முகமூடி அணிதல்
பொ. செந்திலரசு
கால்கள் மேயும் சாலையை
அவசரம் தரித்துக் கடக்கையில்
எனக்கும் முளைத்துவிடுகிறது அரூபமுகம்.
அறுந்த உறவொன்றினை
அரூபத்திலிருந்து
ஞாபகித்துவிடுகிறாள்
எதிரிடும் மூதாட்டியருத்தி.
வெட்டுற்ற வாலொன்றின் இசைக்குறிப்போடு
நடுக்கம் சொட்டும் குரலில்
சமீபக்குமவளின்
நிராசையில் மிதக்கிறது அரூபம்.
அவள் நினைவுகள் செரித்த முகம்
இதுவல்லவென
கணநேர அறுதியிடலுக்குப் பின்
சக்கரத்தில் மிதிபடும்
சாலைப்பள்ளத்து நீரென
எனது சுயம் சிதற நழுவுகிறாள்
நிராகரிப்பின் பிரக்ஞையற்று.
சிதறிய சுயத்தை அள்ளிக்கொண்டு
இன்றுவரை
நானுமலைகிறேன்
முதிய கண்களில் வழிந்தோடிய
முகம் தேடி
வலியியற்றும் முகமூடியணிந்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|