பெண் அர்ச்சகர்கள்
கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். உடனே, இந்து முன்னணி பார்ப்பன இராமகோபாலன் இது வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து விட்டார். பெண் அர்ச்சகர்கள் பற்றிய அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய அதே நேரத்தில், ஏற்கனவே அர்ச்சகருக்கு உரிய பயிற்சி பெற்றுள்ள, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஏதாவது, ஒரு ஆகமக் கோயிலிலாவது நியமிக்கப்பட்டுள்ளார்களா, என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். அப்படி, இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்றே செய்திகள் கூறுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில், ‘ஜகத்குரு இராமனாந் தாச்சாரியா பெயரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஒன்று இருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் வேதப் பயிற்சி வகுப்பில் தலித் மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் அறக்கட்டளை யும் ‘தலித்’ சமூகத்தினருக்கு அர்ச்சகர் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. ஆனாலும், இவர்கள் ஏதேனும் ‘கிராமக் கோயில்களில்’ பூசாரிகளாக்கப்படுவார்களே தவிர, ஏழுமலையான் கர்ப்பகிரகத்துக்குள் அர்ச்சகர்களாக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது தான் விடை கிடைக்காத கேள்வி. ‘ஏழுமலையானின்’ தலைமை அர்ச்சகராக, ஒரு ‘தலித்’ வந்துவிட்டால், அதுதான் உண்மையான சமூகப் புரட்சி!
பூனாவில், ‘ஜனன பிரபோதினி’ எனும் சமூக அமைப்பு - பெண்களுக்கு, அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பயிற்சி முடித்தவர்கள், அர்ச்சகர்களாகி வருவதாகவும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி கூறுகிறது. இப்படி பயிற்சி பெற்ற சித்ரா சந்திரசூட் என்ற பெண் - 1997 முதல் அர்ச்சகராக இருந்து வருகிறார். இதனால் ‘பகவான்’ கோயிலை விட்டு ஓடி விட்டதாக தகவல் ஏதுமில்லை. இதை இராமகோபாலன்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், ஆண் அர்ச்சகர்கள், விடுமுறையில் போகும்போது மட்டும்தான், தங்களுக்கு பூசை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார் சித்ரா சந்திர சூட். அதுவும் மரணித்தவர்களுக்கான சடங்குகளை நடத்த பெண் அர்ச்சகர்கள் அனுமதிக்கப்படுவதே இல்லையாம்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 207 பேர் தேர்ச்சிப் பெற்று, பட்டதாரிகளாக வெளியே வந்துள்ளனர். இதில் 76 பேர் பிற்படுத்தப்பட்டோர்; தலித் மாணவர்கள் 34 பேர். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 36000 கோயில்களில் இவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும். ‘ஆகமங்களை’ பின்பற்றும் கோயில்களில் நியமிக்கப்பட்டால்தான், அது உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும். இதில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குவதற்கு தி.மு.க. ஆட்சி எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், கி.வீரமணி, பெரியார் நினைவிடத்தில், கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி, கல்வெட்டு நிறுவிவிட்டார். நிறைவேற்றி முடிக்காத ஒரு திட்டத்துக்கு கல்வெட்டு வைத்துள்ள வீரமணி செய்ததுதான் ‘மகத்தான புரட்சி’!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|