Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2009

இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் ஆவணம்
விடுதலை இராசேந்திரன்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் - வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவின் துரோகத்தை அம்பலப் படுத்தும் ஆவணமாக இந்நூல் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்டியும், அரசியல் தளத்தில் ஈழ விடுதலையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் பேசினார். நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப் படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது.

• ஜன் 4, 2005 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த வைகோ, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இராணுவ ஒப்பந்தம் ஒன்று உருவாக நடக்கும் முயற்சிகளைக் கூறி, அப்படி ஒரு ஒப்பந்தம் வருமானால் அது பெரும் கேடு என்று கூறினார். அதற்கு பதிலளித்த பிரதமர் - அப்படி ஒப்பந்தம் எதையும் செய்ய மாட்டோம் என்று பதிலளித்தார். பிரதமர், மறுத்த பிறகு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங், கொழும்புக்குச் சென்று 2005 ஜூன் 10 ஆம் தேதி அளித்த பேட்டியில், ‘உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரப்பட்டு வருகிறது” என்று கூறினார். இதை பிரதமரிடம் வைகோ கூறியபோது, அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி விட்டார்.

• அந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு, பலாலி விமான தளத்தையும், ஓடு பாதையையும் இந்தியா சரி செய்து தரும் என்பதாகும். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலே அதில் அடங்கியுள்ள பிரிவுகளை இந்தியா செயல்படுத்தியது. “யாழ்ப் பாணத்தில் உள்ள பலாலி விமானத் தளமும் ஓடு தளமும் இந்திய பொருளாதார உதவியோடு, கடந்த 6 மாத காலமாகச் சீரமைப்பு பணிகளும், பழுது பார்ப்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்திய நிபுணர்கள் இது தொடர்பாகக் கூட்டாக விவாதிக்க, விரைவில் வருகிறார்கள்” என்று இலங்கை விமானப்படை துணைத் தளபதி டொமினிக் பெரைரா 9.12.2005 அன்று கொழும்பில் அறிவித்தார்.

• 14.8.2006 அன்று தாய் தந்தையை இழந்த குழந்தை களுக்கான காப்பகமான ‘செஞ்சோலை’ மீது சிங்கள இராணுவம் குண்டுகளை வீசி 61 பெண் குழந்தைகளை படுகொலை செய்தது. 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். இலங்கை இதை மறுத்து பொய்யான அறிக்கை வெளியிட்டது. ஆனால், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற் றிருந்த அய்ரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையிலுள்ள யூனிசெஃப் அமைப்பினரும் இதை உறுதி செய்தார்கள். இந்த படுகொலை களைக் கண்டித்து 17.8.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர் மானத்தை “கற்பனையாக புனையப்பட்ட தீர்மானம்” என்று, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதர் 17.8.2006 அன்றே ஓர் அறிக்கை வெளியிட்டார். இத்தகைய அதிகாரம் துணைத் தூதருக்கு இல்லை.

• 2004 டிசம்பர் மாதம் சுனாமி பேரலையால் 25000 தமிழர்கள் மடிந்து போனார்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்தனர். இந்தியாவின் மறுவாழ்வுக்கான உதவிகள் தமிழர்களை சென்று அடையவில்லை,. பிரஞ்சு நாட்டின் சுனாமி மறுவாழ்வுக்கான முகாமில் பணியில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் இளைஞர்கள் - 8.8.2006 அன்று சிங்கள ராணுவத்தால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரக் கொலையை இலங்கை இராணுவம் செய்தது என்ற உண்மையை ஆஸ்திரேலிய வல்லுநர் குழு அறிவித்தது.

• 2006 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் வாகறையில் இலங்கை இராணுவம் விமானக் குண்டுகளை வீசி அகதிகளாக பள்ளிக் கட்டிடங் களில் தங்கியிந்த 75 அப்பாவி மக்களை கொன்று குவித்தது.

