பார்ப்பனரல்லாதோர் சாதனை படைக்கிறார்கள்!
இடஒதுக்கீட்டின் காரணமாக ‘தகுதி திறமை’ சீர்குலைகிறது என்று பார்ப்பனர் முன் வைத்த வாதங்கள் தவிடுபொடியாகி வருகின்றன. முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர் களை தலைமுறை தலைமுறையாக படித்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களோடு சமப் போட்டியில் நிறுத்தி, தகுதி திறமையை மதிப்பிடக் கூடாது என்று பெரியார் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டால் - பார்ப்பனரல்லாத மாணவர்களும் சாதனை படைப்பார்கள் என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடுகள் இன்றி திறந்த போட்டியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பெறும் நிறைவு மதிப்பெண் (கட் ஆப் மார்க்) கூடுதலாக இருப்பதால் - அவர்கள் தகுதி திறமையுள்ளவர்கள் என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டது. அத்துடன் திறந்த போட்டியில் தேர்வு பெறுவோர். பல தலை முறையாக படித்த - பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர்களாகவே இருந்து வந்தனர். இடஒதுக்கீடு முறை தொடர்ச்சி யாக அமுல்படுத்தப்பட்டு கல்வி பெறும் சூழலால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைக்கப் பெற்றால், இந்தப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் மதிப்பெண்களை கூடுதலாகப் பெற்றுக் காட்ட முடியும். வாய்ப்பு கிடைக்கப் பெறாமையே இவர்கள் பின் தங்கியதற்கான காரணம் என்பதை இப்போது இவர்கள் உணர்த்தியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பெறும் நிறைவு மதிப்பெண் எண்ணிக்கை - ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்ததிலிருந்தே, இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தடைகளையும் கடந்து மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும். திறந்த போட்டியிலும், பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர்களைப் பின்தள்ளி விட்டு, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் கூடுதல் இடங்களைப் பெறத் தொடங்கி விட்டனர்.
இவ்வாண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் திறந்த போட்டிக்கான 460 இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 300 இடங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72 இடங்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள்
18 இடங்களையும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மாணவர்கள்
16 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பார்ப்பன உயர்சாதிப் பிரிவு மாணவர்கள் பெற்றுள்ள இடங்கள் 54 மட்டுமே!
அதேபோல் ப்ளஸ் டூ தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதியான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ள மாணவ மாணவிகள் மொத்தம் 8 பேர். இவர்களில
6 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். இந்த 8 பேரில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோந்த மாணவர் ஒருவர். பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.
பெரியார் போராடி - அரசியல் சட்டத்தை திருத்தச் செய்து கல்வியில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வரச் செய்து 60 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை தொடர்ச்சியாக அமுல்படுத்தியதன் காரணமாக கிடைத்த மிகப் பெரும் வெற்றி தான் இந்த சாதனை.
ஆனால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகம் குவிக்கும் சாதனைக்குப் பின்னால் நடந்த சமூக நீதிப் போராட்டங்கள் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரியது தான். அதன் வரலாறுகளும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த திராவிட கட்சி ஆட்சிகளால் பாடத் திட்டங்கள் வழியாக சொல்லப்படவும் இல்லை.
அதே நேரத்தில் அறிவாற்றலை வளர்த்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் இப்போது மற்றொரு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த நிலை மாறி, தனியார் மயமாகி வருவதால் இந்த நிறுவனங்கள் கல்வியை வணிகமாக்கி வருகின்றன. எனவே இந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, இடங்களை வாங்கும் சக்தியற்றவர்களாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினர் உள்ளனர். கல்விக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும் என்று எல்லோராலும் பேசப்படுவது உண்மைதான். ஆனால், அரசியல் பெரும் புள்ளிகள், அமைச்சர்கள், பெரியார் இயக்கத்தை நடத்துவதாகக் கூறுவோர் எல்லோருமே கல்வி வணிகக் கொள்ளையில் இறங்கி விட்டார்கள். பெரியார் பெற்றுத் தந்த சமூக நீதிக் கோட்பாட்டை இவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டார்கள். எனவே உயர்கல்வித் துறை தனியார் மயமாவது தடுக்கப்படுவதுதான் இப்போது நம்முன் உள்ள முக்கிய சமூக நீதிப் பிரச்சினையாக இருக்கிறது என்பதையும் கவலையுடன் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கல்விக் கொள்ளைக்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கம் நடத்தப்பட வேண்டிய தேவையும் அவசியமும் வந்து விட்டது!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|