கட்டாயக் கல்வி
விடுதலை இராசேந்திரன்
6-லிருந்து 14 வயதுள்ள அனைத்து குழந்தை களுக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமையை உறுதி செய்யும் மசோதா மாநிலங்களவையில் கடந்த 20 ஆம் தேதி நிறைவேறியுள்ளது. இதன் மூலம் கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை யாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கட்டாயக் கல்வி பெறுவதற்கான வயதை 6-லிருந்து மூன்றாகக் குறைக்க வேண்டும் என்றும், நலிவுற்ற பிரிவினருக்காக 25 சதவீத ஒதுக் கீட்டில், சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற சொற்றொடரையும் இணைக்க வேண்டும் என்றும் மிகச் சரியாகவே சுட்டிக்காட் டியுள்ளார். இளம் உள்ளங்களில் இயற்கையான ஆர்வத்தைத் தூண்டி அவர்களை ஊக்குவிக்க கல்வி இருக்க வேண்டுமே தவிர, வகுப்பறைக் குள்ளும், நிர்ணயிக்கப்பட்ட பாடத் திட்டங்களுக் குள்ளும் அவர்களை அடைத்து வைப்பதாகவோ மூன்று மணி நேர தேர்வுச் சோதனைகளை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வதாகவோ இருக்கக் கூடாது என்றும், கனிமொழி சுட்டிக் காட்டியிருப்பதும் சரியான படப்பிடிப்பாகும்.
பாடத் திட்டங்களுக்குள் குழந்தைகளை புதைப் பதுகூட பார்ப்பனிய மரபின் தொடர்ச்சிதான்.
வேதங்களை மனப்பாடம் செய்வதே கல்வி என்றிருந்த பார்ப்பனிய குருகுலக் கல்வியை மாற்றியமைத்த பெருமை - மெக்காலேவுக்கு உண்டு. அவரால் முறைசார் கல்வி முறையில் அனைவருக்குமான கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டாலும்கூட வருணாசிரமக் கல்வியின் தாக்கத்தி லிருந்து விடுபடாதவாறு பார்ப்பனர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார்கள். ராஜ கோபாலாச்சாரி, சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தினார். அதனால் அரசுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை ஈடு செய்ய அவர் ஆரம்பக் கல்வி நிறுவனங்களைத் தான் மூடினார். தகப்பன் தொழிலை பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் வர்ணாசிரமக் கல்விச் சட்டத்தையும் கொண்டு வந்தார். மெக்காலே கல்வித் திட்டத்தையும், பார்ப்பனியமாக்கிடும் நோக்கோடு இவைகள் நடந்தபோது அன்று பெரியார் இயக்கம் போராடி, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூக நீதிக்கான கல்விச் சூழலை தமிழகத்தில் வளர்த் தெடுத்தது. எந்த காங்கிரஸ் ஆட்சி அன்று கல்வியை அனைவருக்கும் பொதுவாக்க விடாது தடுத்ததோ, அதே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, இப்போது கல்வியை அடிப்படை உரிமை யாக்கி சட்டம் கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது - வரலாற்றின் போக்கில் நிகழ்ந்துள்ள தலைகீழ் மாற்றம் தான்.
ஆனாலும்,இந்த சட்டங்களை செயல்படுத்தக் கூடிய அதிகார அமைப்புகள் இந்த சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனிய அதிகார அமைப்புகளிடமே தங்கியுள்ளதால், இந்த சீர்திருத்த சட்டங்கள் காகிதங்களோடு நின்று விடுகின்றன.
இத்தகைய சட்டங்களின் முழுமையான உரிமைகள், மத்திய அரசுகளிடம் போய் விடாமல், மாநில அரசுகளின் முழுமையான உரிமைகளுக்குக் கீழ் வரவேண்டும். சமூகநீதி உணர்வு கொண்ட நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் போது தான், சட்டத்தின் நோக்கம் நிறைவேறும். மாநில உரிமைப் பட்டியலில் இருந்த கல்வியை 1976 அவசர நிலை காலத்தில் காங்கிரஸ் பொதுப் பட்டிய லுக்குக் கொண்டு போய்விட்டது. மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு அதைக் கொண்டு வரவேண்டும். மாநில உரிமை பேசுகிற கட்சிகள்கூட இதில் வாய் திறக்காமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது.
ஆனாலும், கல்வி என்பது அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமை என்ற கோட்பாடு, ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசி, பாரம்பரிய குலத் தொழிலில் குழந்தைகளைக் கொண்டு போய் தள்ளிய பார்ப்பனியத்துக்கு விழுந்த மரண அடி என்ற முறையில் வரவேற்க வேண்டும். இதில் சமூகப் பார்வையோடு கருத்துகளை முன் வைத்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியைப் பாராட்ட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|