Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
தன்னிறைவு என்றால்,,, மக்கள் நன்றாக சாப்பிட்டார்களா?
பேரா. வெங்கடேஷ் பா. ஆத்ரேயா

இவர் இந்திய சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய்வுகளின் வழியே மக்களின் கோரிக்கையை உருவாக்கியவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு நூல்களையும் பல பொருளாதார நூல்களையும் எழுதியவர். அவரை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம்.

இன்றைக்குக்கூட பொருளாதாரத்தை விரும்பிப் படிக்கிறவர்கள் குறைவு. ஆனால் பொறியியல் பட்டதாரியான நீங்கள் பொருளாதாரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் 1964_ல் ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடிச்சேன். நான் பொருளாதாரம் படிப்பதற்கு ஒரு வகையிலே என்னோட குடும்பப் பின்னணியும் ஒரு காரணமாக இருந்தது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்கிற கிராமத்திலேதான் நான் பிறந்தேன். எங்கப்பா அந்த ஊர் ஸ்கூலில் ஹெட்மாஸ்ட்ராக இருந்தார். அந்தக் குடும்பத்தில் நான் பதினான்காவது குழந்தை. நான் பிறந்தப்ப இரண்டு, மூன்று குழந்தைகள் இறந்து போயிட்டாங்க. நான் பிறந்து ஒரு வருடம் கழித்து எங்கப்பா இறந்து போயிட்டார். குடும்பத்தில் நிலபுலன்கள், சொத்துக்கள் என்று எதுவுமில்லை. ஆனால் ஊரில் ஓர் அந்தஸ்து இருந்துச்சு. எங்கம்மாவுக்கு பெரிய படிப்பெல்லாம் கிடையாது. குடும்பத்தில் இருந்த ஏழ்மையும் அதனால் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோனுச்சு. ஆனால் அறிவுப்பூர்வமா இல்லை. கஷ்டப்படுகிற குடும்பங்களுக்காக பொருளாதாரம் படிச்சு, திட்டக்குழு எல்லாம் சென்று ஏழ்மையை குறைக்க வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதெல்லாம் ஒரு வரையறைக்கு உட்பட்ட தத்துவார்த்தம் எதுவும் இல்லாமல் ஒரு பொதுபுத்தி மனநிலையிலேயே பொருளாதாரம் படிக்கப் போனேன்.

Prof. Venkatesh பொருளாதாரம் எங்கு படித்தீர்கள்?

அமெரிக்காவில் பொருளாதார ஆய்வு படிப்புக்காகச் சென்ற போதுதான் எனக்குள் மாற்றம் வந்தது. புத்தகப் புழுவாக, மைலாப்பூரில் இருந்து செல்லுகிற ஒரு பையனாக இருந்தேன். 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விஸ்காசின் பல்கலைக்கழகம் போய் சேர்ந்தேன். இந்த இடம் சிக்காகோவிலிருந்து 120 மைல் தூரத்தில் உள்ளது. அந்த நகரத்தை மேடிஸோன் என்று அழைப்பார்கள். அமெரிக்கா, வியட்நாம் மீது யுத்தம் தொடுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த போர் எதிர்ப்புக்கு ஒரு காரணம் பல அமெரிக்க மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தப் பிறகு இராணுவத்திற்கு அழைக்கப்படுவது. மற்றொரு காரணம் அமெரிக்கா ஏன் வியட்நாமில் குண்டு போட வேண்டும்? மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியெல்லாம் பேசப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதைபற்றி சிந்தனையெல்லாம் எனக்கு கிடையாது. இந்த மாதிரி கேள்விகளை கேட்பதற்கு நமது கல்வி கற்றுத்தரவில்லை. நம்முடைய கல்வி என்பது கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கற்றுக் கொடுத்திருக்கிறது.

அமெரிக்கா வசதியானது. லிங்கன் போன்ற தலைவர்கள் அடிமை விலங்கை ஒடித்தனர். என்றெல்லாம் கேள்விப்பட்டுதான் அமெரிக்காவிற்கு போகிறோம். 1968ஆம் ஆண்டு சிக்காகோவில் நடந்த ஜனநாயகக்கட்சி நடத்திய அரசியல் மாநாட்டில் இடதுசாரி தீவிரவாதிகள் கலவரம் செய்தார்கள். அவர்களை கைது செய்து சிக்காகோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஜீலியஸ் ஹாப் என்ற வயதான, பிற்போக்குத்தனமான நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். தினசரி அந்த நீதிபதி கேட்கும் கேள்விகளும், அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் பதில்களும் நாம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள் என்ன?

அந்தக் காலகட்டத்தில் கருப்பு புலிகள் என்ற இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தின் இரண்டு முக்கியத் தலைவர்களை காவல்துறை சுட்டுக் கொன்றது. இதெல்லாம் என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாலும் நாம் நினைத்த மாதிரி அமெரிக்கா இல்லை என்பது மட்டும் புரிந்தது.

1969 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா போனேன். அங்கு நவம்பரில் Teaching நடந்தது. Teaching என்பது சமகாலத்தில் நடக்கும் பிரச்சனைகளை விளக்குவது. வியட்நாமைப் பற்றி ஒரு Teaching நடந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்ளச் சென்றேன். “வியட்நாம் அமெரிக்கா மீது குண்டு போடலையே. அப்புறம் ஏன் அமெரிக்கா வியட்நாம் மீது குண்டு போடுகிறது’’ என்று கேட்கப்பட்டது. இது மாதிரியான கேள்விகள் ஏன் நமக்கு கேட்கத் தோன்றவில்லை என்று தோன்றியது.

அங்கு பல்கலைக்கழக அனுபவங்கள் எப்படி இருந்தன?

பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் மாணவர்கள் சிலபேர் அங்கு வருமானத்திற்காக விரிவுரையாளராக வேலை செய்வாங்க. இந்த விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடிகிட்டு இருந்தாங்க. அந்தப் போராட்டம் நடந்தது ஒரு மோசமான பனிக்காலத்தில். அப்போது குளிர் _40கு, _30கு என்று இருக்கும். அந்தக் குளிரிலும் அவர்கள் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். நாம் பல்கலைக்கழகத்திற்குள் சென்றாலும் தடுக்கமாட்டார்கள். இவர்களின் போராட்டத்தைப் பார்த்து ஏன் என்று கேட்டு தெரிந்து கொண்டு அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

நான் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக சென்றேன். ஆனால் பாடத்திட்டங்களில் மார்க்ஸ் எல்லாம் கிடையாது.

1970களில் நான் மார்க்ஸை படிக்கத் தொடங்கினேன். அவருடைய நூல்களில் நான் முதலில் படித்தது மூலதனம். அதற்கு காரணம் அங்கு ஒருத்தருடைய தலைமையில் மூலதனத்தை படிப்பதும், விவாதிப்பதாகவும் இருந்தது. அங்குதான் எனக்கு ஒரு புதிய பார்வை கிடைத்தது.

அங்குள்ள பாடத்தில் முதலாளித்துவ பொருளாதார முறைகள் பற்றியும், சந்தைப் பொருளாதாரம் பற்றியும்தான் இருந்தது. இதில் திருப்தி ஏற்படாத போது, ஒரு மாற்றை தேட வேண்டும். அந்தத் தேடலுக்கு அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இடமில்லை.

Prof. Venkatesh பல்கலைக் கழகங்களில் மார்க்சியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கூட இடமில்லையா?

அங்கொன்றும், இங்கொன்றுமாய் மார்க்சிய சிந்தனையுள்ள பேராசிரியர்கள் இருப்பார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமையே இந்த மாதிரியான சிறிய போக்குகளை அனுமதிப்பதுதான். இதை அனுமதிப்பதன் மூலம் ஜனநாயகம், சுதந்திரம் எங்கள் நாட்டில் இருக்கிறது என்று கூறமுடியும். சோவியத் யூனியன் மாதிரி இல்லை என்று சொல்வதற்காக இதை அனுமதித்தார்கள். மார்க்சிய சிந்தனையுள்ள பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் நிரந்தர வேலை வாய்ப்புகள் இல்லை.

