ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்....
என்னிடம்
ஒரு
துண்டு பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை.
இரவு;
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்;
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில்கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்;
இந்தச் சமூகத்தின் தொப்புள்கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உக்காரக்கூடிய
வண்ணத்துப்பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே.
நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது.
- சிவரமணி
காத்திருப்பு
உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.
உனது குரலில் அன்பை அனுபவிக்க
ஏங்கித் தவிக்கிறது மனம்.
பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும்
நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம்.
கால நீட்சியில் உனது கோலத்தில்
எழில் கூடியிருக்கும் என்று
நினைக்கிறேன்
இத்தனை காலப் பிரிவினால் நீயும்
என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம்.
நேரில் பேச வேண்டிய செய்திகளை
சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை
மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை
எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள்
வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும்
தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு.
பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய்
உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும்
உனது கனிவான பார்வையே போதும்
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க
உன்னைப் பற்றிய கனவுகளில் வாழ்வதால்
வாழ்க்கையை இனிமை நிறைந்ததாய் உணர்கிறேன்.
நானும், உனக்கான எனது கவிதையும்
வழமை போலவே காத்துக் கொண்டிருப்போம்
எங்களத காத்திருப்பு ஒருபோதும் முடிவடையாது
ஏனெனில்,
நீ இல்லாமல் போய்விட்ட செய்தியும்
உன்னைப் போலவே இரகசியமானது
என்பதுடன் பெறுமதியும் வாய்த்தது.
- சூரியநிலா
(ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.... பெயல் மணக்கும் பொழுது தொகுப்பிலிருந்து...)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|