இவர்கள் பெரியாரைப் பார்த்திராதவர்கள்
குருவிக்கரம்பை வேலு
(திருப்பூரில் நடந்த விழாக்களில் முழுமையாகப் பங்கேற்ற சுயமரியாதைத் தோழரும், குத்தூசி குருசாமி வரலாற்று ஆசிரியருமான 75 வயது நிறைந்த தோழர் குருவிக்கரம்பை வேலு, விழாவைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை)
தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருப்பூரிலே தனக்கென தனி முத்திரை பதித்து விட்டது. இம்மாதம் 1-ம், 2-ம் தேதிகளில் தந்தை பெரியார் தி.க.வின் செயல் வீரர்கள் திருப்பூரை கருப்பூராக மாற்றிவிட்டார்கள். இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் நான் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொண்டேன். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கருஞ்சட்டையணிந்தவர்களின் ஊர்வலத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டபடி, பெரியார் திராவிடர் கழகத்தின் கொடியை உயர்த்தித் தாங்கி வந்த காட்சியானது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நான்கு வயது மழலையர் தொடங்கி 15 வயது குழந்தைகள் வரை உள்ள நூற்றுக்கு மேற்பட்ட இருபாலரும் ‘பெரியார்’ வேடமிட்டு ஊர்வலத்தில் முன் சென்றனர். அக்காட்சி பெரியாரே அவ்வூர்வலத்தை முன் நின்று நடத்திச் செல்வது போல் இருந்தது என்றால் அது மிகையாகாது.
அவ்விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதினர். அவர்கள் எவருமே பெரியாரைப் பார்த்திராதவர்கள். ஆனால் அவருடைய கொள்கைகளை நன்கு படித்துப் புரிந்து அதன்படி நடப்பவர்கள். அவர்களை வழி நடத்திச் சென்றவர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டனர். திருப்பூரில் பார்ப்பனர் இல்லை. ஆனால் அவர்களின் அடிவருடிகள் பி.ஜே.பி.யின் பனியன்களை அணிந்து கொண்டு, மார்வாரிகளிடம் மாட்டிக் கொண்டு கிடப்பதாகப் பல நண்பர்கள் என்னிடம் கூறினர். உள்ளம் வருந்தினர். உள்ளூர்வாசிகள் என்னிடம் கூறியது, “பெரியார் திராவிடர் கழகம், மேற்கண்டவர்களை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பெரியார் திராவிடர் கழகத்திற்கு திருப்பூர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது’ என்றனர். அவர்கள் சொல்லியது 100க்கு 100 உண்மை. இவ் விழாவிலே மேலும் ஒரு சிறப்பு, பத்துக்கு மேற்பட்ட முற்போக்குக் கருத்துக்கள் தாங்கிய மொத்த விற்பனையாளர்கள் “பூணூலு”க்கு எதிரான “நூல்”களை விற்றுக் கொண்டிருந்த காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது. குத்தூசியார் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் மட்டிலும் ரூ.7500-த் தாண்டியது என்றால், பெரியாரின் நூல்கள் எவ்வளவு விற்பனை ஆகியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
என்னைப் பொருத்தவரையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய குத்தூசி குருசாமி - புலவர் குழந்தை ஆகியோரின் நூற்றாண்டு விழா அக்கழகம் மேலும் வளர்வதற்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது. மக்களிடையே அக்கழகத்திற்கு நல்லதொரு நம்பகத்தன்மையையும் ஊட்டியிருக்கிறது என்பதை நான் நேரிலேயே கண்டேன். கேட்டேன். உணர்ந்தேன். லெனின் தொடங்கி காந்தியார் வரை ஓர் இயக்கம் வளர்வதற்கு அவ்வியக்கங்களின் தொண்டர்களின் உழைப்பும், அதனை நடத்திச் செல்லுவோரின் தளராத நம்பிக்கையும், தான் அடித்தளம் என்றார்கள். ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ மேற்கண்ட கருத்தை நினைவில் கொண்டு செல்லுகிறது. எனவே சுயமரியாதைக் கொள்கையும், பொதுவுடைமைக் கொள்கையும் மக்களிடத்தில் நல்லமுறையில் பதிய வைக்கும் என்பதில் அய்யமேயில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|