இறந்ததற்குப் பிறகும்
இளங்கவி அருள்
வழக்கப்படி
எரிப்பதா! புதைப்பதா!
முடிவு எடுப்பதற்கே
வாரிசுகளின் கூச்சலில்
தொடாமலே சுருங்கிவிடுகின்றன
பல முகங்கள்
பாடைகளை இழுக்கும்போது
பாதசாரிகளின் மூட்டை முடிச்சுகள்
முகம் சுளிக்கின்றன
அனுதாபமின்றி
பிணத்தின் முன்
எத்தித் திரியும் காகத்திற்கு
எந்நாளும் உணவுவைத்ததால்
இரங்கல்பா பாடவந்த பறவையை
சிவகாசி பட்டாசு போட்டு
சிதற அடித்தனர்
இறுக்கத்தோடு வரும்
முகத்துக்கு முன்
தன் திறமைகளை
இசையில் இரைச்சலில்
பூமியை புழுதியாக்கிவிடுகின்றனர்
சவக் கூத்தாடிகள்
ஒத்தையில் போகும் உயிர்
துணை தேடுகிறது
ஜாதிய வீதியைக்
கடக்கும்போது
என்னையும் சித்தரிக்கின்றனர்
பாடை முழுவதும்
பல கொடிகளைக் குத்தி
கூட்டணி தலைவனாய்.
தீயில் இட்டபிறகும்
திமிர்த்தனமாய் நிற்கிறதாம்
முறுக்கு மீசை
வீம்பு பேசுகிறான்
வெட்டியான்
இறந்ததற்கு பிறகும்
இம்சிக்கின்றனர்
இப்படித்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|