Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
மறுமலர்ச்சியுகம் - சிட்டிசன் கேன்

வாழ்க்கையின் வியத்தகு விசயமே இயற்கையின் ரகசியம்தான். கடைசி வரை எந்த மனிதனும் இயற்கையின் ரகசியத்தை முழுமையாக அறிந்து கொள்ளமுடியாமலே இறந்தும் போகின்றான். மனிதனின் இந்தத் தோல்விதான் இயற்கைக்கு நிகரான அம்சங்களை கொண்ட கலையை உருவாக்குவதில் அவனைத் தீவிரமாக ஆழ்த்துகிறது. இப்படியான அவனது படைப்பு மனநிலைக்கு இதர கலைகளைக் காட்டிலும் திரைப்படத்துறை அதிக சாத்தியப்பாடுகளையும் வெளியையும் கொண்டிருப்பதால் இறுதியாக எல்லாக் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கும் துறை சினிமாவாக இருக்கிறது. ஆனால் அத்தகைய சினிமாவின் வரலாற்றில் பார்வையாளனின் அனுபவத்தை கடந்து முழுகலை வீச்சுடன் அதன் பல்வேறுவிதமான கலை செயல்பாட்டுகளுக்கு சாத்தியமளித்து உருவான திரைப்படங்களுள் மிகச்சிறந்த படம் என்று ஒன்றை குறிப்பிடுவோமானால் அப்படம் 1941ல் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டிசன் கேன்

இன்றும் உலகின் தலைசிறந்தபடம் எது என்று விமர்சகர்களிடம் கேட்டால் பத்துக்கு எட்டு பேர் குறிப்பிடும் திரைப்படம் 'சிட்டிசன் கேன்’ ஆக இருக்கிறது.திரைப்படக் கல்லூரி மாணவர்கள், விமர்சகர்கள், அறிஞர்கள் ஆகியோரை இன்றுவரை அதிக மயக்கத்திலாழ்த்தும் சொல் 'சிட்டிசன் கேன்’.அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த நூறுபடங்களின் பட்டியலில் முதலாவது படமாக தேர்ந்தெடுத்திருப்பதும் சிட்டிசன் கேனைத்தான். 1941ல் வெளியான படம் கிட்டதட்ட 70 வருடங்களை கடந்த பிறகும் இன்றும் அதற்கு பிறகு வந்த அனைத்துப் படங்களையும் பின்னுக்குத்தள்ளி காலத்தின் பரிசுகளாக கிடைத்திருக்கும் தொழில் நுட்பங்களையும் உதாசீனப்படுத்தியிருக்கிறதென்றால் அப்படி என்னச் சிறப்பு அந்தப் படத்தில் இருக்க முடியும்.