எனக்குத் தெரிந்த அங்குள்ள மார்க்சியப் பொருளாதார அறிஞர்கள் பால் பெரக்மான் பால் ஸ்வீஸ்கி ஆகியோர் Monopoly Capital என்ற புத்தகத்தை எழுதி உள்ளனர். ஸ்வீஸ்கி Monthly Review எடிட்டராக இருந்தவர். அவர் சமீபத்தில்தான் இறந்து போனார். Theory of Capital என்ற புத்தகத்தையும் எழுதியவர். இந்த இரண்டு பேரையும் அங்கு கடுமையாகத் தாக்கினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மெகார்த்தி என்பவர் இவர்கள் மீது வழக்கு போட்டார். பிறகு ஸ்வீஸ்கி ஹார்வர்டு (Harvard) பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அங்குள்ள பல்கலைக் கழகம் உங்களை எப்படி மதிப்பீடு செய்தது?

நான் படித்த துறையில் நான் முதல் மாணவன். மற்ற மாணவர்களை விட ஒரு படி உயர்வாகவே இருந்தேன். எனக்கு உதவித்தொகை மட்டுமே கிடைத்தது. அதனால் வெளியில் சுற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே எப்போதும் படிப்பு படிப்பு என்றுதான் இருந்தேன். அதனால் எனது துறையில் என் மீது மிகப் பெரிய கனவை வைத்திருந்தார்கள். Mathamatical Economics போன்ற ஏதாவது ஒரு பொருளாதார துறையில் பெரிய அறிவு ஜீவியாக வர வேண்டும் என்று நினைத்தார்கள். நான் மார்க்ஸ் புத்தகத்தை படித்து பாதை மாறியது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

1971_72 காலக்கட்டங்கள் போர் எதிர்ப்பு அங்கு உச்சகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் பத்துபேர் கொண்ட குழு அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு Critical Capitalism என்ற ஒரு பாடத்தை தொடர் வகுப்பாக நடத்தினோம். அந்த வகுப்புகளில் ஐநூறு பேர் கலந்து கொண்டார்கள். நான் உபரிமதிப்பு பற்றி வகுப்பு எடுத்தேன். இதற்கு பல்கலைக்கழகத்தில் அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது.

நீங்கள் இடதுசாரி அரசியல் பக்கம் எப்போது வந்தீர்கள்?

அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமத்துவத்திற்கான இயக்கம், மகளிருக்கான இயக்கம், மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் போராட்ட இயக்கம் நடந்து கொண்டிருந்தது. 71ல் அலேண்டே சிலியில் வெற்றிப் பெறுகிறார். 73_ல் அவர் கொலை செய்யப்படுகிறார். 74_ல் போர்ச்சுகளில் இராணுவ அதிகாரிகளின் கலகம் வருகிறது. அதனால் ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பி, அங்கோலா விடுதலை அடைகிறது. ஜிம்பாவே விடுதலை ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. கியூபா வலுவான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சர்வதேச அளவில் அமெரிக்கா அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.

அப்போது வியட்நாம் வெற்றிப் பெறப் போவதாக செய்தி வந்தது. நான் பாஸ்டன் நகரில் இருந்தேன். இதெல்லாம் மறக்க முடியாத என்னுடைய நினைவுகள்.

மார்க்ஸை படித்தவுடன் லெனினை படித்தேன். பிறகு மாவோவை படித்தேன். சிமன் டெக்னோவின் செகெண்ட் செக்ஸ்ங்கிற புத்தகத்தைப் படித்தேன். என்னிடமுள்ள பிற்போக்குத்தனத்தை எல்லாம் அந்தப் புத்தகம் உடைத்தெறிந்தது. நான் போகும்போது புத்தகப் புழுவாக சென்றேன். ஆனால் அரசியல் இல்லாதவனாக இருந்தேன். அமெரிக்காவிலிருந்து வரும்போது அரசியல் உணர்வு பெற்றவனாக வந்தேன்.

எனக்கு அரசியல் உணர்வு வந்தபிறகு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை படித்தேன். கம்யூனிஸ்ட்காரனாக ஆகிவிட்டேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. லெனின் எழுதிய இடதுசாரி திருத்தல் வாதம், வலதுசாரி திருத்தல்வாதம் ஆகியவற்றை படித்ததால் இரண்டையும் நிராகிக்கிற தன்மை எனக்கு இயல்பாகவே வந்து விட்டது. இந்தக் கட்டத்தில் CPI, CPI(M), CPI(ML) ஆகிய கட்சிகளின் திட்டங்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து படித்தேன். இதில் CPI(M) திட்டம் சரியானது என்ற முடிவுக்கு வந்தேன். இந்தியா வந்தவுடன் அதிகபட்சமாக ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும். அதன்பிறகு கட்சியில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அவசர (Emergency) நிலை தொடர்ந்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது.

அன்றைக்கு ஒரு கிராமத்தில் தமிழ்வழியில் கல்வி பயின்ற நீங்கள் இவ்வளவு உயரத்தை அடைந்திருக் கிறீர்கள். ஆனால் இன்று தமிழ்வழிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதே?

பயிற்றுவிக்கும் மொழியாக தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தச் சமரசமும் இல்லை. ஆனால் ஆங்கிலத்தை ஒரு மொழியாக, உருப்படியாக கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு பாடங்களை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து, பாடமும் புரியாமல், ஆங்கில மொழியும் புரியாமல் மாணவர்களை குட்டிச்சுவராக்குகிறார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான (சமச்சீர்) கல்வி என்பதை கொண்டு வர வேண்டும். இதில் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு பல மாதிரிகள் (option) இருப்பதால் சிக்கல்கள் வருகிறது. பொதுப்பள்ளிக்கூடம் என்பது ஒன்று மட்டுமே சரியாக இருக்க முடியும். தமிழ் பற்றி அதிகமாக பேசுபவர்கள்தான் தெருவுக்கு தெரு நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி கொடுக்கிறார்கள்.

பொருளாதாரம் பற்றிய கோட்பாடுகள் என்னவாக இருக்கிறது?

பொருளாதாரம் என்பது பெரிய கலை. மார்க்சிய கண்ணோட்டத்தில் பொருளாதாரத்தை தனியா பிரிச்சு பார்ப்பது இல்லை. சமுதாய வாழ்க்கை என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. கற்பனையெல்லாம் இல்லை. முதலாளித்துவ பொருளாதாரம் என்பது தனிநபரில் ஆரம்பிக்கிறது. தனி நபர் ஒருவர் அவருடைய நுகர்வை தேர்வு செய்வார். அந்த நுகர்வு என்பது தேர்ந்தெடுக்கும் மனிதரின் நிறைவை பொறுத்தது. அந்த நிறைவு என்பது விலையைப் பொறுத்தது. இந்த விலை என்பது அவரின் வருமானத்தைப் பொறுத்தது என்று ஆரம்பிக்கிறது. ஒரு தொழிற்சாலை என்பது லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. லாபம் என்பது உற்பத்தியை சார்ந்தது. இதற்காக நுண் பொருளியலை (Micro Economics) உருவாக்குகிறார்கள்.

மார்க்சியம் மனித சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகப் பார்க்கிறது. மனித சமுதாயத்தின் முக்கியத்துவம் என்ன? மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மனிதர்கள் தம்முடைய தேவைக்கு உற்பத்தி செய்கிறார்கள். இந்த உற்பத்தி என்பது தனி நபர்கள் சார்ந்தது அல்ல. கூட்டு முயற்சியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு மலைமேல் இருக்கும் ஒரு குளத்தில் நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்றால் மீன் பிடிக்கும் கருவிகளை உற்பத்தி செய்வது போன்றவைகள் கூட்டு உழைப்புதான். வரலாற்றில் தனிநபர்கள் உற்பத்தி என்பது கிடையவே கிடையாது. உற்பத்தி என்பது இயற்கையை மனித உழைப்பின் மூலம் மாற்றுவது. அப்படி இயற்கையை மாற்றும்போது மனிதர்களும் மாற வேண்டும். ஒவ்வொரு விஷயமும் மாறும்போது மனிதர்களும் மாறும் போதும் உற்பத்தி சக்திகளும் மாறுகிறது. சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவு என்ன? இந்தச் சமுதாயம் இயற்கை மீது எந்த அளவிற்கு ஆளுமை கொண்டுள்ளது? இதைத்தான் உற்பத்தி சக்திகள் (Productive Force) என்று சொல்கிறோம். ஒரு சமூகத்தின் வழியே நடக்கும் உற்பத்தியில் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பங்கு இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள மக்களை உற்பத்தியின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியும். சில மனிதர்கள் நிலங்கள் வைத்திருக்கலாம். சில மனிதர்கள் ஆலைகள் வைத்திருக்கலாம். சில மனிதர்கள் உழைப்பாளிகளாக இருக்கலாம். இப்படி பலதரப்பட்ட மக்கள் சேர்ந்த உற்பத்தியில் பல்வேறு மக்களுக்கு பங்கு இருக்கிறது. ஆனால் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான பாத்திரம் (Role) இல்லை. இவர்கள் செய்கிற வேலையை வைத்து அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என் நிர்ணயிக்க முடியும்.

