திருநெல்வேலி ப. சுடலைமணி கவிதை
இரவு பன்னிரண்டு மணி
மகுடாட்ட அண்ணாவி
மாரித்துரை
உக்கிரமாக
பாடிக் கொண்டு
கோமரத்தாடி
முன்பு ஆடினான்
"முண்டமாக பிறந்ததனால்
முண்டன் என்ற
பெயரும் பெற்றான்...
சுடுகாட்டில் பிறந்ததனால்
சுடலை என்ற
பெயரும் பெற்றான்..." என்ற
அண்ணாவியின்
வார்த்தைகளால்
கோபம் கண்களில்
தெரிக்க கோமரத்தாடி
சுடலையின்
சுடுசாம்பல் நோக்கி
ஓடினான்.
ஓட்டத்திற்கு அண்ணாவியால்
ஈடுகொடுக்க இயலவில்லை
தன் இயலாமையைக்
காலில் குத்திய
நெருஞ்சி மீது
சுமத்திவிட்டு
இடையில் நின்று விட்டான்.
ருத்ர தாண்டவ
வெறியில் கோமரத்தாடி
குதூகலித்தான்
மண் கலயத்திலிருந்த
திரலையை அள்ளி
வான வீதியில் எறிந்தான்.
திரலை ருத்ரமூர்த்தியின்
சயனத்தைக் கலைத்தது.
ருத்ரமூர்த்தியின்
விரைப்பான குறியிலிருந்து
வீரியம் குறைந்த விந்து
வெளிப்பட்டது.
ருத்ரமூர்த்தி சாந்தமானான்
சயனம் இழந்த முகம்
வெளிறியது.
கண்களில் கண்ணீர் கோர்த்தது.
இயலாமையை இமைகளுக்குள்
பதியம் போட்டான்.
திரலை எறிந்த
கோமரத்தாடி
கோழி, ஆடு, கருவாடு, முட்டை...
இத்தியாதிகளால்
பிரத்யேகப்படுத்தப்பட்ட
படப்பு சோற்றோடு
சாராய வாடை
சனங்களுக்கு எட்ட
திருநீறு வழங்கினான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|