• செஞ்சோலை படுகொலையை - வாகறை படு கொலையை இந்தியா கண்டிக்கவில்லை. அதற்குப் பிறகு, இலங்கைக் கப்பல் படைக்கு இந்தியா தீவிரமாக உதவியது. இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் தகவல் பரிமாற்றம் செய்வதற்காக தொலைத் தொடர்பு சாதனங் களின் ஒருங்கிணைப்புச் செயல்பாடுகளை மேற் கொள்வதற்காக 13.2.2007 அன்று, இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இரு நாட்டின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

• இலங்கை விமானப் படைக்கு இந்தியா ராடார் கருவிகளை வழங்கியதை பிரதமரிடம் வைகோ சுட்டிக் காட்டியபோது, அவை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்போது திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று, உறுதி அளித் திருந்தார். ஆனால், செஞ்சோலை படுகொலைக் குப் பிறகும் 2007 ஜனவரி, மற்றும் ஜூன் மாதங் களில் மேலும் ராடார் கருவிகளை இந்தியா வழங்கியது.

• இந்திய கடற்படையின் தமிழ்நாடு பொறுப்பாளர் கம்மோடர் வேன் ஹேல்டரென், 8.12.2007 இல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் - “இலங்கை கடற்படைப் படகுகள் ஒரு போதும் இந்திய கடல் எல்லைக்கு உள்ளே வந்து, இந்திய மீனவர்களைத் தாக்கியது இல்லை” என்ற கூறினார். அதற்கு முன்பு 16.9.2006 அன்று இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ், “இலங்கைக் கடற்படை இந்திய மீனவர் களைத் தாக்கவில்லை. விடுதலைப் புலிகள் தான் தாக்குகிறார்கள்” என்று பேட்டி அளித்தார். இது பற்றி, பிரதமர் வைகோவிடம் கூறும்போது, “கடற்படைத் தலைவரின் கருத்து எங்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதை கவனிக்கிறேன்” என்று கூறினார்.

• சிங்கள இராணுவத்தை ஆணை இரவு கண வாயில் வீழ்த்திய பிறகுதான் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் விடுதலைப்புலிகள் தாங் களாகவே 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறி வித்தனர். மீண்டும், 2002 ஜனவரி 22 ஆம் நாளில் மேலும் 30 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்தனர். இலங்கை இதை ஏற்கவில்லை. பிறகு உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக 2002 பிப்ரவரியில் இலங்கை தானும் போரை நிறுத்துவதாக அறிவித்தது.

• ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகப் பொறுப் பேற்ற பின், நார்வே அரசின் முயற்சியால் அமைதிப் பேச்சுகள், அந்நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. மூன்று சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்க சதி செய்து, மூன்று அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அமைதிப் பேச்சுகளை முடக்கினார். அரசு தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்தது.

• அய்.நா.வின் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் திருமதி லூயிஸ் ஆர்பர் - இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார். அதனால் ஆத்திரமடைந்த இலங்கை அரசு, அய்.நா.வின் மனித உரிமை அலுவலகத்தை கொழும்பில் திறக்க அனுமதிக்க மறுத்தது.

• யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஒரே சாலையான ஏ-9 பாதையை மூடியதால், மக்கள் உணவுப் பொருள், மரு(ந்தின்றி, பட்டினியால் தவித்தனர். தமிழகத்திலிருந்து சேகரித்து செஞ்சிலுவை சங்கம் வழியாக அனுப்பப்பட்ட உணவு, மருந்துகளையும் இலங்கை அரசு அனுமதிக்க மறுத்தது.

• மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து இலங்கை அரசின் படையினால் கொல்லப்பட்டனர். இதற்குக்கூட இந்தியா, தனது கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை. இவ்வளவுக் குப் பிறகும், இலங்கையின் இராணுவத் தளபதி இரத்தம் தோய்ந்த கைகளோடு இந்தியாவுக்கு வந்தார். இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து - கவுரவித்தது.

• 2008 ஜூன் 20 ஆம் தேதி இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாது காப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு செயலாளர் விஜயசிங் ஆகியோர் அடங்கிய குழு, கொழும்பு சென்று இலங்கை அரசுடன், இரகசிய ஆலோசனை நடத்தியது. இந்தப் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

• வெறும் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலரை இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கி யது. அந்தப் பணத்தில் சீனா, பாகிஸ்தானிட மிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தது, இலங்கை அரசு.