மூலதனத்தில் உபரி என்பது எப்படி உருவாகிறது?

மனிதகுல வரலாற்றில் ஆரம்பகாலத்தில் எல்லோருமே வேலை செய்தால்தான் பிழைக்க முடியும்னு இருந்துச்சு. வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், சிறு குழந்தைகள் நீங்கலாக எல்லோரும் பாடுபட வேண்டும் என்று ஒரு கட்டாயம் இருந்தது. அப்போது வேட்டையாடுவதே பிரதான தொழிலாகவும் இருந்தது. வேட்டையில் கிடைக்கும் பொருட்கள் என்பது தினசரி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. தனியாக வேட்டைக்கு செல்வதை விட கூட்டாக செல்வது என்பது பாதுகாப்பாகவும், பொருட்கள் கிடைப்பதற்கு குறைந்த பட்ச உத்தரவாதமும் இருந்தது. இதை ஆரம்பகால கம்யூனிஸம் என்று சொல்கிறோம். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும்போது உற்பத்திதிறன் தேவை அதிகமாகிறது. இதனால் உற்பத்தி சக்திகள் வளரும்போது அன்றைய தேவைகளுக்கு மேல் உற்பத்தி பண்ண முடியும் என்கிற நிலை உருவாகிறது. இங்குதான் உபரி என்பது வருகிறது. இந்த உபரி என்பது விவசாயத்தின் மூலம் சாத்தியமாகிறது. உபரி உற்பத்தி என்பது நிரந்தரமாகிறது. உபரி சாத்தியமாகும் போது வேறு ஒன்று நமக்கு புதியதாக அறிமுகமாகிறது. அது என்ன வென்றால் நூறு பேர் வேலை செய்தால் நூற்றி இருபது பேர் சாப்பிடலாம் என்று வருகிறபோது யார் வேலை செய்யாமல் இருப்பது என்பதை ஊர் கூடி பஞ்சாயத்து மூலம் முடிவு செய்வது கிடையாது. உற்பத்தி கருவிகள் யார் கையில் இருக்கிறதோ, அவர்கள் மற்றவர்களை வேலை செய்ய சொல்லலாம். இது எப்படி நடந்திருக்கும்? இரண்டு கணக்குழுக்கள் மோதும் போது தோற்றுப் போனவர்களை கைதிகளாக்கி அடிமைகளாக கொள்ள முடிந்தது. இந்தச் சூழல் உபரி ஏற்பட்ட பிறகுதான். உபரி ஏற்படுவதற்கு முன்னால் கண குழுக்களிடையே மோதல் நிகழும்போது தோற்றுப் போனவர்களை கைது செய்வதால் எந்த பலனும் இல்லை. ஏனெனில் அப்போது எல்லாரும் உழைக்க வேண்டி இருந்தது. இப்படித்தான் யூகிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அன்றைக்கு நிலம் என்பது பிரச்சனையாக இல்லை. காலம் செல்ல செல்ல யாரிடம் அடிமைகள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களிடம் நிலமும் அதிகமாக இருந்தது. அப்போது உற்பத்தி கருவிகளிடம் பாகுபாடு வருகிறது.

உற்பத்தி சக்திகள் வளரும்போது, அதன் விளைவாக உபரி ஏற்படும் போது ஒரு மக்கள் சமுதாயத்தில் பிரிவினை சாத்தியமாகிறது. அது உழைப்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்று வருகிறது. இதைத்தான் சுரண்டல் என்கிறோம். இந்த உற்பத்தி உறவு மாற மாற சுரண்டல் என்பது பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். இதிலிருந்துதான் பூர்ஷ்வா சமூகம் உருவாகிறது.

உழைப்பு என்பது என்ன?

சமுதாயத்தில் விலங்கிலிருந்து வேறுபடுத்துவது உழைப்பு. உழைப்பைப் பற்றி மார்க்ஸ் கூறும்போது, சிலந்தி அற்புதமாக வலை பின்னுகிறது. சிலந்தி வலையை பின்னுவது என்பது அனிச்சை செயல். கட்டடக்கலை என்பது மனிதன் உருவாக்குவது. ஒரு கற்பனைக்கு பிறகுதான் யதார்த்தத்தில் உருவாக்க முடியும். அதாவது ஒரு நோக்கத்தோடு செயல்படுவதுதான் உழைப்பு. இதுதான் மனிதனை வேறுபடுத்துகிறது. மனித உழைப்பை மையப்படுத்திதான் அனைத்தையும் பார்க்கிறது மார்க்சியம். மற்றவர்கள் சொல்லும்போது மூலதனம் வந்தால்தான் வளர்ச்சி என்கிறார்கள். மூலதனம் என்பது என்ன? மூலதனத்தை மனிதனுடைய படைப்பாக பார்க்காமல், மனிதனை மூலதனத்தின் வடிவமாக பார்ப்பதால் வந்த கோளாறு தான் இந்தபோக்கு. இதைத்தான் Human Capital என்கிறார்கள். இது மார்க்ஸ் சொல்கிற அந்நியமாதலுக்குள் வரும். இது முதலாளித்துவத்தை தலைகீழாக பார்க்கிற போக்குதான்.

உற்பத்தியாளர் என்பவர் யார்?

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவனை உற்பத்தியாளன் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அவன் உண்மையிலே உற்பத்தியாளன் இல்லை. முதலாளியை உற்பத்தி செய்பவனாகவும், உண்மையில் பொருளை உற்பத்தி செய்பவனை கூலி என்று சொல்கிறோம். இதை மார்க்ஸ் அற்புதமாக மூலதன நூலில் விவரிக்கிறார்.

முதலாளித்துவ உலகத்தில் தொழிலாளார்கள் நிலை என்ன?

முதலாளித்துவ முறையில் முதலாளிகளுக்குள் போட்டி வருகிறது. புதிய இயந்திரங்கள், புதிய தொழில்நுட்பங்களை புகுத்துகிறார்கள். சந்தையை ஏதோ ஒரு முதலாளி கைக்குள் வைத்திருக்கிறான். இன்னொன்று முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவு என்பது முக்கியமானது. தொழிலாளியை வைத்து வேலை வாங்கினால்தான் லாபம் என்று முதலாளிக்கு தெரியும். ஆனால் தொழிலாளிகள் கூடி பேசுவர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். ஆனால் தொழிலாளிகளுக்கு பதில் இயந்திரங்களை கொண்டு வந்துவிட்டால் தொழிலாளிகளிடம் உள்ள பிரச்சனைகள் இயந்திரங்களிடம் இல்லை. தொழிலாளிகளின் திறமைகள் உற்பத்தியை சார்ந்து இருப்பதால் சந்தைகள் மாறுகின்ற வேகத்திற்கு உற்பத்தியை மாற்றுவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தொழிலாளிகள் மீது தங்களது சார்பை எந்த அளவுக்கு குறைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து கொள்வது நல்லது என்று முதலாளிகள் நினைத்துக் கொள்கிறார்கள்.

இயந்திரம் என்பது வர்க்கப் போராட்டத்தில் முதலாளித்துவத்தின் கருவியாக இருக்கிறது. இதன் விளைவு என்பது தொழிலாளியின் அசைவு கூட இயந்திரத்தின் வேகத்தினையும் அசைவையும் பொறுத்துதான் அமைகிறது. இயந்திரம் என்பது கடந்தகால உழைப்பு. தொழிலாளி என்பது நிகழ்கால உழைப்பு. இறந்தகால உழைப்பு நிகழ்கால உழைப்பின் அசைவுகளை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் சொல்லுவார்.

