கவிதைகள் : கணேசகுமாரன்
எல்லாமுமாய்
ஆகாயமாய் இருந்திருக்க வேண்டும்
அதன் நிலைத்த விஸ்தீரணம் உறுதி
பறவையாகவாவது இருந்திருக்கலாம்
பறந்து பறந்து அளந்து அளந்து
தீரா தேடல் நிச்சயம்
ஒரு நீர் நிலையாகவாவது...
திரிந்த பறவை தாகம் தீர்க்கவும்
நீலவானம் முகம் பார்க்கவும்...
எதுவுமின்றி மனிதனாக
எல்லாமுமாய் கவிஞனாக...
0
அஞ்சலி
அடர்த்தியான பெரும் சோகம்
சூழ்ந்திருக்கிறது
உனது சிரிப்பும் மௌனமும்
ஞாபகத்திலாடுகிறது
வேறெதுவும் இருப்பில் இல்லை
இயல்பு மறைந்த நகரத்தில்
யாரோ ஒருவன்
வீதியெங்கும்
சாம்பல் பூக்கள் வீசிப்போகிறான்
நான்கு நொடிகள் நின்று புறப்படும்
ரயில்களின் அமைதி
நடுக்கமேற்படுத்துகிறது
இப்போதைக்கு பிரமீள் வாசிக்கிறேன்
கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது
நாளை மாலை நான்கு மணிக்குள்
எழுதப்பட்டுவிடும் உனக்கான
கவிதையன்று
அம்மழையை பெய்யச் செய்யும்.
0
கதவு
திறந்திருந்த அக்கதவின் வழி
சாலை தெரியும்.
நிறைய மனிதர்கள்
வாகனங்கள், ஆடு மாடுகள் அனைத்தும்
யார் திறந்து வைத்தார்களோ
கோடிப் புண்ணியம் அவர்களுக்கு.
சில அற்புத தருணங்களில்
மழையும் பார்ப்பதுண்டு.
நனைய முடியாத மழையை
பார்த்து ரசிக்கலாம் வாழ்வை.
இறுதியாய்
கண்கூசும் வெயில்
நீண்டு கொண்டிருந்த மதியத்தில்
யாரோ என்னிரு கண்ணிமைகளை
மென்மையாய் மூடினார்கள்.
அதன்பின்
அக்கதவு
என்னவாயிற்றென்றே தெரியவில்லை.
0
தரிசனம்
பனி படர்ந்த
இரும்புத் தண்டவாளங்களில்
பச்சை நரம்பிலிருந்து
கசிந்த இரத்தம்
படிந்து கொண்டிருக்கிறது.
அமானுஷ்யமான
ஏதோ ஒரு நரியின் அலறலில்
புதிதாய் ஒரு பிணத்தின் வாடை.
சற்றே என் இருப்பிலிருந்து
சரிந்து மடியுமுன்
யாரோ என் தோளைத் தொட
சட்டென்று திரும்பினேன்.
கடவுள் நின்றிருந்தார்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|