சாதாரண கதை

கதை என்னமோ சாதாரணமானதுதான் அமெரிக்காவில் கொடிகட்டிப்பறந்த பத்திரிகையுலக ஜம்பவான் சார்லஸ் ஃபோஸ்டர் கேன் என்பவர் இறக்கும் தருவாயில் 'ரோஸ்பட்' ஒற்றைச் சொல்லை பிரிந்த உதடுகளின் வழியே உதிர்க்கிறார். அந்த சொல்லில் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக உணரும் ஒரு பத்திரிகையாளன் அதனைத்தேடி பலரிடம் அலைகிறான்.அவர்கள் மூலமாக சார்லஸ் போஸ்டர் கேனின் வாழ்க்கை பல ப்ளேஷ்பாக்குகளின் மூலம் காண்பிக்கபடுகிறது. இறுதிவரை ரோஸ்பட் என்ற அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அந்த நிருபரால் முழுவதுமாக அறிந்துகொள்ளப்படமுடியாத நிலையில் கேமரா கேனின் வீட்டுக்குள் பழைய பொருட்கள் எரிக்கப்படும் இடத்தை நோக்கி கேமரா நுழைகிறது அங்கே எரியும் மரப்பொருட்களின் நடுவில் சுவாலைகளுக்கு நடுவே ஒரு மரப்பொருளின் மேல் நாம் காணும் எழுத்துக்கள் ரோஸ்பட்.. படம் அத்தோடு ஒரு புதிரை நம் மனதில் உண்டாக்கிவிட்டு நிறைவு பெறுகிறது. வெறுமனே சில வரிகளுக்குள் இந்தப்படத்தின் கதையை இப்படி எழுதிவிட முடிந்தாலும் இப்படத்தின் திரைக்கதையை குறித்தும் திரைப்பட உருவாக்கமும் குறித்தும் எழுதப்போனால் அது ஆயிரம் பக்கங்களையும் தாண்டி எழுத வேண்டியதிருக்கும். அசாதாரணமான திரைக்கதை ஒரு தடுப்புவேலியில் ' யாரும் இங்கே அத்துமீறக்கூடாது 'என்ற உத்தரவு. அதனை கேமராவின் மூலம் மீறியபடி படத்தின் முதல் ஷாட் துவங்கி ஒருபங்களாவினுள் நுழைகிறது அங்கே முன்பே குறிப்பிட்டபடி நாயகன் கேன் மரணத்தருவாயில் படுத்திருக்கும் காட்சி. ரோஸ்பட் என்று நாயகனின் உதடு முணுமுணுப்பது க்ளோசப்பில்.தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடத்திற்கு விறுவிறுப்பான பல ஷாட்டுகளின் தொகுப்புடன் ஒரு செய்திப்படம்.... அதில் சிறுவயதில் தந்தையை பிரிந்து தாயுடன் வறுமைக்கு ஆளாகும் சார்லஸ்கேன் தன் மேல் காலம் திணித்த தடைகளையும் இன்னல்களையும் எப்படி அடித்து நொறுக்கி பத்திரிகை உலக ராட்சசனாகவும் கோடீஸ்வரனாகவும் வளர்ந்தான் என்பதை அது விவரிக்கிறது. படத்தை பார்க்கும் தயரிப்பாளர் படத்தில் ஏதோ ஒரு முக்கியக் குறை இருப்பதாகவும் சார்லஸ் கேன் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டும்படியும் கூற நிருபர் ஒருவன் அப்பணியில் ஈடுபடத்துவங்குகிறான். முதலாவதாக அவன் சந்திப்பது சார்லஸ் கேனினுடைய இரண்டாவது மனைவி வசனை. முழுவதும் குடிகாரியாக மாறிப்போன வசன் முதலில் அவனை விரட்டியடிக்கிறாள்.அதன்பிறகு இரண்டவதாக சார்லஸ¤ன் கார்டியன் ஒருவரை அந்நிருபர் சந்திக்க அவர்மூலம் சிறுவயதில் சார்லஸ் தன் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து செல்லுகின்ற காட்சி காண்பிக்கபடுகிறது. அதனைத் தொடர்ந்து கேன் அதிர்ஷ்டத்தின் மூலம் பணக்காரனாகியதையும், தொடர்ந்து பத்திரகையுலகில் நுழைந்து போட்டி பத்திரிகையின் நிருபர்களை தந்திரமாக தன் வசம் இழுத்து அழிக்க முடியாத அசுரனாக தொழிலில் பெருவளர்ச்சியடைந்ததையும் முதல் திருமணத்தை செய்ததையும் அவரது பத்திரிகை பணியாளர் செய்தியாளனிடம் சொல்வதன் மூலமாக நாம் அறிந்துகொள்கிறோம்

அதன் பின் இரண்டாவது மனைவியான வசனை ஒரு மழைநாளில் சாலையோரம் சந்திக்கிறார் மிஸ்டர் கேன். அன்று இரவே இருவரும் காதல்வசப்பட்டு ரகசிய திருமணம் செய்துகொள்ள கேனின் அழிவுப்படலம் ஆரம்பமாகிறது. அவரது மிதமிஞ்சிய அதிகாரவெறி நியுயார்க் நகர கவர்னர் தேர்தலுக்கு அவரை போட்டியிடவைத்து தலைக்குப்புற விழவைக்கிறது. ஆனாலும் அவரால் தன்னுடைய ஆணவத்திலிருந்து முழுவதுமாக தன்னை இறக்கிக்கொள்ள முடியவில்லை. தகுதியான குரல் வளமில்லாத தன் புது மனைவியை பாடகியாக்க தானே ஓர் ஓபரா அரங்கினை கட்டி பாட வைக்கிறார். மறுநாள் தனது பத்திரிகையில் அதனை பாராட்டி எழுதாத ஊழியனை வேலையைவிட்டே விரட்டுகிறார். அதேசமயம் இதரப் பத்திரிகைகளின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி வசன் பெரும் குடிகாரியாகிறாள். இந்தத் தொடர் தோல்விகளால் சுருங்கி போகும் தம்பதியர் இருவரும் ஒரு பிரம்மாண்ட மாளிகைகட்டி அதில் யாருமற்ற தனிமையில் வசித்துவருகின்றனர்.ஒரு கட்டத்தில் தான் மிகவும் நேசித்த மனைவியும் பிரிந்துபோய்விட தனிமையில் பரிதாபமாக வாழும் கேன் கடைசியில் அனாதரவாக ரோஸ்பட் எனும் ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு இறந்துப் போகிறார்.