எட்டுமணி நேர வேலைன்னு நாம் பேசிக்கிட்டு இருக்கோம். இன்னும் இந்தியாவில் வரவில்லை. இதை நான் பாரம்பரிய தொழிற்சாலை பற்றி மட்டும் சொல்லவில்லை. இன்று வந்திருக்க கூடிய தகவல் தொழில்நுட்ப துறையிலும்தான்.

முதலாளித்துவ ஆரம்பகாலத்தைப் பற்றிக் கூறுங்கள்?

முதலாளித்துவத்தின் ஆரம்பகாலங்களில் ஏராளமானவர்கள் தனிப்பட்ட சுய உற்பத்தியாளராக, கைவினைஞர்களாக இருந்தார்கள். பிறகு அதே சுய உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்கிறார்கள். அப்போது உற்பத்திமுறைகளில் மாற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தொழிலாளி உற்பத்தி செய்த பொருள் நேற்றுவரை அவனுக்கு சொந்தமாக இருந்தது. இன்று முதலாளிகளுக்கு சொந்தமாகி விட்டது. பிறகு அதிக தொழிலாளிகளால் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் தொழிலாளி இரண்டு வகையில் அந்நியப்படுகிறார்கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிடம் முதலில் அந்நியமாகிறான். இரண்டாவது உற்பத்தியின் செயல்முறைகளிலும் அந்நியப்படுகிறான். மனிதனுடைய அசைவுகள் இயற்கையானவை. அவை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனித உடலின் அசைவுகளில் மாறுபாடுகள் இருந்து கொண்டே இருப்பதுதான் இயற்கையானது. இந்த இயற்கையான செயல்பாடுகளை கணக்கில் கொள்ளாமல் முதலாளிகளின் உற்பத்தியை பெருக்குவதற்கு இயந்திரங்கள் செயல்பாட்டை ஒட்டி எல்லா அசைவுகளும் அமைகின்றன.

மார்க்சின் முக்கியக் கண்டுபிடிப்புகள் என்று எதை கருதுவீர்கள்?

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் வளர்ந்த போது வைத்த முதல் போராட்டக் கோரிக்கையே வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பதுதான். அப்போது ஊடகங்களில் வேலை நேரத்தை குறைத்தால் தொழிற்சாலையை நடத்த முடியாது. உற்பத்தி செய்கிற போது அந்த கடைசி நேரத்தில்தான் லாபம் கிடைக்கிறது என்று எழுதினார்கள். இதைப் பற்றி மார்க்ஸ் கூறும் போது வேலை நாட்களில் தொழிலாளிக்கு கொடுக்கப்படும் கூலி என்பது ஒரு பகுதி நேர உழைப்போடு முடிந்துவிடுகிறது. மீத உழைப்புதான் உபரியாக போய் சேருகிறது. முதலாளி விற்கிற சரக்கு என்பது உழைப்பு அல்ல. உழைப்பு சக்தியைத்தான் விற்பனை செய்கிறார்கள். உழைப்பு சக்தியை உற்பத்தி செய்வதற்கு அதிகமான உழைப்பு தேவைப்படாது. ஆகவே தொழிலாளிக்கு முதலாளி கொடுப்பது உழைப்பு சக்தியின் மதிப்புதான். இந்த உழைப்பு சக்தி என்ற ஒன்றை மார்க்ஸ்தான் கண்டுபிடித்தார். அவருக்கு முன்பு ரிக்கார்டோ, ஆடம்ஸ்மித் போன்ற பொருளாதார அறிஞர்கள் உழைப்பின் மதிப்புதான் மூலதனம் என்று ஒத்துக் கொண்டார்கள். ஆனால் உழைப்புசக்தி, உழைப்பு என்று இரு கோட்பாடுகளை உருவாக்காததால் உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு அவர்களால் விடை காண முடியவில்லை. ஸ்மித்துக்கு முன்னர் பிரெஞ்சில் உள்ள பிசியோகிராபிஸ்ட் என்பவர்கள் விவசாயம் செய்யும் போது மண்ணிலிருந்துதான் உபரி வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதை வைத்துக் கொண்டு உழைப்பு என்ற பாத்திரத்தை அதிகப்படுத்தினர். உழைப்பு சக்திக்கும் உழைப்புக்கும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடித்தது மார்க்சின் முக்கியக் கண்டுபிடிப்பாகும்.

ஒரு நாணயத்தின் மதிப்பு என்பதை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள்?

ஒரு நாட்டில் உள்ள பணப்புழக்கத்திற்கும், உற்பத்திக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. உதாரணத்திற்கு சில கோடி ரூபாய்களை அரசாங்கம் அச்சடிச்சு கொடுக்கிறது. அதற்கு சமமான தங்கம் இருக்கிறது என்பதெல்லாம் கற்பனை. நாம் கொடுக்கிற ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. பொருள் கொடுக்க முடியாது என்றால் சட்டப்படி தண்டிப்பதற்கு உரிமையுண்டு. அந்த தாளில், இந்த தாளை கொண்டு வருபவர்களுக்கு இவ்வளவு மதிப்பை தருகிறேன் என்று அச்சடித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

இது ஒரு வாக்குறுதிதான். மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. நாம் அந்த தாள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நேரத்தில் விலைவாசி ஏறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, கத்தரிக்காய் காலையில் 30 ரூபாயாகவும், மாலையில் 300 ரூபாயாகவும், இரவில் 1000 ரூபாயாகவும் விற்றால் இந்தப் பணம் என்ற தாளை யாருமே பயன்படுத்த மாட்டார்கள். இந்த மனநிலை சமீபத்தில் ஜெர்மனியில் ஏற்பட்டது. இப்போது ஜிம்பாவேயில் ஏற்பட்டிருக்கு. இதை பிஹ்ஜீமீக்ஷீ மிஸீயீறீணீtவீஷீஸீ அதாவது அபரிமிதமான பணவீக்கம் என்று சொல்வர். இதற்கு காரணம் ஏகப்பட்ட நோட்டுக்களை அச்சடித்து உற்பத்தியும் பெருகாமல், இருப்பதால் நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படாமல் போகும்.

நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது என்பது ஏதோ ஓர் ஆண்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு நூறு ரூபாய் கொடுத்தால் என்ன பொருள் வாங்கினமோ, அதே பொருளை இந்த ஆண்டு நூற்றி இருபது ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் பணவீக்கம் இருபது சதம் ஆகும். எனவே ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று அர்த்தம். ஆகவே ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட ஆண்டை வைத்துத்தான் மதிப்பிட முடியும். பண வீக்கம் என்பது விலைவாசி உயர்வின் விகிதம். இப்போது செய்தித்தாள்களில் பணவீக்கம் 15லிருந்து எட்டு ஆகிவிட்டது. இது சாதனை என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் பொருள்களின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. இதனால் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. ஆனால் விலைவாசி குறையவில்லை. விலைவாசி ரூபாயின் மதிப்பை குறைக்கிறது.

வெளிநாட்டைப் பொறுத்தவரை டாலருக்கு ரூபாயின் மதிப்பு என்ன என்று கேட்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் மேலை நாடுகளில் ஏராளமான கடன் பெற்றிருக்க கூடிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருந்த பணங்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் ஏராளமான அந்நியநாட்டு பணங்கள் வெளியேறுகின்றன. அவர்களிடம் இருக்கிற இந்திய ரூபாய்களை டாலராக மாற்றுகின்றனர். இதனால் டாலருக்கு கிராக்கி கூடுகிறது. ரூபாயின் மதிப்பு சரிகிறது. நாம் இறக்குமதி செய்கிற பொருள் ரூபாய் மதிப்பில் அதிகமாகும். ஆகவே பணவீக்கம் அதிகமாகும்.

பொருளாதாரத்தில் நிதி மூலதனம் என்ன பங்கை வகிக்கிறது?

முதலாளித்துவ அமைப்பு இயல்பாகவே விரிவடையும் தன்மை கொண்டது. ஏனெனில் இந்த அமைப்பின் மைய நோக்கமே லாபம் ஈட்டுவதுதான். லாபம் ஈட்டுவது என்று வந்த பிறகு அது உள்ளூரில் நடந்தால் என்ன? வெளிநாட்டில் நடந்தால் என்ன? அதாவது தொழிற்சாலை வைத்தாலும் அல்லது கல்லூரி வைத்தாலும் லாபம்தான். அதற்கு லாபம் கிடைத்தால் எந்த நடவடிக்கையையும் எங்கும் மேற்கொள்ளலாம் என்றுதான் அர்த்தம். நாம் சம்பளம் வாங்குகிற பணம் காணாமல் போகிறது. அவர்களிடம் இருக்கும் பணம் வளருகிறது. இங்கு பணத்தின் மதிப்பு என்பது ஒன்று மூலதனமாகவும், மற்றொன்று வெறும் பணமாகவும் இருக்கிறது.

