இரவுக் கவிதைகள் மூன்று
நிலா ரசிகன்
1
விசித்திரமானதொரு சத்தம்
ஜன்னல் வழியே
கசிந்து கொண்டிருந்த நடுநிசியில்
விறைத்து நடுங்குகின்ற
உடலுடன் ஜன்னல் நோக்கி
மெல்ல நகர்ந்து எட்டிப்பார்த்தேன்
இருளின் கருமையை
உடுத்திக்கொண்டு
சோற்றுப்பானைக்குள் புரண்டு கொண்டிருந்தது
என்னை ஒத்த பூனையொன்று.
2
கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கௌவிப் பறந்தது...
விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்...
முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீசிச்சென்றது
அப்பறவை...
நெஞ்சில் ஏறத்துவங்கின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.
3
தெரு நாய்களின் நகக்கீறல்களால்
கதறிக் கொண்டிருந்தது
தகர குப்பைத் தொட்டி...
நைந்த புடவையொன்றில்
குளிர் தவிர்க்க இயலாமல்
முனகிக் கொண்டிருந்தாள்
பிச்சைக்காரி ஒருத்தி...
மரக்கிளையில்
சிருங்கார சப்தம் எழுப்பி
புணரத் துடித்தன
தேன்சிட்டுகள்...
விதவிதமான சப்தங்களுடன்
மௌனத்தால்
உரையாடியபடி நீண்டு
செல்கிறது இரவுத்தெரு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|