மேற்சொன்ன சம்பவங்கள் அவரது ஊழியர்கள் மற்றும் இரண்டாவது மனைவி செய்தியாளனிடம் சொல்வதன் மூலமாக நமக்கு காட்சிகளாக விவரிக்கப்படுகிறது. என்றாலும் ரோஸ்பட் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை கடைசிவரை அந்த செய்தியாளனால் பெறமுடியவில்லை.. இறுதியில் நெருப்புகூட்டில் வைத்து எரிக்கப்படும் மரப்பொருள் ஒன்றில் ரோஸ்பட் என எழுதப்பட்டிருக்கிறது. அப்பொருள் அவன் சிறுவயதில் அவனது தாயாரால் பரிசளிக்கப்பட்ட ஒரு விளையாட்டு பொருள்.. ஒட்டு மொத்தமாக ஒருவன் தன் வாழ்க்கையில் எதனை மகிழ்ச்சியானதாக கருதுகிறானோ அதுமட்டுமேதான் கடைசி வரை நினைவில் எஞ்சி நிற்கிறது அவ்வகையில் பார்க்கும் போது சார்லஸ் கேனின் வாழ்க்கையில் எஞ்சியிருந்தது எல்லாம் அந்த சிறுவயது நாட்கள் மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாக விமர்சகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில அந்தக் கடைசி காட்சி மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்வையாளனது அனுமானத்துக்கே விட்டுவிடுகிறார். இப்படத்தை குறைந்தது இரண்டாவது முறையாக பார்க்கிறபோதுதான் நான் மேற்சொன்ன முழுகதையுமே ஒரு பார்வையாளனுக்கு புரியவரும். சர்ச்சை அதே போல ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் நாம் வியப்புறும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவம் பெற்றிருந்தது இப்படத்தின் சிறப்புகளுக்கு ஒரு முக்கியக் காரணம். இந்தத் திரைக்கதை வடிவம்தான் பிற்பாடு வந்த அகிரகுரோசாவின் ரோஷாமான் உட்பட பல படங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த இப்படத்தின் திரைக்கதை யார் எழுதியது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை இருந்துவருகின்றன. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கம் இயக்குனரான ஜோசப் மாணிக்வெச்சின் சகோதர் ஹெர்மன் மாணிக்வெச்தான் படத்தின் முழுதிரைக்கதையையும் எழுதியது என்றும் இயக்குனரான ஆர்சன் வெல்ஸ் அதில் துளிகூட பங்களிக்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பில் படம் முழுக்க முழுக்க ஆர்சன் வெல்ஸ¤ன் வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.இப்படத்தில்வரும் கதாநாயகனை போலத்தான் சிறுவயதில் இவரும் தன்அம்மாவை இழந்து பரிதவித்தார். பதினைந்தாவது வயதில் அதேபோல் அப்பாவையும் இழந்தார். கதாபாத்திரம் குணாதிசயம் ஆகியவற்றில் கேன் ஆர்சன் வெல்ஸையே பிரதிபலிக்கிறார் ஆகவே இப்படத்தின் திரைக்கதை அவருக்கே முழுவதும் உரித்தானது. வெறுமனே ரெண்டு வசனம் எழுதிக்கேட்க மாணிக்வெச்சிடம் போக வந்ததால் ஏற்பட்ட வினை இது, என இன்னொருதரப்பும் கூறுகிறது. இது குறித்து ஹாலிவுட்டில் 1996ல் ஒரு டாக்குமெண்டரிபடமே வந்திருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

என்னதான் படத்தின் திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் மேல் இத்தனை சந்தேகம் பலருக்கும் எழுந்தாலும் ஒரு விஷயம் அவர்களது அத்தனை பேருடைய வாயையும் அடைத்து விடும் .அது படத்தில் பயன்படுத்தபட்டிருக்கும் தொழில்நுட்பம். கதையை மிகவும் நேசித்த ஓர் இயக்குனருக்கு மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் சாத்தியபடும் என்ற காரணத்தால் இந்த சர்ச்சையில் பெரும்பாலானோரின் ஓட்டு இயக்குனர் ஆர்சன் வெல்ஸுக்கு சாதகமாகவே விழுகிறது.அந்த அளவிற்கு இப்படத்தின் திரைக்கதையை போலவே தொழில்நுட்பக் கூறுகளும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொழில் நுட்பம்

