காதல் கடலுக்கான...
ஆ. தாமரைத்தமிழ்நிலவு
கற்பனைக் கடலில்
என்னை மூழ்கவைத்து
முத்துக்களெடுக்க வைக்கிறாய்
கனவுகளாய்...
உள்ளமிரண்டும் மோதிமோதி
என்னுள்ளும் உன்னுள்ளும்
ஊற்றாகக் கிளம்பும்
உணர்வுகள்...
இருவரின் பேனாக்களும்
எப்பொழுதும் உறங்காமல்
விழித்தே கிடக்கிறது
உன்னைப் பற்றியதையும்
என்னைப் பற்றியதையும்
வெள்ளைத் தாள்களில்
நிரப்பிக் கொண்டு...
உனது ஊரின் அஞ்சல்காரரும்
எனது ஊரின் அஞ்சல்காரரும்
மனப்பாடமாக்கிக்கொண்டனர்
இருவரின் முகவரிகளையும்...
எதிர்ப்புகளையும் தாண்டி
தடைகளையும் உடைத்து
சேமித்துக் கொண்டுதானுள்ளோம்
நம் காதல் கடலுக்கான
நம்பிக்கை முத்துக்களை....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|