்தகையும் பெறும் பணக்காரர்களுக்கு பசியென்றால் என்னவென்றுதெரியாது. குஞ்சுவுக்கு பசி தெரியாதுதான்... வள்ளத்தோளின் கவிதை பசியை அனுபவப்படுத்தியது... பசி வயிற்றுக்கு மட்டுமில்லை என்பதையும் குஞ்சு புரிந்து கொண்டான்... வழி நடப்பதற்கான பசி... மார்பை மறைப்பதற்கான பசி... ஆராதனை செய்வதற்கான பசி... தன்மானத்துடன் நிமிர்ந்து நிற்பதற்கான பசி...
சிந்தித்து சிந்தித்து கடைகோடி வரை சிந்தித்தும் விடை கிடைக்காத நிலை... இருப்பினும் பசி ஒழிய வேண்டும்...
பசியை ஒழிப்பதற்கான முயற்சியைத் தொடர வேண்டும்... மலையாள வகுப்பெடுக்கும் ஆசிரியருடன் இன்னொரு உறவும் குஞ்சுவுக்கு இருந்தது. பள்ளியின் அருகில் ஒரு வாசக சாலை இருந்தது. குஞ்சு அந்த வாசக சாலையில் தினமும் சென்று பத்திரிகைகள் புத்தகங்களைப் படிப்பது வழக்கம். மலையாள ஆசிரியர் நாராயணமேனன் அவர்களும் அந்த வாசக சாலையில் நாள் தவறாது வந்து செல்பவர் ஆவார்.
வாசகசாலை ஒரு கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தது. பெயர் Ôயுவசைதன்யம்Õ அதாவது Ôஇளமைத் துடிப்புÕ என்பதாகும்.
பத்திரிகையின் முதல் பக்கத்தில் வள்ளத்தோளின் ஒரு கவிதையை இடம் பெறச் செய்வார்... அடைய வேண்டிய இடத்தை அடைந்தாலும் சரி. மத்தியில் மரணம் விழுங்கினாலும் சரி முன்னோக்கியே நடப்பேன், வழியில் கூரிய முட்களை காலால் மிதித்து நான்...! பின்னால் வரும் சின்னஞ்சிறார்களுக்கு நடந்திட கால்கள் நொந்திடலாகாதே...
வள்ளத்தோளின் சமூகக் கடப்பாடு மிக்கது இந்தக் கவிதை வரிகள்..! முட்களை காலால் எட்டிமிதித்து முன்னேற வேண்டும் என்ற அறைகூவல்..! ஒரு பொதுமக்கள் தொண்டனின் லட்சியமும் இதாகத்தானிருக்க வேண்டும். பின்னால் வருபவர்களுக்கு வழி செப்பனிட வேண்டும்... கையெழுத்துப் பத்திரிகையின் சிற்பி நாராயணமேனன் ஆவார். குஞ்சுவும் பத்திரிகையை உருவாக்குவதில் உதவி புரிந்தான். குஞ்சு பத்திரிகையில் குறிப்புகளையும் எழுதினார்.
நாராயண மேனனும் கையெழுத்துப் பத்திரிகையும் வாசகசாலையும் சேர்ந்து குஞ்சுவை இலக்கியத்தின் பரந்து விரிந்த உலகத்திற்கு அழைத்துச் சென்றது...
குருவும் சிஷ்யனும் மேற்கொண்ட விவாதம் இலக்கியத்தோடு நின்று விடவில்லை. தேசிய இயக்கம், விடுதலைப் போராட்டம், அன்னியத் துணிப் புறக்கணிப்பு, பட்டினியை ஒழிப்பது போன்ற பல விஷயங்களையும் இருவரும் விவாதித்தனர்.
குஞ்சு சிறந்த எதிர்காலத்துக்கு உரியவன் என்பதை நாராயணமேனன் உணர்ந்திருந்தார். எனவே சிஷ்யனை அவர் பல்வேறு வகையிலும் உற்சாகப்படுத்தினார்...
தேவையான அளவுக்கு புத்தகங்களை வழங்கினார்... வாசிப்பின் வாயிலாக குஞ்சு வளரத் தொடங்கினான்...
வாசிப்பைப் போலவே விளையாட்டிலும் குஞ்சு ஆர்வமுடையவனாக இருந்தான். பேட்மிண்டன் விளையாட்டில் தான் ஆர்வம்... விளையாட்டுப் போட்டிகளில் பள்ளியின் டீம் வெற்றி பெற்றால் குஞ்சு உட்பட பள்ளி மாணவர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பள்ளியில் குஞ்சுவை ஈர்த்த இன்னொரு ஆசிரியரும் இருந்தார். கோவிந்தமேனன்,கோபி மாஸ்டர் என்று மாணவர்கள் அனைவரும் அழைப்பர். மாணவர்களில் தேசிய உணர்வை வளர்ப்பதுதான் ஆசிரியர்களின் கடமை என்று அவர் நம்பினார்.
ஒருநாள் கோபி மாஸ்டர் ‘கிறீறீ’ என்ற ஆங்கில வார்த்தையைச் சேர்ந்து ஒரு வாக்கியத்தை அமைக்கச் சொன்னார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரியாக எழுதினார். ஆனால் குஞ்சு எல்லோரையும் விட வித்தியாசமாக அந்த வாக்கியத்தை அமைத்தான்.
"ALL INDIA WAS SAD WHEN C.R.DAS DIED”
இவ்வாறு குஞ்சுவின் மனமும் சிந்தனையம் சொல்லும் அனைத்தும் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையதாயிற்று... வாசிப்பும் இலக்கியமும் தேசிய இயக்கமும் குஞ்சுவை வளைத்த போதிலும் அவன் படிப்பிலும் தீவிர சிரத்தை செலுத்த தவறவில்லை.
படிப்பில் எப்போதும் முதலிடம் வகித்தான்... தாயாரின் முன்சத்தியாக்கிரகம் மேற்கொண்டல்லவா பள்ளியில் சேர்ந்தான். அதனாலேயே படிப்பில் பின்தங்கி விடக் கூடாது என்பதில் குஞ்சு மிகவும் எச்சரிக்கையாக இருந்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|