முதலாளித்துவம் பிரிட்டிஷ் என்கிற சின்னஞ்சிறிய தீவில் தோன்றி 200, 300 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கடல்கடந்த வணிகம் இருந்ததாக குறிப்பிடுகிறார். அப்போது வணிகம் என்பது எப்போதும் நிகழ்கிற ஒன்றாக இருந்தது. உற்பத்தி செய்த பொருட்களை பயன்பாட்டுக்குப் பிறகு உபரியாக உள்ள பொருட்களை விற்பது என்பதுதான் அந்தக் காலக்கட்டத்தில் நடந்தது.

முதலாளித்துவத்தில் மூன்று அம்சங்கள் உண்டு. அதில் ஒன்று உற்பத்தி பொருட்கள் சுய பயன்பாட்டுக்கு என்று அல்லாமல் சந்தையில் விற்பனைக்காக உற்பத்தி செய்வது. மற்றொன்று மனித உழைப்புச்சக்தியை சரக்காக மாற்றுவது. (இது முன்னால் ஏற்பட்ட உற்பத்தி முறையிலிருந்து மாறுபடுகிறது. அடிமைச் சமூகங்களிலும், நிலப்பிரபுத்துவ அடிமை முறைகளிலும் தொழிலாளியின் உழைப்பை விற்கமுடியாது. முதலாளித்துவ சமூக அமைப்பில் தொழிலாளி யாரிடம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. இதை மார்க்ஸ் சொல்லும் போது தொழிலாளி இரண்டு விதத்தில் விடுவிக்கப்படுகிறார் என்கிறார். எப்படி என்றால் எந்த முதலாளிக்கு வேண்டுமென்றாலும் வேலை செய்யலாம் என்கிறபோது, பண்டைகால அடிமைக்கோ சாப்பாடு உத்தரவாதம் உண்டு. நவீன கால தொழிலாளி தனக்கென்று இருந்த ஜீவாதாரத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறான். மூன்றாவது தனிநபர் லாபத்திற்கான உற்பத்தி. இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்த உடனே இயல்பாகவே உலகமயம் வந்து விட்டது. இந்த உலகமயம் 15, 16 நூற்றாண்டுகளிலே வந்துவிட்டது. இடையில் சோவியத் புரட்சி, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. இந்தக் காலகட்டத்தில் ஓர் உலகமயத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்படுகிறது. 80களில் மேலை நாடுகளின் ஆதிக்கம் புதிய வளர்ச்சியுடன் வருகிறது. அப்போது உலகப் பொருளாதாரத்தில் ஏகப்பட்ட பணம் குவிகிறது. இதனால் தொழில் மூலதனம் இருந்த இடத்தில் நிதி மூலதனம் வருகிறது.

தொழில் ஆரம்பித்து நிறைய சவால்களை சந்தித்து லாபம் ஈட்டுவதை விட புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக பல விதமாக நிதி மூலதனத்தை வைத்து இப்போது லாபம் ஈட்டுகிறார்கள்.

உலகமயம் என்பது முதலாளித்துவத்தின் இயல்பாக பார்க்க வேண்டும். இன்று நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று பார்க்கப்பட வேண்டும். மறு காலனியத்திற்கான முயற்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகமய சூழலில் சீனப் பொருளாதாரம் பற்றி...

Prof. Venkatesh மேலை நாடுகளிலிருந்து கொண்டு வரும் பணத்தை வளரும் நாடுகளில் முதலீடு செய்து, திரும்ப லாபத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது. இதில் நாடுகளின் சுதந்திரம், மக்களின் சுதந்திரம் என்பது பற்றி பேசாமல் நிதி மூலதன சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். உலக வர்த்த அமைப்பின் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை சுலபமாக்க வேண்டும். சரக்குகள், சேவைகள், நிதி மூலதனம் ஆகியவைகள் நாடுகளின் எல்லைகளை தகர்த்து ஒரே மாதிரியான விதிமுறைகளில் செயல்படுத்த வேண்டும். ஐந்து துறைகளில் ஏகபோகமாக பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒன்று தொழில்நுட்பம். சீன நாட்டின் வளர்ச்சிக்கு மேலைநாட்டு தொழில்நுட்பம் தேவையாக இருக்கிறது. முதலீடு இல்லாமல் தொழில்நுட்பம் மேலைநாடுகளில் கொடுப்பது கிடையாது.

இதுவரை நடந்துள்ள சோஷலிச புரட்சிகள் எல்லாமே பின் தங்கிய நாடுகளில்தான் நடந்துள்ளன. மார்க்ஸ் எங்கெல்ஸும் நினைத்தமாதிரி முதலாளித்துவத்தில் நன்கு வளர்ச்சி பெற்ற பிறகு சோசலிசப் புரட்சி ஏற்பட்டிருந்தால் இன்றுள்ள நிலை மாறி இருக்கும். பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் செய்ய வேண்டிய வேலையை சோசலிச அரசுகள் செய்ய வேண்டிய வந்தது. அடுத்து சந்தைகளுக்கு சாதகமாக ஏகபோகமாக இருந்தது. இதில் மற்றொன்று நிதி ஆதிக்கம். உள்நாட்டு நிதி தேவைகளுக்கு அந்த அரசாங்கமே அதிக ரூபாயை அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டு நாணய சந்தையில் விலை போகாது போன்ற பிரச்சனைகள் இருக்கு. இன்னொன்று ஊடகங்கள். இதில் எது செய்தி, எது செய்தியில்லை என்பதை பன்னாட்டு ஏகபோக ஊடகங்கள் நிர்ணயிக்கின்றன. இந்தச் சூழலில் சீனா, கியூபா, வெனிசுலா போன்றவைகளை எடுத்துக் கொண்டால் லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாமே அமெரிக்க பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டவை. இவை நிதி மூலதன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன.

சீனாவில் புரட்சிக்கு பின் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள், அந்த யுத்தங்களுக்கு பின்னால் நிலச்சீர்திருத்தம் ஏற்பட்டது. இன்று அந்த நிலச்சீர்திருத்தம் அடிப்படையாக இருக்கிறது. கிராமத்தில் யாருக்கும் அதிகமான நிலங்கள் கிடையாது. நிலம் ஊருக்கு சொந்தம். ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு நிலம் என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நீங்கள் பயிர் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் யாரை ஆட்சி செய்வதற்காக தேர்ந்தெடுத்தாலும் உண்மையில் ஆட்சி செய்வது நிதி மூலதனம்தான். சீனப் பொருளாதாரத்தில் சீன அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு அரசு உடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், நகரம் கிராமங்களுக்கான கூட்டுறவு நிறுவனங்கள், நிலச் சீர்திருத்தம் செய்த கிராமப்புற மையங்கள் சீனாவிற்குள்ளே உள்ள முதலாளிகள் ஆகியவற்றிற்கு ஊடாகத்தான் அந்நியநாட்டு மூலதனங்கள் இருக்கின்றன. இதில் சிக்கல் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் சிக்கல் இருக்கிறது . பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு முதலாளிகளும் சீன அரசு கட்டுமானங்களில் கட்சியில் ஊடுருவ முயற்சி செய்வார்கள். இது அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சீனாவின் நிதித்துறையும், பொருளாதாரமும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இப்பொழுது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அவர்களிடம் முன்ஏற்பாடுகள் இருக்கிறது. இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் பத்துசதவிகித வளர்ச்சியால் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போது ஏற்றுமதி பாதிக்கப்படும். உள்நாட்டு சந்தையை விஸ்தரிக்க வேண்டும். ஏற்கனவே உள்நாட்டு சந்தை விஸ்தீர்ணமாக இருக்கிறது. இதை இந்தியாவோடு ஒப்பீட்டு பார்க்க முடியாது. இந்தியாவில் நுகர்வோர் தன்மை குறைவாக இருக்கு. நிலமும் பிரச்சினையாக இருக்கிறது.

