Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

வி.பி.சிங்கை வீழ்த்தினார்கள்; அவர் பிறப்பித்த சமூகநீதி ஆணையை வீழ்த்த முடியவில்லை
விடுதலை இராசேந்திரன் இரங்கலுரை

மண்டல் பரிந்துரையை எதிர்த்து வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார், ராஜீவ். அதே காங்கிரஸ் வி.பி.சிங் ஆணையை அமுல்படுத்தியே வருகிறார் என்றார் விடுதலை இராசேந்திரன். கடந்த இதழின் தொடர்ச்சி -1990 செப்டம்பர் 9 ஆம் தேதி 27 சதவீத இட ஒதுக்கீடு வந்தவுடன், ஒரு மாத இடைவெளியில் (1990, செப்.14-16), ம.பி. மாநிலம் போபாலில் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு - இராமன் கோயில் கட்டுவதற்கான 'ரதயாத்திரை'யை அத்வானி தலைமையில் நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை அசோக் சிங் காலிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள். மாணவர் கலவரத்தைத் தூண்டிவிட்டு வி.பி.சிங் தானாகவே பதவி விலகும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றவர்கள் அதில் தோல்வி கண்டதால் அடுத்தக் கட்ட மாக ரதயாத்திரையைத் தொடங்க திட்டமிட்டார்கள். யாத்திரையின் உண்மையான நோக்கமே மண்டல் பரிந்துரைக்கான எதிர்ப்புதான். இதை அத்வானியே ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார்.

"மண்டல் பிரச்சினை எனக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பது உண்மைதான். குறிப்பாக என்னுடைய டெல்லி தொகுதியில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெற்றோர்கள், ஒவ்வொரு நாளும் என்னை சந்தித்து இன்னும் வி.பி.சிங் ஆட்சியை ஏன் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று என்னை கேட்கிறார்கள். மண்டல் பிரச்னையைக் காரணம் காட்டி, இந்த ஆட்சிக்கு தரும் ஆதரவை நாங்கள் திரும்பப் பெற்றால், அது இந்த ஆட்சிக்கு பெரும் லாபமாகிவிடும் என்று நான் கருதுகிறேன். எனவே நான் அவர்களிடம் சொன் னேன், "ஆமாம்; இந்த அரசாங்கம் மோசமாக நடந்து கொண்டு வருவது உண்மைதான். இதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை முடிவு செய்து, உரிய நேரத்தில் எடுப்பேன்" என்று கூறினார் அத்வானி (இந்துஸ்தான் டைம்ஸ் 21 செப். 1990).

ரதயாத்திரை தொடங்கும் முடிவை எடுத்த அடுத்த 5 நாட்களில் அத்வானி அளித்த பேட்டி இது! ஆக, அத்வானி 'ராமனை' முன் வைத்து, ரத யாத்திரையைத் தொடங்கியதே வி.பி.சிங் ஆட்சிக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கி, நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதுதான். நேரடியாக 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தால் பாரதிய ஜனதாவுக்குள் உள்ள வடமாநில அப்பாவி பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்குள்ளாகிட நேரிடுமே என்பதால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் உரிமைக்கான அடையாளங்களை ஒழிக்க 'இந்து' என்ற கவசத்தைப் போர்த்திடும் முயற்சிகளில் பார்ப்பனியம் இறங்கியது. திட்டமிட்டபடி பா.ஜ.க. வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. உண்மையில் 1991 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் அந்த ரத யாத்திரைக்கான திட்டத்தை பா.ஜ.க. தீட்டியிருந்தது. ஆனால், மண்டல் பரிந்துரைஅமுலான காரணத் தால், ஆட்சியை விட்டு வைக்கக் கூடாது என்ற காரணத்தால் உடனே பயணத்தைத் தொடங் கினார்கள். (தொடங்கிய தேதி 7.8.90)பாரதிய ஜனதா ஆதரவைத் திரும்பப் பெற்றவுடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவரத்தயாரானர் வி.பி.சிங். பதவி பறிபோகும் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும். அதற்காக நரசிம்மராவ் செய்ததுபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை பேச வில்லை. நாடாளுமன்றத்தை சந்திக்கத் தயாரானார்; நம்பிக்கை ஓட்டுகோரும் ஒற்றைவரி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். சமூக நீதிக்கு கதவு திறந்த சரித்திர நாயகர்கள் - பெரியார், அம்பேத்கர் பெயர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வி.பி.சிங் தனது உரையைத் தொடங்கினார்.

இந்த அவையில் - மண்டல் ஆதரவு அணி ஒன்றும், மண்டல் எதிர்ப்பு அணி ஒன்றும் இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் வழியாக யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்றார். வி.பி.சிங் மண்டல் ஆணை அறிவிப்பு வெளி வந்தவுடனேயே வசந்த் சாத்தே என்ற மராட்டிய பார்ப்பன காங்கிரஸ் உறுப்பினர், நாடாளுமன்ற வாயிலிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி, இதில் தனது நிலையைத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசிய ராஜீவ் காந்தி, மண்டல் பரிந்துரையை முழுமையாக எதிர்த்து 3 மணி நேரம் - 10 முறை தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்.

