வாசனை
இ.தி நந்தகுமாரன்
பால்நிலவை இரவில்
பார்க்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது
பால்வடிந்த குழந்தைப்
பருவத்தின் மழலை வாசனை
பழைய நூல்களை
புரட்டும்போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது
பாட நூல்களில் எப்போதோ
ஒளித்து வைத்த
மயில் இறகுகளின் வாசனை
சாலைகளில் பள்ளிகளை
பார்க்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது
பள்ளிப்பருவத்தில்
அம்மா ஆசையாய்க் கொடுத்தனுப்பிய
தயிர் சோற்றின் வாசனை
எங்கு சென்று வாழ்ந்தாலும்
எப்போதும் நம்முடன்
சேர்ந்து கூடவே பயணிக்கிறது
பிறந்த ஊரின் மண்வாசனை
எந்த ஊருக்குச் சென்றாலும்
என்னை புத்தகக் கடைக்கு
அழைத்துச் செல்கிறது
ஏதாவது ஒரு
நூலின் வாசனை
நான் இதுவரை சந்தித்த
எந்தப் பெண்ணிடமும்
இதுவரை கண்டதில்லை
அம்மாவின் அன்பு வாசனை.
பின்தொடர்தல்
மனிதனைப் பின் தொடரும்
நிழலைப்பின் தொடர்கிறது
சூரியனின் கதிர்
பூக்களின் வாசனையை
பின்தொடரும்
காற்றைப் பின்தொடர்கிறது
நிலாவின் வெளிச்சம்
கடல்நீரைப் பின்தொடரும்
அலைகளைப் பின் தொடர்கிறது
காற்றின் ஓசை
வாழ்க்கையைப் பின்தொடரும்
மனிதனைப் பின்தொடர்கிறது
புதிய அனுபவம்
எண்ணத்தைப் பின்தொடரும்
செயலைப் பின்தொடர்கிறது
உண்மையான வெற்றி
தேவையைப்
பின்தொடரும்
தேடலைப் பின்தொடர்கிறது
புதிய கண்டுபிடிப்பு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|