2008_2009 நிதி ஆண்டில் சீன மொத்த உற்பத்தி என்பது 14சதவீதம் என்ற அளவில் செலவுகளை அரசு நேரடியாக மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசு மொத்த தேசிய உற்பத்தியில் அரை சதம் கூட செலவு செய்ய மறுக்கிறது. அயல்நாட்டு உள்நாட்டு மூலதனங்கள் இருக்கிறவரை முதலாளித்துவ கருத்துகள் உலாவுவதை தவிர்க்க முடியாது. அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் ஒன்றும் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டியதில்லை.

பொதுவாக சீனாவில் சுமார் 15 கோடிபேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்துவேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு கிராமங்களில் நிலம் இருக்கின்றன. அதில் பெரியவர்கள் வேலை பார்க்கின்றனர். அங்கு கிழக்கு கடற்கரைப் பகுதியில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஏராளமான வேலைகள் கிடைத்தன. கிராமத்தில் உள்ள அடுத்த தலைமுறையினர் இதில் வேலை பார்த்தனர். அண்மையில் நடந்த சீன புத்தாண்டு தினத்திற்கு ஊருக்கு சென்று வந்த இரண்டு கோடி பேர்களில் ஒரு கோடி பேருக்கு உடனே திரும்பவும் வேலை கிடைத்தது. மற்றவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் சில இடைவெளிகள் இருக்கிறது என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். வேகமாக வளர்ந்த கிழக்கு கடற்கரையோர பகுதி, மற்றொன்று பின்தங்கிய வடக்குமேற்கு பகுதி. இதற்கு அடுத்ததாக கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள வேறுபாடு. மூன்றாவது கிராமங்களில் உள்ள ஏழை, பணக்கார வேறுபாடு.

நான்காவது நகரங்களில் ஏழை, பணக்கார வேறுபாடு ஐந்தாவது மற்றநாடுகளுக்கும் சீனாவிற்கும் உள்ள வேறுபாடு. இந்த இடைவெளிகளை சமன்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள். இது வெற்றி பெறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெற்றி அடையும் என்றுதான் நினைக்கிறேன்.

தனிநபர் தேசிய வருமானம் என்பது எதை அடிப்படையாகக் கொண்டது?

தேசியத்தின் மொத்த உற்பத்தி மற்றும் தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கிறார்கள். இதைதான் சராசரி தலா வருமானம் என்கிறோம். ஆனால் இது தனிநபர் வருமானம் இல்லை. தலா வருமானம் என்பது மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே கிடைக்கிறது. எட்டு ஆண்டுகளில் தலா வருமானம் கூடியது என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். ஆனால் அது உண்மை இல்லை. உலகப் பணக்காரர்கள் வரிசையில் இந்தியர்கள் இருக்கலாம். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள சாதாரண மக்களுக்கு சம்பந்தமல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

விவசாயத்தில் தன்னிறைவு என்பது...

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்போது பல்வேறு வகையான விவசாய முறைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலவரி வசூல் செய்வதற்கான உரிமையை ஏலம் விட்டனர். ஏலத்தில் பல இடங்களில் நிலவரி வசூல் செய்யும்போது, வரி செலுத்த முடியாத விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இது நம்முடைய பாரம்பரியத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இங்கு ஓர் அரசு இருந்தது. அந்த அரசு நிலவரி விதித்தது. அந்த வரியை ஜமீன்தாரர்கள் வசூலித்தார்கள். அதில் சிறு பகுதி ஜமீன்தார்களுக்கும், பெரும்பகுதி அரசுகளுக்கும் சென்றது. அந்த வரியை வைத்து நகரங்களில் தொழில்களை தொடங்கினர். காலனிய ஆட்சியில் உறிஞ்சப்பட்ட உபரி இங்கிலாந்தின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. இந்தியாவில் உறிஞ்சப்பட்ட உபரி பத்து சதமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்தப் பத்து சதம் என்பது பிரிட்டனில் மூலதனத்தில் மூன்று சதமாக இருக்கலாம்.

இந்த மூன்று சதம் என்பது அன்றைய பிரிட்டிஷில் கணிசமான பங்கு ஆகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பேசும்போது காலனி ஆதிக்கத்தைப் பற்றி கூறும்போது இருபெரும் நாகரிகங்கள் சந்தித்துக் கொண்டது என்று சொன்னார். இது ஓர் ஈனமான செயல் என்றே சொல்ல வேண்டும். அடிமை மனப்பான்மை காட்டக்கூடிய செயல் அல்லவா இது. வரிவசூல் செய்யக்கூடிய ஜமீன்தார்களை புதிய முதலாளிகளாக பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் உருவாக்கியது. பிரிட்டிஷ் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலே வேளாண் உற்பத்திகளை இங்கு மாற்றி அமைத்தது. உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணப்பயிரை பயிரிடுமாறு ஆங்கிலேய அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. இதனால் விவசாயம், வணிகமயம் ஆகியது. ஆங்கிலேயர்கள் வரும்போது நிலமற்ற விவசாயிகள் இருந்தார்கள். அதற்கு முன்னாலும் இருந்தார்கள். ஏனெனில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் கிடையாது. ஆங்கிலேயர்கள் நிலப்பிரபுகளுக்கு ஆதரவாகவும் இருந்தனர். நிலப்பிரபுக்கள் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தனர் என்பது நமக்கு வரலாற்றில் தெரியும்.

காலனிய ஆட்சியில் இங்குள்ள ஏராளமான தொழில்துறைகள் அழிக்கப்பட்டன. அவர்களுடைய மலிவான பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர். இதனால் பெரும்பாலான மக்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்தனர். விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில் உணவு உற்பத்தி அரைசதம் கூட அதிகரிக்கவில்லை. அதே காலக்கட்டத்தில் மக்கள்தொகை 1லு சதம் அதிகரித்தது. இதனால் தலா உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. விடுதலைக்கு பின்பு ஓர் எல்லைக்கு உட்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் செயல்பட்டன. அரசு மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்தது. பாசனத்தை பெருக்கிற்று. ஐந்தாண்டு திட்டங்கள் வந்தன. பல்நோக்கு திட்டங்கள் வந்தன. இவற்றின் விளைவாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு பசுமை புரட்சி வந்தது. இந்தப் பசுமை புரட்சியால் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தி மகசூல் அதிகம் பெறப்பட்டது. 1950 முதல் 1990 வரை இந்திய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மை. தேசிய அளவிலான தானிய உற்பத்தி என்பது மக்கள் தொகை வளர்ச்சியை விட உயர்ந்தது.

விவசாயத்தில் தன்னிறைவா என்று கேட்டால் தன்னிறைவு என்பதே சிக்கலான வார்த்தை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஆந்திராவில் தானிய உற்பத்தியில் தன்நிறைவு அடைந்துள்ளது. அங்கு விளைந்த நெல்லை மத்திய கிடங்கிற்கு கொடுக்கிறது என்றால் ஆந்திராவில் இருப்பவர்கள் எல்லாரும் நன்றாக சாப்பிட்டார்கள் என்று அர்த்தமா?

60களில் தம்முடைய தானிய உற்பத்தி குறைவாக இருந்தது. வாங்கும் சக்தியும் குறைவாக இருந்தது. அதனால் தானியங்களை இறக்குமதி செய்தோம். அயல்நாட்டு கொள்கையில் சுயேச்சையான கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அமெரிக்கா வியட்நாமில் போர் செய்து கொண்டிருந்தது. இந்தியாவில் அதை கண்டிக்க முடியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் இருந்து உணவுப் பொருட்கள் கப்பலில் வரும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பின்னணியில்தான் பசுமைப்புரட்சி பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது. விவசாயத்தின் நிலஉறவுகளை மாற்றாமல், அங்குள்ள பெரும் விவசாயிகளை மையப்படுத்தி, அவர்களுக்கு மானியம் கொடுத்து, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்தி, மகசூலை அதிகம் பெறுவது, பிறகு அவர்களைப் பார்த்து மற்றவர்களையும் பின்பற்ற வைப்பது என்பது வலுவானவர்களை முன் வைத்து எடுக்கப்பட்ட யுக்தி என்று சொன்னாலும் கூட புதிய தொழில்நுட்பம், பாசனம், உயர் மகசூல் விதைகள், பூச்சி மருந்துகள், வேதியியல் உரம் உள்ளிட்ட ஒரு நவீன உற்பத்திமுறையால் மகசூல் உயருகிறது. மகசூல் உயரும்போது சந்தையில் விலை சரியும். இந்த விலை சரிவை சரி செய்ய அரசு ஒரு கொள்முதல் அமைப்பை 1964 ஆம் ஆண்டில் உருவாக்கியது. இதன் மூலம் தானியங்களை இருப்பு வைக்கவும், திரும்ப விற்கவும், நியாயவிலைக் கடை சென்று கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தது.

