பட்டாம்பூச்சி
ஒண்டிப்புதூர் தேவமணி
பறந்துவிடு
பட்டாம்பூச்சியே
பாடகன் வாயில் விழுந்ததுபோதும்
எங்கோ பறந்து ஓடிவிடு
உன் றெக்கைகளைப் பிடுங்கி
அதன் வண்ணங்களை மனதில்பூசி
துண்டாடிவிடுவார்கள்
உன் முத்தங்களும் முனகல்களும்
எங்கோ நிர்ணயிக்கப்படுகின்றனவாம்
வானத்தையும் பூமியையும்
உன் பயணம் நிறைவு செய்யாது
நட்சத்திரங்களும் கோள்களும்
உனக்கு வழிவிடாது
பொன்வண்டுகளும்
உன்னை வீழ்த்தப்பார்க்கும்
இறுதியில் இலுப்பைப் பூவில் வீழ்வாய்
எண்ணங்களில் தேரோட்டி
ஏமாந்து போகாதே
வானத்துக்கு மேலே
ஓர் இடம் இருந்தால் கண்டுபிடி
அங்கே கடவுளர்கள் இருந்தால் திரும்பிவிடு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|