• 2008 செப். 8 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் ஜோசப் முகாம் அமைந்து உள்ள இடத்தில், இலங்கை இராணுவத் தலைமையகத்தின் மீது வான்படைத் தாக்குதலையும், தரைப்படைத் தாக்குதலையும் மேற்கொண்டபோது, இந்திய இராணுவப் பொறியாளர்கள் ஏ.கே.தாகூர், மற்றும் சிந்தாமணி ரவுட் ஆகியோர் படுகாயமுற்றனர். இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் 265 பேர் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்து வருவதாக இந்திய தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

• ‘தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள் கூறும் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு கேட்காது; போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு ஒருபோதும் கேட்டுக் கொள்ளாது” என்று, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதை - இலங்கை அரசின் அதிகாரபூர்வ ஏடான ‘சண்டே அப்சர்வர்’ 7.12.2008 அன்று வெளியிட்டது.

• 2008 நவம்பர் 12 ஆம் நாள் தமிழக சட்டமன்றம் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் விறைவேற்றிய பிறகு, டெல்லி வந்த ராஜபக்சே ஒரு போதும் போரை நிறுத்த மாட்டோம் என்று ஆணவத்துடன் அறிவித்தார்.

• 2008 அக்டோபர் 2 ஆம் நாள் பிரதமர், வைகோ வுக்கு எழுதிய கடிதத்தில், “இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காக, நாங்கள் இத்தகைய பாதுகாப்பு உதவிகளைச் செய்து இருக்கிறோம்” என்பதை ஒப்புக் கொண்டார். இந்தியா - இலங்கைக்கு ஆயுத உதவிசெய்தது என்பதற்கான ஆவணச் சான்று, இந்த பிரதமரின் கடிதம்.

• 2007 ஆகஸ்ட் 6 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டின் பன்னாட்டுப் பதிப்பில் கீழ்க்கண்ட செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

• “2005 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு இரண்டு ராடார்களைத் தந்தது. 2007 ஜனவரியில் ஒரு ராடாரும், ஜூன் மாதம் மற்றொரு ராடாரும், இந்திய விமானப் படையின் சார்பில் அனுப்பப்பட்டன. டெல்லிக்கு அருகாமையிலுள்ள ஹிண்டன் இராணுவ விமான தளத்தில் இருந்து இந்த ராடார்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு எந்த ஆயுதங்களையும் வழங்குவதில்லை என்று தனக்குத் தானே இந்தியா விதித்துக் கொண்ட தடையை மீறி 2005 இல் இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தபோது ராடார்கள் கொடுக்கப்பட்டன.”

• 2007 அக்டோபர் 15 ஆம் நாள் வெளியான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும் இதே செய்தியை உறுதிப்படுத்தியது.

• இந்திய - இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது. இந்திய கடற்படை, விடுதலைப்புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் மூழ்கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது. இந்திய விமானப்படை நிபுணர்கள் சக்தி வாய்ந்த சேட்டிலைட் கேமராக்கள் மூலம், புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சிங்கள விமானப் படைக்குத் தெரிவித்ததன் விளைவாகவே, புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டார்.

• கொழும்பு சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தை கோரவில்லை. ‘அது எங்கள் வேலை அல்ல’ என்று முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை சந்தித்தப் பிறகு அவரது வீட்டு வாயிலிலேயே பேட்டியும் அளித்தார்.

• போரில் சிங்கள ராணுவம் வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறது என்றும், கிளிநொச்சி, ஆணைஇரவு வீழ்ந்து விட்டது என்றும் போரின் இறுதிக்கட்டம் விரைவில் நிறைவேறிவிடும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி 18.2.2009 அன்று பூரிப்புடன் அறிக்கை சமர்ப்பித்தார்.

• முல்லைத் தீவில் 3 லட்சம் தமிழர்கள் இருந்தும், 70000 பேர் இருப்பதாக சிங்கள அரசு சொன்ன பொய்யை பிரணாப் முகர்ஜியும் அப்படியே நாடாளு மன்றத்தில் கூறினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com