சி. வெங்கடேஷ் கவிதைகள்
இலக்கம் ஆறில் வசிப்பவன்
அகால மரணமொன்றிற்கு செல்கிறோம்
முதலில் மரணத்திற்கான காரணத்தை
ஆய்கிறோம் மரணித்தவனின் மனைவி
குழந்தை மற்றும் சுற்றத்தாரிடம் நமது
வருகையைப் பதிவு செய்கிறோம்
நமது செல்லிடபேசி அலறுகிறது
"முன்பதிவு உறுதியாகிவிட்டதாம்.
காதலிக்கு கொரியர் கிடைத்துவிட்டதாம்
காலருக்கும் அதே நிறத்தில் பொத்தான்
வைத்துவிட்டானாம்" ஆகிய நற்செய்திகளில்
திளைத்து சவஊர்வலத்திலிருந்து வெளியாகி
பிரதான சாலையை அடைகிறோம்.
பிறகு காப்பீட்டு முகவரை
அணுகுகிறாம் அதன்பின் ஏற்பட்ட
நாள்படாத நமது மரணத்தை
நாளேட்டில் வாசித்து சலனமடைகிறான்
நமது தளத்தில் இலக்கம் ஆறில்
வசிப்பவன்.
உனது ராஜ்யம்
வெறுமை நிரம்பிய எனது குடுவையில்
மீதமாய் இருந்தது நானும் சதுரங்கப்
பலகையும் அதன் படைகளும் மட்டுமே
எப்போதோ மிச்சம் வைத்த மல்லிகை
வாசத்தையோ மதுக்கோப்பையையோ
தேடி முன்வாசலில் வந்ததாகவே
அறிவித்து பழையபடி உன்இரு
கைகளையும் எதிரெதிர் வீரர்களாக்கி
சதுரங்கத்தை துவக்குகிறாய்
கருப்புநிற சிப்பாய் வலதுபுறமும்
வெள்ளைநிற சிப்பாய் இடதுபுறமும்
என்னை முற்றுகையிட தலா எட்டு
நகர்த்தலில் கைதாகிறேன்
எனது ஆட்டத்தையும் நீயே ஆடிய உன்னை
இப்போதும் வெற்றியாளனாகவே
கொண்டாடுகிறது உனது சாம்ராஜ்யம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|