தொலையாத காதலின் முகவரி
க. அம்சப்ரியா
மென்மையும், இளமை ததும்பும் புத்துணர்ச்சியுமாக காதலாகி, கசிந்துருகி கவிதையல்ல... காதல் என்று முதல் தொகுப்பின் மூலம் பரவலாக காதல் மனங்களில் கவனத்துக்கு வந்தவர் பொன்.சுதா. காதல் கவிதைளில் இரண்டு வகை உண்டு. உண்மையிலேயே காதல் வயப்பட்டு, ஆத்மார்த்தமாக உணர்ந்து, அதன் சிலிர்ப்பையும் வலியையும் கவிதைகளாக பகிர்ந்து கொள்வது. இல்லாத காதலியை / காதலனை இருப்பதாக பாவித்துக் கொண்டு எழுதுவது. காதலாக இருந்தாலும், வேறாக இருந்தாலும் கவிதைத் தளத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்து படைக்கப்படும் கவிதைக்கு எப்போதும் வலிமை உண்டு.
அந்த வகையில் காதலுக்கு பிறகான தன் அனுபவ வெளியை தனக்கே உரிய மென் சொற்களால் "நானும் நீயும் நாமான போது..." தொகுப்பைத் தந்திருக்கிறார் பொன்.சுதா. காதல் திருமணங்கள் வெற்றிகரமான இல்வாழ்க்கையாய் அமைவதற்கு காதல் காலத்தைவிட கூடுதலான புரிதலும் விட்டுக் கொடுத்தலுமான அன்பு வேண்டும். அவ்வப்போது ஏற்படுகிற பிணக்குகளும், ஊடல்களும்கூட சகிக்கத்தக்கவைதான்! இதைத்தான் இந்தக் காதல் தொகுப்பு முன் வைக்கிறது.
இம்மாதிரியான காதல் தொகுப்புகளுக்கு அட்டைப்படம் கை கொடுக்கவேண்டும். அதை நிறைவேற்றியிருக்கிறது இத்தொகுப்பின் அட்டைப்படம்.
காதல் காலத்தில் தன்னவளை ரசிப்பதற்கும், மனைவியானபின் ரசிப்பதற்குமான இடைவெளிதான் காதலை நிரந்தரப்படுத்துகிறது. அதனால்தான் கவிஞர்,
அருவி நதியானது போல
காதல் திருமணம்
கடல் சேரும்வரை
இன்னும் இருக்கிறது
பயணம்
என்று உள்ளத்திலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது.
செல்போன் வந்தபின் கடிதம் எழுதுவதே அருகிவிட்டது. அதிலும் காதல் கடிதங்கள் குறும் செய்திகளிலேயே முடிந்துவிடுகிறது. இவருடைய காதல் செல்போன் காலத்திற்கு முந்தையது. எப்போதும் படித்து படித்துச் சுவைக்கத் துணையாய் இருப்பது காதல் கடிதங்கள்தான் என்பதை இவரின் கவிதைகள் நிலைநிறுத்துகின்றன.
திருமணத்தில் தொலைந்து போகிற காதலையும் அடையாளப்படுத்துகிறார். காதலை காதலோடு சுவாசிக்கிறவர்களுக்கும், காதல் திருமணத்திற்குப்பின் தங்கள் காதலை தொலைத்து விடாதவர்களுக்குமான ஒரு இனிய தொகுப்பு இது.
நூல் : நானும் நீயும் நாமானபோது... பொன்.சுதா
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை. விலை : ரூ.30/
பேச : 9444324316
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|