நூல் அறிமுகம்
அரிய செய்திகளை கொண்ட நூல்
கிருஷ்ண கோவிந்தன்
தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி,
முனைவர் பி.எஸ். சந்திரபாபு,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை 18. பக்.264 ரூ.140
“தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி’’ _ முனைவர் பி.எஸ். சந்திரபாபு அவர்கள் எழுதிய நூலினை மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் படிக்க முடிந்தது. தந்தை பெரியார் அவர்களின் ‘பொற்காலம்’ என்று சொல்லக்கூடிய 1925 முதல் 1944 வரை உள்ள நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெரும்முயற்சி எடுத்தது. அதனால் தீண்டத்தகாதவர்கள் என்று காலங்காலமாக அடிமைப்படுத்தியும் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி இருந்த மக்களை சர்வ சுதந்திரமாக வாழ வழிகாட்டியது. சுயமரியாதை இயக்கம் என்பதை அனைவரும் அறியலாம்.
தீண்டப்படாத மக்களின் உயர்விற்காக பாடுபட்ட இதர அமைப்புகள் மற்றும் சுயமரியாதை இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு பெருமளவில் சமூக அந்தஸ்த்தை பெற்று தந்துள்ளது என்பதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது.
நூலின் ஆசிரியர் மிகவும் கவனமாக ஒவ்வொரு காலகட்டத்தையும் 11 அத்தியாயங்களில் கூறுகிறார். திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முடிவாக விவரிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 1944ல் திராவிடர் கழகம் உருவாக்கத்துடன் இந்நூலை முடித்துக் கொண்டாலும், முதல் அத்தியாயத்தில் பெரியார் அவர்களின் இளமைக்காலம் முதல் ‘குடிஅரசு’ மற்றும் ‘கொங்கு நாடு’ என்ற வார இதழ்களை பதிவுச் செய்யும் செய்திகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் ‘குடி அரசு’ இதழ் தொடக்கமும், சுயமரியாதை இயக்கம் தொடக்கமாக அமைகிறது.
முதல் அத்தியாயத்திலிருந்து பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடங்கினாலும் தமிழகத்தில் கல்வி அறிவு பெறாத மக்களின் அரசியல் உணர்வை அவரால் காங்கிரஸ் என்னும் பேரியக்கத்தின் லட்சியத்திற்காக ‘சென்னை ராஜதானிக்’ கழகத்தின் உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கக் கூடாதென்பதற்காக அவற்றை வெட்டி வீழ்த்தியும், தன்னுடைய மனைவி நாகம்மையும், சகோதரி கண்ணம்மாளையும் இந்த இயக்கத்தில் பங்கேற்கச் செய்தார். இதன் மூலம் முதல் பெண் பங்கேற்பாளர்கள் என்று பெருமையை அன்றைக்கு பெற முடிந்ததை அறியலாம்.
அத்தியாயம் மூன்றில் ‘குடிஅரசு’ இதழ் வெளியிட்ட செய்திகளும் அதன் தலையங்கம் அதனுடைய நோக்கங்களையும், இலக்குகளையும் வெளிப்படுத்துகிறது. ‘குடிஅரசு’ ஏட்டில் அன்றைக்கு சமூகத்திற்கு சமத்துவம் ஏற்பட சமூகம், பொருளாதாரம், அரசியல், தனிமனித ஒழுக்கம் முதலியன குறித்து மிகவும் சிறப்பான வரிகளை நூலின் ஆசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது ஆய்வாளர்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. குடியரசு ஏட்டின் நோக்கம், தேசமும் தேசியமும், மக்களிடையே சுயமரியாதை, சோசலிசம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும், அவை அன்பிற்கும் பிரியத்திற்கும் கட்டுப்பட்டவை. உயர்வு, தாழ்வு வித்தியாசங்கள் சமூகத்தில் எரிந்து கொண்டிருக்கும் சாதிமோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அன்றைக்கு குடிஅரசு திட்டம் தீட்டியுள்ளது’’.
