மு. முருகேஷ் கவிதைகள்
1. மேலிருந்து கீழாய்
இறங்கிவரும்
கனவின் காலுதைப்பில்
விழித்துக்கொண்டேன்.
படுக்கையிலிருந்து எழுந்து
வெளித்திண்ணை வரும்வரை
விடாது பின்தொடர்ந்தன
விசும்பலொலிகள்.
திரும்பிப் பார்க்கையில்
யாருமில்லை என்றறிய...
மெல்ல பயம் கவிய,
நிலா பார்க்க,
தலை நிமிர்கையில்-_
எல்லாம் கருத்திருந்தது.
மீண்டும் நான்
படுக்கைக்கு திரும்பவேயில்லை.
2. வேரற்று வீழும்
மரமென்றா நினைத்தீர்...!
உங்கள்
அப்பாவித்தனத்தின் மீதான
ஆழ்ந்த அனுதாபங்களோடு,
உங்களைச் சுற்றியும்கூட
படர்ந்து கொண்டுதானிருக்கிறது...
வன்மத்தின் நரம்புகள் ஊடுருவிய
கொடியன்று.
3. யாரிடமும் சொல்லாத
ரகசியம் என்று
எப்படிச் சொல்ல...?
யாரிடமும் சொல்லாத
ரகசியம் உண்டெனில்
அதை யாரிடம் சொல்வது...?
சொல்வதாலேயே
ரகசியம் தன் இறுக்கத்தை மௌனத்தை
கலைத்துப் போகுமெனில்,
சொல்லாமலேயே
அழிந்து போகட்டும்...
எல்லா ரகசியங்களும்.
4. ஆளற்ற பொழுதிலும்
அதிர்ந்தடங்கும்
தண்டவாள மணியோசையில்,
மேய்ச்சலைவிட்டு
குதித்தோடுகின்றன
சில செம்மறியாடுகள் மட்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|