Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
நவம்பர் 2008

நீர் மிதக்கும் கண்கள் : : ஒரு பார்வை
பொன்.குமார்

படைப்பாளிகள் பல பெயர்களில் எழுதுவதுண்டு. கவிதைக்கு என்று ஒரு பெயரும், கவிதை அல்லாதவற்றிற்கும் ஒரு பெயரும் வைத்து எழுதுபவர் ஒரு சிலரே. பசுவய்யா என்னும் பெயரில் கவிதைகள் எழுதி வந்தார் எழுத்தாளர் சுந்தரராமசாமி. கல்யாண்ஜி பெயரில் வண்ணதாசன். இளமுருகு என்னும் பெயரில் பெருமாள் முருகன். இளமுருகு என்று நிகழ் உறவு, கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் என்று இரு கவிதைத் தொகுதிகளைத் தந்தவர் பெருமாள் முருகன். மூன்றாம் தொகுப்பு "நீர் மிதக்கும் கண்கள்". ஒரு பெயரை உதிர்த்தலின் வலி இருக்கத்தான் செய்கிறது. எனினும் பெயரைக் காலத்திற்கும் தூக்கிச் சுமக்க வேண்டிய துயரத்திலிருந்து விடுபாடும் கிடைக்கிறது. வலியும் மகிழ்வும் இணைந்த தருணம் இது." என பெருமாள் முருகனே எழுதியிருப்பது வலியை உணரச் செய்கிறது. ஒரு பெயரை நிறுவச் செய்வதும் கடினம். அப்பெயரை விடுதலும் கடினம். பெருமாள் முருகன் இளவயதிலேயே இலக்கிய ஆளுமை கொண்டவர். கவிதையையும் நுட்பத்துடன் படைக்கும் வல்லமையாளர்.

எல்லோரையும் அழைக்கிறேன்
எனது வீட்டிற்கு
என எனது வீடு என்னும் முதல் கவிதையிலேயே வாசகர்களுக்கு அழைப்பு டுத்துள்ளார். "வீட்டைத் தொலைத்தல்" முந்தையதிலிருந்து மாறுபடுகிறது. வீட்டைத் தொலைக்க விரும்புகிறார். வீடு குறித்தானாலும் வேறு வேறாக உள்ளன. வாழ்வின் தீராத கசப்பாக வெளிப்பட்டுள்ளது.
"நேர்ச்சி"யும் வீடு பற்றியே பேசுகிறது.

எதையாவது விட்டுச் செல்வதே
வழக்கமாயிற்று உனக்கு
என்று நேர்ப்பேச்சாக எழுதி எதை விட்டுச் சென்றாலும் பத்திரமாய்த் திருப்பித் தந்துவிடும் கவிஞர்
இப்போது விட்டுச் சென்றிருக்கிறாய்
நீர் மிதக்கும் கண்களை
என அதிர்ந்து திருப்பித் தர முடியாத நிலையிலுள்ளதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதைத் தலைப்பு "நீர் மிதக்கும் கண்கள்" இதுவே இத்தொகுப்பின் தலைப்புமாகும். "கண்டடைதல்" முரண்பட்டு வியக்கச் செய்கிறது. சிரிப்பின் பல்வேறு நிலைகளிலும் கவிஞர் தன்னை பொருத்திப் பார்க்கிறார்.

இத்தொகுப்பில் "மரம்" ஒரு தனக்கான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. சாலை மரம், அழைப்பு, பரிசாடை, மயானத்தில் நிற்கும் மரம், வேம்பின் பாடல் ஆகியவற்றில் மரம் குறித்த பதிவுகள் உள்ளன. ஒரு மரமாகவே தன்னை பாவித்து எழுதி உள்ளார். ஒவ்வொருவர் இறப்பின் போதும் ஒவ்வொரு பருவத்தைக் காட்டியுள்ளார். இக்கவிதை "மயானத்தில் நிற்கும் மரம்", "வேம்பின் பாடல்" கவிஞரின் வாழ்வில் மரம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள என கவிதைகள் காட்சியாய் உள்ளன. "ஒற்றைப் பனை"யோ காட்சியாக விரிகிறது. அழகியலோடு "ஒற்றைப் பனை"யைக் கண்முன் நிறுத்துவதில் கவிஞர் வெற்றி பெற்றுள்ளார். மரத்தைத் தொடர்ந்து மனத்தைச் சில்லிட வைத்தது "மழை". மழை குறித்தான தன் எண்ணத்தை, தன் அனுபவமாக வெளிப்படுத்தியுள்ளார். இக்கவிதை "உடைபடும் கணம்". மழை பற்றிய முரணானவையும் உண்டு. மழை, பெருஞ்சுமை, மழைச் சொற்களும் மழைக் கவிதைகளே. "மழைச் சொற்கள்" நல்ல சொற் கூட்டணி. "பரிசாடை"யும் அவ்வாறே. "மழைக்காலத்து நிலா"வும் மயக்கமுறச் செய்கிறது. நிலா குறித்த இன்னுமொரு கவிதை "இன்னுமொரு நிலவுப் பாடல்".

அவலங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு கவிஞனின் கடமை. அரசியலே அதிகபட்சம் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. ஒளிமூலம், விரல்கள், வாக்குகள் என்னும் கவிதைகள் அரசியலை எதிர்க்கின்றன. ஆதிக்கத்தை தகர்க்க முயல்கின்றன. "ஒளிமூலம்" மூலம் இந்துத்வாவை, மதவாதத்தை விமர்சிக்கிறார். "மறந்து விடவேண்டும்" என்பது வேதனையின் வெளிப்பாடு.