விவசாயத்திற்கான பொருட்களை வாங்குவதற்கு கடன் அமைப்பில் மாற்றம் வந்தது. வங்கிகள் நாட்டுடமையாக்கமும் கூட்டுறவு கடன் வசதி பெருக்கப்பட்டன என்று அரசு பல முயற்சிகளை முன் நின்று மேற்கொள்ள வேண்டியிருந்தது. கட்டுபடியான விலையைக் கொடுத்து கொள்முதல், விவசாயம் செய்வதற்கு பயிர்கடன், நிலமேம்பாட்டு கடன் விவசாயிகள் கற்றுக்கொள்ள விவசாய விரிவாக்க அமைப்பு, விவசாயிகள் சொல்லக்கூடிய பிரச்சனைகளை தேசிய அளவில் எடுத்து சென்று தீர்வு சொல்வதற்காக ஓர் ஆராய்ச்சி அமைப்பு, நாடு தழுவிய விநியோக அமைப்பு போன்றவைகள் இல்லாமல் பசுமைப்புரட்சி நடந்திருக்க வாய்ப்பில்லை. பசுமைபுரட்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் இல்லை. அரசு விவசாயத்தில் பங்கு எடுத்து, முதலீடுகளை மேற்கொண்டு, அமைப்புகளை ஏற்படுத்தி செய்யக்கூடிய வேலை. இந்தியா போன்ற பெரியநாட்டில் சந்தை இதைச் செய்திருக்காது. 60களில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஏற்பட்ட நெருக்கடியால் இனி பஞ்சம் வந்தால் மேற்கொள்ள இதை செய்யப்பட்டது. இதை ஏன் விரிவாக வலியுறுத்தி சொல்கிறேன் என்றால் 90களுக்குப் பிறகு இந்த ஏற்பாடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. புதியப் பொருளாதார கொள்கையின் கீழ் கடுமையான பாதிக்கப்பட்ட துறை விவசாயத் துறைதான்.

பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கூடியிருப்பதாக அரசு சொல்கிறது. தலா வருமானம் கூடியிருப்பதாக சொல்கிறது. ஆனால் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருக்கிறார்கள். இது பங்களாதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம்.

Prof. Venkatesh உலகமயத்தைப் பற்றி பாடப்புத்தகங்கள் எப்படி வந்துள்ளன?

உலகமயத்தைப் பற்றி பாடப் புத்தகங்களில் பெரிதாக ஒன்றும் வர இல்லை. ழிசிணிஸிஜி க்கு ஒரு தடவை போகும் போது உலகமயத்தை பற்றி பேசினோம். அதில் சில பேர் சொல்கிற மாதிரி உலகமயம் நன்மைகள் என்று சொல்வதையும் அதன் எதிர்பக்கத்தையும் சேர்த்து சொல்ல வேண்டி இருந்தது. பெரும்பாலும் அவை விமர்சனப் பார்வைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் உலகமயத்தை முழுமையாக அவர்களால் ஆதரிக்கவும் முடியவில்லை. அதற்கு காரணம் இப்போது நெருக்கடிகள் வந்து கொண்டே இருக்கிறது.

உலகமயத்தில் பலன் பெற்றது நடுத்தர வர்க்கம் என்று சொல்லலாமா?

இந்தக் கேள்வியில் என்னால் உடன்பட முடியல்லை. நடுத்தரவர்க்கம் என்பது யாரை சொல்கிறீர்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் பயன் அடைந்தது பெரிய முதலாளிகள்தான். ஸ்தாபன ரீதியாக திரட்டப்பட்ட முறைசார்ந்த தொழில்துறைகளில் மொத்தப் பணியிடங்கள் குறைந்து இருக்கின்றன. அதற்காக வளர்ச்சி குறைந்து இருக்குன்னு நான் சொல்லலை. கடந்த 7, 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் முறைசார தொழில்களில் முறைசாரா பணிகளில் கூடியிருக்கிறது. இதற்கு உதாரணமாக காண்டிராக்ட் லேபர், கேஷ§வல் லேபர், அத்த கூலி என்று இப்போது வந்திருக்கிறது. நிலையான கூலியை சம்பளத்தை பெறும் தொழிலாளிகள் குறைந்து இருக்கிறார்கள் என்பது உண்மை. நடுத்தர வர்க்கம் என்று யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறை, நிதித்துறை போன்றவைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு பாரம்பரியமான சம்பளத்தை விட அதிகமான சம்பளம் கிடைக்கலாம். உதாரணமாக ஐ.டி. துறையில் வேலைப் பார்ப்பவருக்கு 50,000 சம்பளம் கிடைக்குது என்றால் நம்மை பொறுத்தவரைக்கும் பெரிய சம்பளம்தான். இதனுடைய மதிப்பு இன்றைக்கு ஆயிரம் டாலர் தான். இந்த ஆயிரம் டாலருக்கு அமெரிக்காவில் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். நம்முடைய உயர் சம்பளக்காரர்கள் சர்வதேச சந்தையில் அடிமாட்டுக்கு வேலை செய்வதாகதான் அர்த்தம். இவர்களை நிறுவனங்கள் சுரண்டி கொழுக்கின்றன. வேலை பார்ப்பவர் சுரண்டுவது இல்லையே. இவர்களை ஏன் நடுத்தர வர்க்கம் என்று சொல்ல வேண்டும்? இவர்களுக்கு தொழிற்சங்க பாதுகாப்பு கூட இல்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளிகள்தான். இதைச் சொல்வதால் ஐ.டி.யில் வேலை பார்ப்பவர்களுக்கு சங்கடமாக கூட இருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான். நடுத்தர வர்க்கம் என்பதே முதலாளித்துவ சொல். நூறு கோடி இருக்கிற இந்த நாட்டில் உழைப்பவர்கள் 46 கோடி பேர். இதில் ஏழு கோடி பேர்தான் முறையான தொழிலாளிகள். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தரமில்லை. இதில் 13 கோடிபேர் அத்த கூலிகளாக உள்ளனர். மீதம் இருக்கின்ற 26, 27 கோடி பேர் சுய உற்பத்தியாளர்களாக இருக்கின்றனர். சுய உற்பத்தியாளர் என்பவர்கள் ரயிலில் பாட்டுப்பாடி காசு கேட்பவரும், சாலை சிக்னலில் பேப்பர் விற்பவரும், அம்பானியும் வருகின்றனர்.

நகர்ப்புறங்களில் கல்விப் பெற்று வங்கி, காப்பீடு, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், மருந்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களை நீங்கள் நடுத்தர வர்க்கம் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவர்களுடைய சிந்தனை எப்போதுமே தொழிலாளிகள் பக்கம் இருக்காது. ஆனால், உலகமயம் வந்த பிறகு நடுத்தர தொழிலாளிகள் மத்தியில் மாற்றம் வந்திருக்கிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உலகமயத்தை ஆதரிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று இவர்கள் சொன்னார்கள். இப்போது அதன் தாக்கத்தை உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இதில் மற்றொரு பகுதியினர் 70, 80களில் நுகர்பொருட்கள் வெளிநாட்டில் கிடைப்பது மாதிரி இங்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டு சைனா பசாரில் கடத்தப்பட்ட பொருட்களையும் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். உலகமயத்தால் இங்கே பொருட்கள் கிடைக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். கம்ப்யூட்டரையும், செல்போனையும் உலகமயத்தின் சாதனையாக இவர்கள் பார்க்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்கள் உலகமயத்தை சாத்தியப்படுத்தி இருக்கலாம். நிதித்துறை உலகமயத்தை இந்தத் தொழில்நுட்பங்கள் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், தொழில்நுட்பம் முன்னேற்றங்கள் என்பது உலகமயம் அல்ல. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு உலகமயம் வந்த காலக்கட்டத்தில் செல், கம்ப்யூட்டர், கலர் டெலிவிஷன் வந்த காலமும் ஒன்றாக இருப்பதால் ஒருவித பிரம்மை வந்திருக்கு. இதை தகர்க்க வேண்டியிருக்கு.

