|
உயிர்காக்கும் வல்லமை
இளங்கவிஅருள்
எனக்கு முந்தைய சகோதரன்
இனப்படு கொலையை
வன்கொடுமையின் உச்சத்தை
தன் குருதியால் எழுதியிருந்தான்
புறநானூறாகவும், அகநானூறாகவும்
என் கண்முன்னே
எரிக்கப்பட்ட உடம்புகளையும்
கொளுத்தப்பட்ட நூல்களையும் பார்த்தபின்
எந்த மரணமும்
எந்த இலக்கியமும்
புதிதல்ல எனக்கு
உலகம், ஊர், உடமை, உடல்
உயிர்காக்கும் வல்லமை
கவிச்சொற்களுக்கு உண்டென்று
சொல்லித் தந்தவன் அவனே.
தனி ஒருவனுக்காக போராட
போர்த்தொழில் பழக
மதுவை, மங்கையை, மரணத்தைக் கொண்டாட
சொல்லித் தந்தவன் அவனே.
அவனை நானாகவும்
என்னை அவனாகவும்
ஆக்கத் துடிப்பது
கொள்கையில் கேடேல் என
உச்சரிக்கும் குழந்தையைப் போல...
பூனைகளின் ரகசியம்
எங்கள் ஊரில்
பூனைகள் அதிகம்
அதன் கொடூரத்தைப்
பதிவு செய்தே ஆகவேண்டும்
பூனைகள்
சமீப காலமாய்
உலக அரசியலும்
உடல் அரசியலும்
பேசுகின்றன
பூனைகள்
எனக்குப் பிடிக்குமென்பதால்
கொஞ்சியும், கெஞ்சியும்
வதைத்தும், உதைத்தும்
பலமுறை நனைத்தும்
விட்டவன் நான்.
அதன் நடை
கூரிய நகங்களால் ஆனதென்றும்
அதன் கண்ணுக்கு
ஆவிகள் தெரியுமென்றும்
அதன் சத்தம்
சிம்பொனியை மிஞ்சுமென்றும்
அதன் வாசம்
ஆணை அலைக்கழிக்குமென்ற
ரகசியம் அனைவரும் அறிந்ததே
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|