தலையங்கம்
பிரியமானவர்களே வணக்கம்!
கடுமையான விலையேற்றம், அடிக்கடி இருளை நேசிக்க வேண்டிய நிர்பந்தம், யாருக்கு? எங்கு? என்று சாமான்யர்கள் யோசித்துக் கொண்டிருக்க, ஆற்று மணல் கொள்ளை போகும் அநியாயமென்று மக்களை இன்னல்கள் நெருக்கிக் கொண்டிருக்க, அவ்வப்போது எங்காவது ஒன்றிரண்டு மனிதநேயச் செயல்களையும் சந்திக்கிறோம்!
கண்முன் நடக்கும் எதுவும் இப்போது பாதிப்பதில்லை என்கிற அளவு எல்லாமே இயல்பாகிக் கொண்டிருப்பது சாதாரண வாழ்க்கையின் முகவரிகளாகிவிட்டன. கவிதையும், கவிதை சார்ந்த விஷயங்களும் துயரங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயத்திலும், துயரங்களுக்கும் முறையற்ற செயல்களுக்கும் சிறு கலகத்தையேனும் நிகழ்த்தவும் வேண்டிய காலகட்டம் இது.
இலக்கியம் குழுச் செயல்பாடுகளாகவும், ஒன்றை அர்த்தமற்று தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், காரணமற்று சிலவற்றை புறந்தள்ளிவிடுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக இருக்கின்றன. இப்படியான நிகழ்வுகள் நல்ல இலக்கியத்தை அறிய நினைக்கும் படைப்பாளியற்ற வாசகனை குழப்பமடையவே வைக்கும்.
வெறும் கூட்டங்களும், அறிக்கைகளும் சமூக மாற்றத்தை உருவாக்க போதுமானதல்ல. கவிஞன் தான் சார்ந்த சமூகத்தின் கண்ணாடியாக இல்லாமல், தனக்குள் தன்னைப் பார்க்கிற அபத்தமாக இருப்பதால் சமூக அவலங்கள் தட்டிக் கேட்பாரின்று வளர்ந்து கொண்டே இருக்கின்றன. கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் கவிதையாக இருக்கிற போது எல்லாமே சரியாகத்தானிருக்கும்! உங்கள் தரமான படைப்புகளை அனுப்புங்கள்...
பிரியமுடன் புன்னகை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|