திரைப்படத்தை முழுமையாக கற்கும் மாணவன் ஒருவன் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஆராய்சி பண்ணினால் போதும் நிச்சயம் அவன் திரைப்படத்துறையில் மேதையாகிவிடமுடியும் அந்த அளவிற்கு விவரித்து எழுதுவதற்கு படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் பல அம்சங்கள் கொட்டிகிடக்கின்றன. இப்படத்தின் மிககுறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் டீப் ஃபோகஸ் லென்ஸ்கள். படத்தளத்தில் கேமரா குவிமையம் கொள்ளும் பாத்திரம் அல்லது பொருள் ஆகியவற்றின் முன்னும் பின்னுமாக உள்ள சகலமும் துல்லியமாக பதிவாக்கம் பெற்று தந்த விதத்தில் இந்த டீப் ஃபோகஸ் லென்ஸுகளின் பங்களிப்பு அளப்பரியது. மட்டுமல்லாமல் படத்தின் கேமரா கோணங்கள் மற்றும் நகர்வு ஆகியவை தஞ்சை பெரியகோயில் போன்ற மகத்தான கலைப்படைப்புகளின் போது ஒரு கலைஞன் படும் மெத்தனங்களுக்கு நிகரான கடப்பாடும்,உழைப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவை. அதிலும் குறிப்பாக கேன் தானும் மனைவியும் தனித்து வாழும் பங்களா உள்ளறைகாட்சிகளில் ஒளி கட்டமைவும், காமராநகர்வும் கோணங்களும் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடுகின்றன. இப்படத்தின் அதி முக்கியமான இன்னொரு கதாநாயகன் எனும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் க்ரேக் டொனால்டின் பங்கு வியக்கும் வண்ணத்தில் அமைந்திருந்தது.

