கவிதைகள் : சக்தி அருளானந்தம்
பெண் மழை
மழையை ரசிக்க
சில நிபந்தனைகள்
திட்டமிடல்கள்
முன் தயாரிப்புகள் தேவை
காய வைத்திருக்கும் துணிகளை எடுக்க
போதிய அவகாசம் தரவேண்டும்
இடி மின்னல்கள் இல்லாதிருக்க வேண்டும்
அலைபேசிகள் வருகைக்குப்பின்
அங்கங்கே நிறுவப்பட்டிருக்கும்
டவர்கள் ஒலி ஒளி அளவைக் கூட்டிவிட்டன.
மழை பெய்ய உகந்த நேரம்
மதியம் மூன்றிலிருந்து நான்கு
அலுவலகத்திலிருந்து கணவரோ
பள்ளியிலிருந்து பிள்ளைகளோ வரமாட்டார்கள்
மஞ்சள் வெயில் ஒளிர்வது நலம்
விரிகின்ற வானவில் கூடுதல் மகிழ்ச்சி
கேபிள் இணைப்பை துண்டித்து
கைபேசியை அணைத்துவிட்டு
மழையைப் பார்வையிட வசதியான இடத்தில்
அமர்ந்து கொள்ள வேண்டும்
சாரல் மழை... சாலவும் சுகம்....
0
நேற்று வரை
கொப்பும் கிளையுமாய்
படர்ந்து நிழலளித்த சாலையோர மரம்
அறுக்கப்பட்டு கிடத்தப்பட்டிருக்கிறது மண்ணில்
அதன் அடித்தண்டு
சீராகத் தறிக்கப்படாத கிளைகளின் முனைகளுடன்
காற்றின் வருடலலிசைகிறது
வாகனமொன்றில் அடிபட்டுக் குடலறுந்து
சாலையோரம் இழுத்துவிடப்பட்ட நாய்
நேற்று வரை பொறை வாங்கிப் போட்டவனின்
வாசனை நுகர்ந்து தலையுயர்த்தி
இல்லாத வாலையாட்ட யத்தனிப்பது போல்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|