தலையங்கம்
பிரியமானவர்களே...
வணக்கம்.
மக்களிடமிருக்கிற சிறிதேனும் அறிவையும் ஒழுக்கத்தையும் விட்டுவைக்க மாட்டோம் என்பதில் மிகத்தெளிவாக செயல்படுகின்றன ஊடகங்கள். ஆட்டங்களும் பாடல்களும் மிக மோசமான தன்மையையே கொண்டிருப்பதும் அதைக் குடும்பமே அமர்ந்து பார்ப்பதும், நாம் இப்படி மாய்ந்து மாய்ந்து அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
விவசாய நிலங்கள் யாவும் வீட்டு மனைகளாவதும், விவசாயத்தின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மில்கள் கைப்பற்றிக் கொண்டிருப்பதும் ஆரோகியமானதல்ல.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைத் தொழிலாளர் நிலை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது சுமங்கலித் திட்டம். இன்னும் திருமணங்களை முன்னிறுத்தி பெண்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இலக்கியம் இனி இவர்களுக்கான குரலை எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். கல்வியை, சுய ஒழுக்கத்தை, வாழ்வின் கனவுகளை, எதிர்காலத்தை நவீன அடிமைத் தனத்திற்கு காவு கொடுக்கக் கிளம்பியிருக்கும் இச்செயலுக்கு எதிராக பெண் படைப்பாளிகளும் முன்வரவேண்டும்.
ஏராளமான கவிதைத் தொகுப்புகள் வரத்துவங்கியுள்ள சூழ்நிலையில் ஒருசில தொகுப்புகளே எல்லாப் பத்திரிகை விமர்சனங்களிலும் இடம்பெறுவதும், பல தொகுப்புகள் வரப்பெற்றோம் என வெறும் முகவரியாக பிரசுரமாகவும் நேர்ந்துள்ள சூழ்நிலையில் தொடர்ந்து சில தொகுப்புகளையேனும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த இதழ் விமர்சனச் சிறப்பிதழாக வெளியாகிறது.
தற்காலிகமாக காலாண்டிதழ் என்றாகிறது. கூடுதல் பக்கங்களைக் கொண்டும் விமர்சனத்திற்கும் நூல் அறிமுகத்திற்கு முக்கியத்துவம் அளித்தும் வரவிருக்கிறது. புதிய நூல்களின் விமர்சனத்தை யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|