உலகமயத்தில் நாடுகளுக்கிடையே உள்ள வணிகத்தையோ, வணிக உறவுகளையோ, மூலதன உறவுகளையோ நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால், வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் பன்னாட்டு நிதி மூலதனங்களின் மேலாதிக்கத்தில் நிகழ்கின்ற உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளை சுரண்டுவதை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு அயல்நாட்டு மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் எப்படி செயல்பட வேண்டும் என்று வரைமுறைகளை உருவாக்க உரிமை உண்டு. இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உலகமயத்திற்கு கதவுகளை திறந்து விடுவது என்பது ஜனநாயகத்தை அவமதிக்கின்ற செயலாகும். அயல்நாட்டு மூலதனத்தை எந்த வரையறையும் இல்லாமல் திறந்து விட்டால் அந்த மூலதனம் வெளியேறிவிடும் என்ற அச்சத்தாலே ஆட்சியை நடத்த வேண்டியிருக்கிறது. பட்ஜெட் போடும்போது நிதி அமைச்சர்கள், பன்னாட்டு மூலதனக்காரர்கள் கோபப்படும் அளவிற்கு எதுவும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் மாற்றம் என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி பிறகுதான் வருகிறது. சீனா போன்ற நாடுகள் மேலை நாடுகளில் உறவு வைத்துக்கொண்டு தொழில்நுட்பங்களை பெறுவதும், அந்நிய மூலதனங்களை வரவழைப்பதும் என்று பார்க்கும்போது அவை எங்கிருந்து செய்யப்படுகின்றன என்று பார்க்காமல் உலகமயம் நல்ல விஷயம். முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது. ஒன்றிரண்டு கஷ்டங்கள் இருந்தாலும் நல்ல விஷயம்தான் என்ற கருத்தோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்நிலை தாக்கமும், ஊடகங்களும் இந்தக் கருத்தோட்டத்தை நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்தன. உலகமய சூழலில் நிலைமை மாறுகிறபோது ஊடகங்கள் சொன்னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்.

உலகமயச் சூழலில் தொழிற்சங்கங்களின் பங்கு எப்படி இருக்கும்?

இது ஒரு மிகப்பெரிய சவாலான விஷயம்தான். மூலதனம் தேசம் விட்டு தேசம் செல்ல முடியும் என்கிற ஏற்பாடு தொழிற்சங்கங்களுக்கு சவாலான விஷயம் தான். ஒரு நாட்டில் இருக்கும் தொழிற்சாலையை எதிர்த்து தொழிற்சங்கம் மூலமாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து அந்தத் தொழிற்சாலையை அப்படி எடுத்துக் கொண்டு இன்னொரு தேசத்திற்கு போகலாம் என்கிற வாய்ப்பு முதலாளிகளுக்கு இருக்கும்போது தொழிற்சங்கங்களுக்கு போராடக்கூடிய வலுவில் பாதிப்பு ஏற்படும். அண்மைக் காலங்களில் பன்னாட்டுக்குமான தொழிற்சங்கத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். இன்று பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் தற்காப்பு போராட்டங்களைத்தான் நடத்த வேண்டியிருக்கிறது. தேசிய முதலாளிகள் கூட உள்நாட்டு தொழில் பாதுகாப்பு என்று அக்கறை செலுத்தாமல் உலகமயத்தின் மூலம் முன்னேறலாம் என்ற கற்பனையில் இறங்குகிறபோது தொழிற்சங்கங்கள் மேலும் சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

உலகமயமாக்கல் என்பது அமைப்பு சார்ந்த தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைத்து, அமைப்பு சாராத, முறை சாராத வகைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளிகளின் எண்ணிக்கை கூட்டியிருக்கிறது. இவர்கள் மத்தியில் பணிபுரிந்து அவர்கள் திரட்ட வேண்டும். ஆனால், இவர்களை திரட்டுவது என்பது மிக கடினமான வேலை. இன்று தொழிற்சங்கங்களின் பிரச்சனை ஊரின் பிரதான பிரச்சனையாக சில இடங்களில் நடந்திருக்கிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு தொழிலாளி வர்க்கத்தை சமாதானப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உலக நாடுகளிடம் வந்திருக்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஆங்காங்கே சில எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் அமெரிக்காவில் இந்தியர்களும், மொரக்கார்களும் வேலைக்கு வந்தால் எங்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நிறவெறிகளும் தூண்டப்படுகின்றன.

தமிழகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய விவாதங்கள் இல்லையே?

வட மாநிலங்களை ஒப்பிடும்போது மனிதவள குறியீடு தமிழகத்தில் நன்றாக உள்ளன. இதில் கேரளா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் என்ற வரிசையில் உள்ளன. தமிழகத்தில் காலங்காலமாக நடக்கின்ற இயக்கங்கள் விளைவாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் போட்டியும் இதில் அடங்கியிருக்கின்றன. சமூகநலத் திட்டங்கள் நடைபெறுகின்றன. வறுமைக்கோடு என்ற அளவு இல்லாமல் எல்லோருக்கும் ரேஷனில் அரிசி கிடைக்கிறது. சராசரி கிராம மக்களின் வாழ்நிலை என்பது நிலம், குடிமனைப் பட்டாவைச் சார்ந்தது. இந்த இரண்டையும் அடைவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இடதுசாரிகளைத் தவிர வேறு யாருமே இதுபற்றி பேசுவதில்லை. ஊடகங்கள் கூட செய்திகளை வெளியிடுவதில்லை. ஏராளமான அந்நிய முதலீடுகள் வருவதாக செய்திகள் வருகின்றன. அதைப்பற்றி அரசிடம் ஒரு வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

அரசு சொல்கிற இந்த முதலீடுகளால் எவ்வளவு பணியிடங்கள் உருவாக்கப்பட்டன? பணியிடங்களின் தன்மை என்ன? பணியிடங்கள் நிரந்தரமானதா? அன்றாட கூலிகளா அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகளா? என்ற விவரங்கள் எதுவும் கிடையாது. தேசிய புள்ளி விபரங்களை வைத்து பார்க்கும்போது தமிழக கிராமப்புறங்களில்தான் நிலமற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறக் கூலி, கிராமப்புறக் கூலி விகிதங்கள் பெருமளவுக்கு முன்னேறவில்லை. ஒரு விவசாயத்தின் சராசரி பணி நாட்கள் குறைந்து இருக்கிறது. தொழிற்சாலைகளில் சில நேரங்களில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனால், இப்போது சுழற்சிக்குள்ளாக்குகிறது. தமிழகத்தின் முக்கியமான பிரச்சனையே புலம்பெயரும் தொழிலாளிகள்தான். புலம் பெயரும் தொழிலாளிகளை அணிதிரட்டுவது மிகக் கடினமான பணி. இந்தத் தொழிலாளிகளை பயன்படுத்த எந்தச் சட்டக் கட்டுப்பாடுகளும் இல்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்து பேசுவது சரியானதாக இல்லை. நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப் பகுதி மக்களைப் பற்றி ஓர் ஆய்வு கூட இதுவரை இல்லை. இப்படியான ஒரு ஆய்வை மேற்கொண்டு அவர்களுக்கான கோரிக்கைகளை உருவாக்க முடியும்.

1993_94, 2004_2005ஆம் ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி அடைந்த மாநிலம் மேற்குவங்கம். என்னுடைய சமீபத்திய ஆய்வில் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிஸா, குஜராத்தில் ஆகிய மாநிலங்கள் மனித வள குறியீடு மிக மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் காவிரிக்கரையில் பொய்யாமணி, நங்கபுரம் ஆகிய இடங்களில் இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கிறது. விவசாய உற்பத்தி குறைந்திருக்கிறது. இப்போது விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்கிறார்கள். உண்மையிலே அன்றைக்கு என்ன கூலி கொடுத்தார்களோ, அதே கூலியைத்தான் இன்றைக்கும் கொடுக்கிறார்கள். அதேசமயம் விவசாயப் பொருட்களுக்கு விலையும் இல்லை. தமிழகத்தில் தற்கொலைகள் நடைபெறவில்லை என்பதற்கு நகரங்களுக்கு, கிராமப்புறங்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதுதான் காரணம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com