உறுதியான ஹெல்மெட் - தெளிவில்லாத அரசு
பொள்ளாச்சி திலகவதி
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்கிற வாக்கியம் என்றும் மார்க்கண்டேயன் மாதிரி இளமையாக இன்றுவரை காட்சியளிக்கிறது. விபத்துகளில் அடிபடுகிறவர்கள் மரணம் பெரும்பாலும் தலையில் அடிபடுவதாலே நிகழ்கிறது.
விபத்துகளில் உயிரைக் காப்பாற்றுவதில் ஹெல்மெட் பெரும்பங்கு வகிக்கிறது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இதை அரசு கையாளும் முறைதான் நகைப்புக்குரியதாயிருக்கிறது. 2007 ஜுன் முதல் முக்கிய நகரங்களில் ஹெல்மெட் கட்டாயமாக அணியவேண்டும். இருசக்கர வாகனங்களின் பின்பு உட்கார்ந்து செல்பவர்களும் (குழந்தைகள் உட்பட) ஹெல்மெட் அணியவேண்டும் என்கிற சட்டத்தை சுமார் 3 மாதங்களுக்கு முன்பே அரசு அறிவித்தது. ரூ.450 விலையுள்ள ஐ.எஸ்.ஐ முத்திரையுள்ள ஹெல்மெட், மே மாத இறுதியில் ரூ.1350 வரை வெளிப்படையாக கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது. தினக்கூலிக்கு சென்று வயிற்றைக் கழுவிவரும் எத்தனையோ தொழிலாளர்களும் அநியாய விலை கொடுத்து ஹெல்மெட் வாங்கினர்.
ஒன்றாம் தேதி அமுல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், 2ம் தேதி மாலையே தன் ஆயுளை முடித்துக்கொண்டது. ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தது. ஹெல்மெட் அணிவது அணியாதது இங்கே பிரச்சனையல்ல! அரசு ஒரு சட்டத்தை இயற்றுவதும், அதன் ஆயுள் 48 மணி நேரம்கூட இல்லை என்பதும், அரசின் செயல்பாடுகளில் தெளிவில்லாத தன்மையையே காட்டுகிறது. ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் முன், அதன் நன்மை, தீமை, எதிர்கால நலன், நடைமுறைப்படுத்தும்போது எழும் நடைமுறைச் சிக்கல்கள் ஆகியன குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள, தினக்கூலிக்குச் செல்லும் தொழிலாளர்கள், அளவான வருமானத்தில் குடும்ப பட்ஜெட்டோடு போராடிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கத்தினர்கள் அனைவரும் அரசின் உத்தரவுக்கு பணிந்து ஹெல்மெட் வாங்கியபின் பயனற்று வீட்டின் ஒரு மூலையில் காட்சிப்பொருளாய் வைத்திருப்பது அவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் செயலல்லவா-?
மக்களை பாதிக்கும் வகையில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதும், பின் அதைத் திரும்பப்
பெறுவதும் ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|