நூல் அறிமுகம்
தொகுப்பும் வாசிப்பும்
இரா. வெங்கடேசன்
பதிப்பும் வாசிப்பும் (தமிழ் நூல்களின் பதிப்பு மற்றும் ஆய்வு),
பா. இளமாறன், சந்தியா பதிப்பகம், சென்னை 83,
பக். 136 ரூ.70
ஒரு பிரதியின் மீதான அணுகுமுறை காலம்-தோறும் அறிஞர்கள் தோறும் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டு காணப்படும். தன் சமகால புரிதல் சார் வெளிப்பாடாகவே அவ்வணுகுமுறை அமையும். அவ்வாறான பல்வேறு சிந்தனைப் புள்ளிகளைத் தொகுத்து ஒருங்கு வைத்துப் பார்க்கின்ற போது அப்பிரதியின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டு நிற்பதுண்டு. அந்தவகையில் இரண்டாயிரமாண்டு கால தமிழ்ப் புலமை மரபில் உச்சநிலையில் வைத்துப் போற்றப்படும் தொல்காப்பியப் பனுவலைப் பல்வேறு நிலைகளில் வைத்து அணுகி ஆராய்ந்த கட்டுரை-களைத் தொகுத்து ‘தொல்காப்பியம் _ பன்முக வாசிப்பு’ எனும் நூலை பா. இளமாறன் உருவாக்கி-யுள்ளார்.
பல்வேறு அரிய -துறைசார் தொகுப்பு நூல்களை உருவாக்கி வெளியிட்ட பேராசிரியர் வீ. அரசு அவர்கள் இந்நூலிற்குப் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். ‘கங்கு’ எனும் இலக்கிய வெளியீட்டு வரிசையின் மூலமாகப் பல்வேறு அரிய நூல்களை வெளியிட்ட அனுபவம் பேரா. அரசு அவர்களுக்கு உண்டு. அவ்வனுபவத்தின் தொடர்ச்சி-யாக ‘மாற்று’ எனும் இலக்கிய வெளியீட்டு வரிசையை உருவாக்கிப் பொதுப்பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். தமிழ் நாடகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரை-களைத் தொகுத்து ‘கிறிக்கி’ எனும் பெயரிலான நூல் மாற்று வரிசையின் முதல் வெளியீடாக வெளிவந்தது. அவ்வரிசையின் இரண்டாம் வெளியீடு ‘தொல்-காப்பியம் _ பன்முக வாசிப்பு’ எனும் நூல். மேலும் செவ்விலக்கியம் ஒவ்வொன்றுக்குமான ஆய்வுக்கட்டு-ரைகளைத் தொகுத்துத் தனித்தனி நூலாக வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
பேரா. வீ. அரசு அவர்களின் நூல் தொகுப்பு அனுபவத்தை உடனிருந்து பெற்றதன் வழியும் அவரின் வழிகாட்டுதலாலும் சிரத்தையுடன்
பா. இளமாறன் இத்தொகுப்பு நூலை உருவாக்கி-யுள்ளார். தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும் பொழுது தொகுப்பின் சிரத்தையை நம்மால் உணரமுடிகிறது. தமிழில் வேறெந்தப் பனுவலுக்கு-மில்லாத தனியிடத்தைத் தொல்காப்பியத்திற்குத் தமிழ்ப் புலமைச் சமூகம் தந்துவருகிறது. தனித்து எண்ணும்படியான தன்மையை அப்பனுவல் பெற்றிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் 19, 20 ஆகிய இரு நூற்றாண்டுகளில் அப்-பனுவல் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் முன்னெடுக்-கப்பட்டுள்ளன. இதன்வழி தொல்காப்பியம் குறித்தான சிறந்த ஆய்வுக் கட்டுரை-களைத் தேர்ந்தெடுத்-துத் தொகுப்பது என்பது சிரத்தை-யான செயல்பாடே-யாகும். அந்தச் சிரத்தையும் கடந்து சிறந்த கட்டுரை-களைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்-பட்டுள்ளது.
தமிழ்மொழியின் மரபு இலக்கண இலக்கியங்கள் சுவடியிலிருந்து அச்சுக்கு மாறிய சூழல் ஏற்பட்டதும் தமிழின் தனித்துவத்தை முன்னெடுக்கும் படியான ஆய்வுகள் தமிழ்ச்சூழலில் மிக வேகமாக நடந்தன. அதிலும் தொல்காப்பியம் அதன் காலம் குறித்த ஆய்வுகள் தமிழறிஞர்களிடத்து மிகுதியாக நடத்தப்பட்டன. சமஸ்கிருத இலக்கண மரபிற்கு இணையான இலக்கிய மரபைத் தமிழ்-மொழியும் பெற்றுள்ளது என்று சொல்லவேண்டிய தேவையின் வெளிப்பாடாக அவ்வாய்வுகளைக் கருதலாம். பேராசிரியர் வெள்ளைவாரணர், பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை, பேரா.தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார் முதலானோர் தொல்காப்பியர் காலம் குறித்து எழுதியுள்ளனர். இவற்றுள் இருவரின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. தமிழியலின் அனைத்து துறைசார் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுப்பில் தந்திருப்பதன் வழி தொல்காப்பியப் பிரதியின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஆய்வாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் ஒரு பிரதியின் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கு கிடைக்கப்பெறும் என்பது இவ்வாறான தொகுப்பு நூலின் முதன்மைப் பயனாகும். அதேவேளையில் எந்தப் பொருள் சமூகத் தேவையை ஒட்டி உருவாகி-றதோ அந்தப் பொருளே வரவேற்கப்படும் என்பது சமூகவியல் உண்மை. அந்த வகையில் செம்மொழி-யாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் செவ்விலக்கிய வரிசையில் முதன்மையிலுள்ள தொல்காப்பியப் பனுவல் குறித்தான இத்தொகுப்பு நூல் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். செவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரை-களைத் தொகுத்து பல தொகுப்பு நூல்கள் உருவாவ-தற்கு ‘தொல்காப்பியம் பன்முக வாசிப்பு’ நூல் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|