எனவே ‘சுயமரியாதை இயக்கம்’ பெரும்பாலும் தந்தை பெரியார் அவர்கள் தனிநபர் முயற்சியின் விளைவாக தோன்றியதையும், பின்பு அணிதிரட்டப்பட்ட அமைப்பாகவும், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது.
அத்தியாயம் நான்கில் சுயமரியாதை மாகாண மாநாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதையும், அதன் தீர்மானங்கள் அரசியல் அமைப்பில் மாபெரும் மாற்றங்களை கொண்டுள்ளன. முதல், இரண்டு, மூன்றாவது மாகாண மாநாடுகள் செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர் போன்ற இடங்களில் பல்வேறு அமைப்பு தலைவர்களையும், கலந்துக் கொண்டு சுயமரியாதை இயக்கம் பலமுனைகளிலிருந்து பிரசார உத்திகளை தமிழ்நாட்டில் கையாண்டுள்ளதை மிகவும் நேர்த்தியாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர்.
தந்தை பெரியார் அவர்கள் ஐரோப்பாவிற்கு சென்றுவந்த பிறகு சுயமரியாதைக்காரர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் போது தோழர் என்று அழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சுயமரியாதை இயக்கம் பிரிட்டிஷ் எதிர்ப்பாக மாறி கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தியாயம் ஐந்தில் சுயமரியாதை இயக்கம் 1934க்கும் 1944க்கும் இடையிலான காலகட்டம் அமைப்பு ரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி, சுயமரியாதை இயக்கத்தின் பணிகளையும், வளர்ச்சியையும் பிரதிபலித்த ஒரு முக்கியமான சகாப்தம் ஆகும். இந்தக் காலத்தில் நீதிக்கட்சியுடனான சுயமரியாதை இயக்கத்தின் கூட்டணி ஓர் இயல்பான கூட்டணி என்றும் அறியமுடிகிறது.
தமிழகத்தின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி என்ற நூலின் ஆங்கில மூலத்தை நூலின் ஆசிரியர் முனைவர் பி.எஸ். சந்திரபாபு அவர்கள் எங்கள் நூலகத்தில், அந்த நூலின் பிரதியை கேட்டார். நாங்கள் நகல் எடுத்து கொடுத்தோம். அப்போது, இந்த நூல் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டுமென்று, பல்வேறு ஆய்வு மாணவ மாணவிகள் கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்போது உங்களுடைய ஆய்வு நூல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அது தமிழில் வெளிவந்தால் பெரியாரை முழுமையாக ஆய்வு செய்ய பயன்படும் என்ற வகையில் நாங்கள் கூறினோம். இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்துள்ள திரு. என். ராமகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை கருத்துகளோடு ஒன்றி பெரியார் வழிநின்று திராவிட மொழியில் மிக அற்புதமாகவும், ஆழமான சிந்தனைகளைக் கொண்டு மிகவும் நேர்த்தியான முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது இந்த ஆய்வு நூலை மீண்டும் எடுத்து படிக்க தூண்டும் வகையில் பெரியாரின் கருத்துகள் ஆழமான வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலை திறனாய்வு செய்யும் போது எனக்கு பலவகையில் ஒற்றுமை உடையதாய் என் மனத்தில் காணப்பெறாத அரியக்கருத்துகள் பதிந்துள்ளன. எனவே இந்நூல் ஆய்வு செய்வதற்கு அரியதோர் விளங்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
எனவே தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிலையை அறிய குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, Revolt உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலிருந்து விரிவான பார்வையை செலுத்தி, பல்வேறு அரியப்படாத கருத்துகளை தொகுத்து கொடுத்துள்ளார்கள்.
இந்த நூலில் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் முழுமையாகவும், எளிமையாகவும் அறிந்துகொள்ள திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் வரலாற்றை ஆய்வு செய்வோர் அறிய வேண்டிய ஆய்வு நூல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|