செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை
மகுடேசுவரன்
பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது
பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது
சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது
விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது
துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது
அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது
தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது
மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது
இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்
- மகுடேசுவரன்
(மண்ணே மலர்ந்து மணக்கிறது தொகுப்பிலிருந்து...)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|