கட்டைவிரல் வெட்டி
குருவுக்குச் சமர்ப்பித்தோர் எம்முன்னோர்.
சுண்டு விரல் தறித்து
காணிக்கை தந்தோம் நாங்கள்
எதிர்கால சந்ததிக்கு இருக்கின்றன
இன்னும் மூன்று
என்னும் விரல்கள் ஆதிக்கச் சக்தியினை அடையாளம் காட்டுகிறது. இன்றும் ஆதிக்கம் தொடர்கிறது என்கிறது. கவிஞரின் வன்மையான குரல் இல்லை. மென்மையை உள்ளது. இதே மென்மையான குரலோடே ஒலித்துள்ளன இத்தொகுப்பிலுள்ள "சிருஷ்டி", "குழந்தையைத் தண்டித்தல்", அப்போதிருந்து", "கண்கள்" ஆகியவை. இவைகள் குழந்தைத் தொடர்பானவை.

"எங்கே உன் பள்ளிக்கூடம்?" என்றேன்.
வினோதமாக என்னைப் பார்த்த அவன்
முகம் சுருங்கச் சொன்னான்
"இது பள்ளியில்லா நகரம்"
என முடியும் "சிருஷ்டி" குழந்தையின் உலகத்தோடு கல்வித்தரத்தையும் சுட்டுகிறது.

குழந்தைக் கவிதைகள் மூலம் ஒரு புதிய பாடத்தை அனுபவமாகத் தந்துள்ளது நன்று. பெருமாள் முருகனின் கவிப்புலமை குழந்தை உலகில் மிக எதார்த்தமாக பிரவேசித்துள்ளது. குழந்தைகளின் மீதுள்ள பிரியத்தாலே இத்தொகுப்பை "இளம்பிறைக்கும் இளம்பரிதிக்கும்" சமர்ப்பித்துள்ளார். குழந்தைகள் குற்றம் புரிகின்றன என எழுதியவர் "என் தவறுகள்" மூலம் தன் தவறுகளையும் கவிதையாக்கித் தந்துள்ளார். மனந்திறந்து தன்னை வெளிப்படுத்தியுள்ளார். எளிமையாகவே உள்ளது. இது தன்னிலை குறித்த கவிதை. குழந்தைகள் தொடர்ந்து அப்பா குறித்தானது "அப்பாவின் வேலி". அப்பாவிற்கும் தனக்குமான இடைவெளியை நன்கு காட்டியுள்ளார். சிறுகதைப் பாணியில் தொடரும் கவிதை முரண்பாட்டை முன்னிறுத்துகிறது.

"அம்மாவின் ரேகை" அழுத்தமானது.
பெரிய அதிகாரியாய் என்னைப் பாவித்து
கூசிச் சிரிக்கும்
தாளில் உருட்டும் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு வடிவமாகிறது
அம்மாவின் ரேகை
என்னும் வரி நெகிழ்த்துகிறது. அனுபவத்தை ஒரு கவிஞரின் மன நிலையோடு அருமையாக, அசலாக தந்துள்ளார். "விடுபடல்" தந்தை, தனயன் பற்றியதானாலும் வாழ்க்கை தன் மீது எவ்வாறு சுமத்தப்படுகிறது என சுட்டுகிறது.

வீடுகளில் சுவர்ப் பிதுங்கலில்
செதுக்கிய கற்கள்
எனத் தொடங்கும் "கல் மலிந்த ஊர்" எங்கும் கல் நிறைந்த உள்ளது என்கிறது. ஆனால் "சுடுகல்" மனிதநேய வெளிப்பாடு. "புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய கவிதை".

எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது இலக்கிய உலகத்தில் ஒரு கணிப்பு இருக்கிறது. ஒரு ம-திப்பு உள்ளது. அந்த கணிப்பையும் மதிப்பையும் தக்க வைத்துக் கொள்கிறது "நீர் மிதக்கும் கண்கள்" என்னும் இத்தொகுப்பு. தொகுதிக்குத் தொகுதி நுட்பத்தைக் கூட்டி ஒரு கவனிப்பையும் உண்டாக்கச் செய்து விடுகிறார். இயற்கை, உறவு, சுயம், குழந்தைகள் என தன் கவிதையின் எல்லையை விரியச் செய்துள்ளார். எளிமையும் இருண்மையும் இவர் கவிதைகளில் காணப்படும் இருநிலை. உறவுகள் குறித்தானவைகளில் உணர்வுகளை துல்லியமாய் வெளிப்பட்டுள்ளன. ஒரு வாசகனாய் தொகுப்பில் நுழைந்தால் வெளியேறும் போது ஒரு கவிஞனான எண்ணம் ஏற்படுத்தம் இயல்பு மிக்கதாயுள்ளன கவிதைகள். கவிதைகள் அனுபவமாயிருந்தாலும் புனைவாகவே உள்ளன. நவீனம் பேசப்படும் இக்காலகட்டத்தில் பெருமாள் முருகன் எதார்த்தத்தை இத்தொகுப்பில் முன்னிறுத்தி வெற்றியும் பெற்றுள்ளார். எதார்த்தத்தையும் வெற்றிப் பெறச் செய்துள்ளார்.

நெஞ்சில் மிதக்கும் கவிதைகள்...
நீர்மிதக்கும் கண்கள், பெருமாள் முருகன், வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001, விலை : ரூ, 50.00

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com