படத்தின் இறுதிக்காட்சியில் கேன் பங்களாவில் அவர் சேர்த்துவைத்த சொத்துக்கள் அனைத்தும் வெற்று பொம்மைகளாக நின்று கொண்டிருக்க பத்திரிகையாளர்கள் வெளியேறுகிற காட்சியின் போது மெல்ல அவர்களிடமிருந்து விலகி பின் நகர்ந்து வரும் கேமரா அப்படியே கூரை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்ப்பது போன்ற பரந்த காட்சி ஆகச்சிறந்த இலக்கியபடைப்புகளுக்கு ஈடானது. ஒளிப்பதிவை போலவே படத்தில் படத்தொகுப்பு மற்றும அரங்க நிர்மானம் ஆகிய இரண்டும் இப்படத்திற்கு இரண்டு தேர்ந்த கவசங்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் செய்தி படத்தில் காணப்படும் உயிர்துடிப்பு மிக்க எடிட்டிங் மற்றும் ஒன்று நீங்கிய கையோடுமற்றொன்று வரும் வைப, போன்ற பல உத்திகள் இன்றைக்கு உருவாக்கப்படும் நவீன படங்களுக்கும் சவால்விடும் கலைநயமும் தொழில்நேர்த்தியும் கொண்டிருப்பவை. படத்தின் முழு திரைக்கதையுமே நினைவலைகளின் மூலமாக தொகுப்பாக சொல்லப்படுகிற காரணத்தினால் இயல்பாகவே படத்தொகுப்பின் மேதமையை படம் முழுவதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தனி பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ஒரு காட்சியில் கேன் தன் மனைவியை காணவரும் சந்தர்ப்பத்தில் விஸ்தீரமான் ஹால் ஒன்று காண்பிக்கப்படுகிறது அதன் மறுகோடியில் தரையில் அமர்ந்திருக்கும் மனைவியை நோக்கி கேன் இறங்கி வருவார். அரங்கில் அப்போது பலதரப்பட்ட சிலைகள் காணப்படும் அவற்றில் தற்போது நம் இந்திய அரசின் சின்னமாக இருக்கும் கவிழ்ந்த தாமரை மீதமர்ந்திருக்கும் மூன்று சிங்கங்கள் கொண்ட அந்தச் சின்னம் ஒரு பிரம்மாண்ட சிலையாக நின்று கொண்டிருக்கும். இந்தச் சிலையை இந்திய அரசாங்கத்தின் சின்னமாக அங்கீகாரம் செய்த இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டதே 1946ல் தான். அதற்கு முன்பே 1941ல் இச்சிலை வடிவம் இப்படத்தில் பிரம்மாண்டமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. பணத்தை கடந்து வெற்று கலைபொருள்களை உலகமெங்குமிருந்தும் சேகரித்துவைக்க துடிக்கும் ஒரு பண முதலையின் தடிதனத்தை காண்பிக்க இயக்குனர் எவ்வளவு நேரம் மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது. விருது வெகுமதி இத்தனை சிறப்பு பெற்ற இத்திரைப்படம் அன்று வெளியான காலத்தில் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. ஆஸ்கார் விருதுக்கு பல துறைகளில் பரிந்துரைக்கப்படிருந்தும் திரைக்கதைகான ஒரே ஒரு விருது மட்டுமே இப்படத்திற்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஏறக்குறைய எவராலும் பொருட்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழலில் 20 வருடங்கள் கழித்து பிரான்சிலிருந்து ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நியூ வேவ் என அங்கு எழுந்த புதிய அலையின் கர்த்தாவான விமர்சகர் ஆந்த்ரே பஸ¤ன், மற்றும் இயக்குனர்கள் ட் ரூபோட்,கொடார்ட், போன்றவர்கள் கதையாசிரியர் திரைக்கதையாசிரியர் ஆகியோரைக் கடந்து ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனருக்கு மட்டுமே படைப்புரிமை பெற்றது என்ற கொள்கையை முதன்முறையாக வலியுறுத்தினர். அதன்படி அவர்கள் இந்தப்படத்தை பார்த்து விட்டு இதுதான் அசல் கலை சினிமா என தலையில் தூக்கிவைத்து கொண்டாட அப்போது துவங்கியது சிட்டிசன் கேனின் இரண்டாவது இன்னிங்ஸ். ஆர்ஸன் வெல்ஸ் படத்தின் இயக்குனரான ஆர்சன் வெல்ஸுக்கு சிட்டிஸன் கேன் ஒரு முதல்படம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும். அது மட்டுமல்லாமல் அவரே அப்படத்தில் நாயகன் சார்லஸ் கேன் ஆகவும் நடித்து ஆகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர்மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அத்தனை பேரும் புதுமுகங்கள் என்பதுதான் இப்படத்தின் முக்கியச்சேதி. 1915ல் பிறந்த ஆர்சன்வெல்ஸ் சிறுவயது முதலே கலையின்மேல் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார் என்பதைவிட வெறிபிடித்தலைபவராக இருந்தார் என்பதுதான் முற்று முழுக்க சரி.. தன் பதினைந்தாவது வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடிக்கத்துவங்கிய ஆர்சன் வெல்ஸ் படிப்படியாக வளர்ந்து அப்போது பிரபலமாகி வந்த வானொலிநிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராக இருந்து புகழ்பெற்றார்.அந்தப் புகழ் அவரை ஆர்.கெ.ஒ ஸ்டுடியோவில் இயக்குனராக அழைக்கும் அளவிற்கு வேலை செய்தது. தன் 26ஆம் வயதில் சிட்டிசன் கேன் எனும் அசாத்தியமான படத்தை இயக்கி நடித்து வாழ்வில் அழியாப் புகழைப் பெற்றார். இப்படத்தில் வரும் மைய கதாபாத்திரத்தின் நல்ல பகுதிகளுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு காரணமென்றாலும் கதாபாத்திரத்தின் மோசமான குணங்களை படத்தின் தயாரிப்பாளரான ஹாரவெஸ்டையே அதிகம் ஒத்திருப்பதாக அனைவரும் கூறினர். இரண்டாவது படமான ‘மாக்னிபிஷ¤யண்ட் ஆம்பர்சன்’ அவரது திறமைக்கு கட்டியம்கூறினாலும் ஆர்சனுக்கு அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதன்பிறகு ஐரோப்ப ஜப்பான் என அலைந்த வெல்ஸ் சிலபடங்களை இயக்கி நடித்திருந்தாலும் அதில் எந்தப் படமும் சிட்டிசன் கேன் அடிந்த கலையின் உச்சத்தில் ஒரு துளியை கூட எட்ட முடியவில்லை. அக்டோபர் 11 1985ல் அமெரிக்க நாளிதழ்களில் நடிகர் யூல் பிரின்னர் இறந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான போது உடன் அருகில் மற்றொரு இறப்புச் செய்தியும் வெளியானது தன் எழுபதாவது வயதில் சிட்டிசன் கேன் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் மரணமடைந்தார் என்பதுதான் அந்தச் செய்தி



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com