பசியின் இறைவன்
பொ. செந்திலரசு
பசியின் நாடகத்தை மிகநவீனமாக
அரங்கேற்றுகிறான் இறைவன்
தெருவோர உணவகத்து
நீர் தெளித்துப் பெருக்கிய கல்மேல்
ருசியோடு தணிகிறது பரோட்டா.
சுவைக்குக் கீழ் படிந்து எல்லோரும்
நாவை சாந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தெருவில் நின்றபடி
பார்வையில் தின்னுமவனை
யாரும் பிரக்ஞைப்படுத்துவதில்லை
விரட்ட எத்தனிக்கும்
அவ்வுணவக வேலையாள் தவிர.
ஆஃபாயில் நடுவில்
அலைவுறும் மஞ்சள் கருவென
வெறுமையும் பித்தும் நிறைந்து தளும்புமவனை
மொய்க்கிறது பசி.
நீளும் விரட்டலில் பெரும் தயக்கத்துடன்
அவ்விடம் நகர்கிறான்
கழுவிய கைகளில்
எண்ணெய்ப் பிசுப்பென ஒட்டிக்கொண்டு.
பசியாறியோர் அவனை
அழுந்தத் துடைத்தகல
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது
திரைசீலை மெல்லிறங்க
பசியின் இறைவன் அவனேயாகிறான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|