நூல் அறிமுகம்
தியோடர் அதோர்னோ
வே. மீனாட்சிசுந்தரம்
தியோடர் அதோர்னோ, இரா. முரளி
பாரதி புத்தகாலயம், ரூ.20 பக். 48
ஆங்கில உலகத்திற்கும் ஆங்கிலத்தின் மூலம் மட்டுமே உலகை அறிய வாய்ப்புள்ளவர்களுக்கும் ஜெர்மனி நாட்டு தியோடர் அதோர்னோவை அறியும் வாய்ப்பு அண்மை காலம் வரை இல்லாமல் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரை தேட வைத்துவிட்டது. இசை விமர்சகர், சமூக இயலாளர், தத்துவப் போராளி என்று மட்டுமே அவர் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முதலாளித்துவ முகாமிலும் சோசலிச முகாமிலும் உருவாகிவந்த அரசியல் போக்குகளை விமர்சனம் செய்த அரசியல் விமர்சகர் என்பது அவ்வளவாக முன்னுக்கு வரவில்லை. இவர் வாழ்ந்த காலத்தில் இவரை யூத வம்சத்தில் பிறந்தவர் என்பதால் ஹிட்லரின் கடவுள் சேவகர்கள் குறி வைத்தனர். ஹிட்லரின் விஷக் காற்று அறையிலிருந்து தப்ப பிரிட்டனுக்கு ஓடினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்-கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைக்குமென எதிர்பார்த்தார். வேலை கிடைக்காததால் அமெரிக்கா-விற்கு சென்றார். ஹிட்லரிசம் ஒழிந்தபின் மீண்டும் ஜெர்மன் திரும்பினார். முதலாளித்துவ உலகின் ஹிட்லரிசமும், தனிநபர் துதியால் சீரழியத் துவங்கிய சோவியத்தும் இவரை வெகுவாகப் பாதித்தது. முதல் உலக யுத்த முடிவில் உலகைக் கவர்ந்த சோவியத் புரட்சி ஐரோப்பாவில் பரவவில்லை. மாறாக ஜெர்மனியில் ஹிட்லரின் பேயாட்சி வந்தது. ஐரோப்பாவில் ஸ்டாலின் எதிர்ப்பும் பரவியது. வழிகாட்ட புதிய தத்துவம் தேவை என்று இக்காலங்களில் முட்டிமோதிய தத்துவ ஞானிகளில் இவரும் ஒருவரானார். ஐரோப்பா இரண்டு யுத்தங்களை சந்தித்த போர்க்களம் மட்டுமல்ல பலவிதமான தத்துவப் போக்குகள் முட்டி மோதும் களமாகவும் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது. இந்தத் தத்துவார்த்த தேடலில் விஞ்ஞானிகள், சமூக இயலாளர்கள், அரசியல் நிபுணர்கள், மத வழி தர்மவாதிகள், பொருளாதார நிபுணர்கள் என எல்லோரும் பங்கேற்றனர். அதோர்னோ அவர்களை விமர்சித்தார்.
இவரது படைப்புகளின் உள் அடக்கத்தை சுவை குன்றாமல் இரா. முரளி அவர்கள் நல்ல தமிழில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதோர்னோவின் படைப்புகள் நமது சிந்தனையை தூண்டுபவைகள். அவரது எழுத்துக்கள் தத்துவ உலகை குலுக்கியது. ஆனால், வழிகாட்டவல்ல இயக்க இயல் பொருள் முதல்வாதத்தை செழுமைப்படுத்தும் வேலையை நம்மிடம் ஒப்படைத்து விட்டார்.
அதோர்னோ வாழ்ந்த காலம் வரலாறு காணாத இரண்டு உலக யுத்தங்கள் நடந்த காலமாகும். முந்திய யுத்தகங்களில் போர் வீரர்கள் மடிவர் பொருட்-களை கைப்பற்றுவர். இந்த யுத்தகங்களில் தான் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பொருட்கள் அழிக்கப்-பட்டன. இக்காலத்தில் கலை, இலக்கியத் துறைகள் மட்டுமல்ல விஞ்ஞானம், தத்துவம் ஏன் மானுடம் கை வைத்த அனைத்தும் இரண்டு முகாம்களாக நின்று மோதின. முதலாளித்துவம் தன் நபர் உரிமை பாதுகாப்பது என்ற பெயரில் தனி மனிதனை வேட்டைகாரனாகவும் செல்வம் சேர்க்கும் சூதாடி-யாகவும் வாழத் தள்ளியது. கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் என்ற பெயரில் ஒவ்வொரு மனிதனும் முன்னேற வாய்ப்பினை உத்தரவாதம் செய்யும் சமூக அமைப்பினை கட்டுவதில் சோவியத் தடுமாறியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி முறையின் இலக்கை தவறவிட்டுவிட்டது. மானுடத்தின் சாராம்சம் எது என்பது அன்று மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அதோர்னோவின் எழுத்துக்கள் பனிப்போர் காலத்தியது என்ற புரிதலோடு படிப்பது அவசியம்.
இன்று உலகம் முதலாளித்துவத்தின் அதிர்ச்சி வைத்தியத்தில் தவிக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை மக்கள் ஏற்கவில்லையா? சிறிது நாள் பெட்ரோல் கிடைக்காமல் செய்துவிட்டால் விலை உயர்வு அப்புறம் சுமையாக தெரியாது போய்விடும். இலங்கையில் சுனாமி வந்தது. இந்த பேரழிவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமானது! மீனவர்களை துரத்திவிட்டு உல்லாச ஹோட்டல் கட்டும் திட்டத்திற்கு சுனாமியை பயன்படுத்திக் கொண்டனர். இப்படி இயற்கை அதிர்ச்சியையும் செயற்கையாக அதிர்ச்சியை உருவாக்கியும் முதலாளித்-துவம் நீடிக்க முயல்கிறது. மறுபக்கம் வர்த்தக சூதாட்டத்தின் மூலம் திடீர் பணக்காரர்களை உருவாக்கி பிரமைகளை வளர்க்கிறது. பயங்களும், பிரமைகளும் இன்றைய மானுடனை துரத்துகிறது. இலட்சியங்களும் முயற்சிகளும் இன்று கேலிப் பொருளாகவில்லை என்ற ஆறுதல் மட்டும் மிஞ்சுகிற இத்தருணத்தில் அதோர்னோவின் எழுத்துக்கள் நமது சிந்ததனைக்கு தூண்டுதல் ஆகும். அதோர்னோவை அறிமுகப்படுத்திய இரா. முரளியை தமிழ் உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|