ஊர் சுற்றும் ஆறு
பொ.செந்திலரசு
அன்றொரு நாள்
நீர் கரைத்த மணல் வீட்டின்
விலாசம் தேடி
பால்ய கதைகள் பயணிக்கும் காற்றுதிர்ந்த
நீரிலைமேல் பல வாலிபக் கதைகள் மிதந்துறங்கும்
சிற்றிலை எழுப்பும்
தவளைக் கல்லென
குளித்துலர்த்தியப் பெண்களின் பருவக் கதைகள்
தத்தித் தத்தி ஆழப்புதையும்
கால்கள்மென்ற பாலத்தின் கீழ்
பரிசல் பயணக்கதைகள்
சிலவும்
நீர்ப்பாம்பென நெளியும்
கரையோரம்
துவைத்துப் பிழியும்
பெரிசுகளின் தீராக் கதைகள்
கூழாங்கற்களிடை
ஒளிந்தோடும்
நுரைக்கண்கள் நிறைக்க
வசந்தம் முழுமைக்கும்
இப்படி
வற்றாக் கதைகள்
கழித்துப் பிரவகிப்பினும்
இன்னும்
சொல்லாகதையொன்றைத் தேடி
ஊர்விளிம்பில்
சுற்றித் திரிகிறது
எங்கள் ஊர் ஆறு.
(வடுவேட்டை தொகுப்பிலிருந்து)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|