இடஒதுக்கிடு பொருளாதார அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பன குரலையே ராஜீவ் எதிரொலித்தார். நாட்டை சாதியால் கூறு போடுகிறது மண்டல் அறிக்கை என்றார். அத்வானியும் அதே குரலையே ஒலித்தார். இந்தப் பிரச்சினையில் ராஜீவ் குரலும், அத்வானி குரலும் ஒன்றாகவே ஒலித்தன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.இ.அ.தி.மு.க.வும், மண்டல் எதிர்ப்பு அணியில் நின்று வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்த துரோகத்தை செய்தது. கான்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்து வாக்களிக்கவில்லை. நடுநிலை என்று கூறி ஆட்சிக் கவிழ்ப்புக்கே துணை நின்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டின் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த மறைந்த அப்துல் சமது ஒருவர் மட்டும் தான் அணி மாறி, வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவாக வாக்காளித்தார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பொருளாதார அடிப் படையை வலியுறுத்திய ராஜிவ் காந்தியிடம் வி.பி.சிங் கேட்டார், உங்கள் கட்சி ஆளும் ஆந்திராவிலும், கருநாடகத்திலும் சாதி அடிப்படையில்தானே இடஒதுக்கீடு இருக்கிறது என்று. அவர் கேட்ட கேள்விக்கு ராஜீவ் மவுனமானார்.

உண்மையில் காங்கிரஸ் கட்சியிலே இருந்த பல பிற்படுத்தப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆணையை வரவேற்றாலும், அந்த உணர்வுகளை ராஜீவ் மதிக்க தயாராக இல்லை. அதே ராஜீவ் காந்தி சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு வந்த போது, மண்டல் பரிந்துரையை கல்விக்கும் அமுல்படுத்த வேண்டும் என்று குரலை மாற்றிப் பேசி தமிழ்நாட்டை ஏமாற்ற இரட்டை வேடம் போட்டார். அத்வானி ரதயாத்திரை - பீகாருக்குள் நுழைந்த போது, மாநில முதல்வர் லல்லுபிரசாத், யாத்திரையை அனுமதித்தால் கலவரம் வரும் என்று பிரதமர் வி.பி.சிங்கிடம் கேட்டபோது, 'உங்கள் முடிவில் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்' என்று பச்சைக் கொடி காட்டினார். வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு திரும்பப் பெறப்படுமே என்பது பற்றி அவர் கவலைப் படவே இல்லை. இன்று ஆட்சிக்கு ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கொள்கைகள் பலிகடா வாக்கப்படுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பை பா.ஜ.க. அறிவித்தவுடன், வி.பி.சிங் தொலைக்காட்சியில் பேசினார்: "இந்த நட்டநடு இரவில், நமக்கு மேலே உள்ள நம்மைப் படைத்தவனுக்கு வீடு கட்டப் போகிறார்கள். அவருக்கு வீடு கட்டவில்லையென்றால், வீடு இல்லாமல் தவித்துப் போய்விடுவார்" என்றுகேலியாக சுட்டிக் காட்டினார். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சர். கலைஞர் ஆட்சி விடுதலைப்புலிகளுடன் ரகசியமாக தொடர்பு கொண்டுள்ளது என்று மத்திய உளவுத் துறை இரண்டு அறிக்கைகளை தயார் செய்து, அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது. ஆனால் பிரதமர் வி.பி.சிங் பார்வைக்கு வராமல், பார்ப்பன அதிகார வர்க்கம் மறைத்து விட்டது. அமைச்சரவை செயலாளருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் வந்த அந்த இரு அறிக்கைகளும், வி.பி.சிங் பார்வைக்கு வராமல் மறைக்கப்பட்டன. காரணம், உள் நோக்கத் துடன் தயாரித்த இந்த அறிக்கையை வி.பி.சிங் குப்பையில் போட்டு விடுவார் என்பது அவர் களுக்குத் தெரியும். அப்படி அறிக்கை தயாரித்தவர் கூட அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். இத்தனைக்கும் அப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்புகூட அல்ல.

வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, ராஜீவின் பினாமியாக சந்திரசேகர் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது சுப்ரமணியசாமி, சட்டத் துறை அமைச்சர். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உளவுத் துறை அறிக்கை அப்போது தோண்டி எடுக்கப்பட்டு, சுப்ரமணியசாமி துறைக்குப் போகிறது. உடனே தி.மு.க. ஆட்சி, ராஜீவ் ஆலோசனைப்படி பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்படுகிறது. தி.மு.க.வின் மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன், சந்திரசேகரை நேரில் சந்தித்து எவ்வளவோ எடுத்துக் கூறியும் காதில் போட்டக் கொள்ள தயாராக இல்லை. ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் முன், வி.பி.சிங் அளித்த சாட்சியம். ஜெயின் அறிக்கையில் பதிவாகியுள்ளது. அதில் தி.மு.க. ஆட்சியையும், விடுதலைப் புலிகளையும் தொடர்பு படுத்தி உளவுத்துறை தயாரித்த அறிக்கை, தனது பார்வைக்கே கொண்டுவரப்படாததை வி.பி.சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீவிரவாதம் பற்றி ஜெயின் ஆணையத்தின் முன் அவர் அளித்த சாட்சியம் இதுதான்.

"விடுதலைப் புலிகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இதுதான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அங்கே 100 சதவீத திருப்தியான நிலை வந்துவிடவில்லை. தமிழ்நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினை தான். தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் - தமிழ் நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நட வடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிரவாதத்தைத் தடுக்கும் நட வடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து." - என்றார் வி.பி.சிங்.

விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துவிடவேண்டும். அதை வைத்து தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்ட ஆளும் பார்ப்பன வர்க்கப் பார்வையிலிருந்து வி.பி.சிங் பார்வை வேறு பட்டே இருந்தது என்பதற்காக இதை சுட்டிக் காட்டுகிறோம்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விடும் என்று பார்ப்பனர்கள் கூக்குரலிட்டபோது வி.பி.சிங் கேட்டார், "தென்னகம் முழுதும் நீண்டகாலமாக இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுத்தான் வருகிறது. அங்கே நிர்வாகம் கெட்டு போய்விட்டதா?" என்று கேட்டார். காலம் காலமாக நிர்வாக அமைப்பிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வருகிறேன் என்று கூறிய வி.பி.சிங், இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார். இப்படி அதிகாரத்தைப் பரவலாக்குவதால்தான் ஆதிக்கவாதிகள் அலறுகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கு உதாரணமாக ஒரு கதையை கூறினார். அண்ணன் தம்பிக்குள் பாகப் பிரிவினை நடந்தது. கடைசியில் இருந்த மாடு ஒன்றையும் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் வாய்ப் பகுதி தம்பிக்கும் வால் பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப் பட்டது. வாய்ப்பகுதி கிடைத்த தம்பி, அன்றாடம் மாட்டுக்கு தீனி போட வேண்டும். வால் பகுதி கிடைத்த அண்ணனோ, பாலைமட்டும் கறந்து கொண்டிருந்தார். தம்பிக்கு ஆத்திரம் வந்தது. ஒரு நாள் தம்முடைய தலைப் பகுதியிலிருந்த மாட்டின் கொம்பை பிடித்து ஆட்டவே, மாடு, வால் பகுதி யிலிருந்த அண்ணனை எட்டி உதைக்க, பால் கீழே கொட்டியது. ஒவ்வொரு நாளும் இது தொடரவே அண்ணனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. நான் தீனி போட வேண்டும்; நீ மட்டும் பால் கறக்க வேண்டுமா; இது நீதியா என்று தம்பி கேட்டார். அதே நீதியைத் தான், நாமும் கோருகிறோம் (பலத்த கைதட்டல்) என்றார் வி.பி.சிங்.

காலம்காலமாக பயனை மட்டும் அனுபவித்துக் கொண் டிருந்தவர்களிடம் உள்ள அதிகாரத்தை நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க முன் வந்ததால் அவர்களுக்கு என் மீது ஆத்திரம் வருகிறது என்றார் வி.பி.சிங்.கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்த வி.பி. சிங்கை முதல்வராக இருந்த கலைஞர் தமிழகத்துக்கு அழைத்தார். தமிழகம் முழுதும் நான்கு நாட்கள் சூறாவளியாக கலைஞருடன் சுற்றுப் பயணம் செய்தார் வி.பி.சிங். அந்தப் பயணத்தில் பத்திரிகை யாளர் என்ற முறையில் நானும் உடன் சென்றேன். சென்ற இடமெல்லாம் வி.பி.சிங்குக்கு உற்சாக வரவேற்பு காத்திருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இது பெரியாரின் மண். இது சமூக நீதியின் தலைநகரம் என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் குறிப்பிட்டார். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். கருநாடகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வி.பி.சிங் கட்சியைச் சார்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, தேவ கவுடா போன்றவர்கள் எல்லாம் ஜனதா தளத்தில் முக்கிய தூண்கள். இத்தனைக்கும் கருநாடகத்தில் ஜனதாதளம் ஆட்சியைப் பிடிக்கும் வலிமையோடு இருந்தது. ஆட்சியும் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் ஜனதாதளத்துக்கு எந்த ஆதரவும் இல்லை. ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கூட அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. இந்த நிலையிலும் தனது சொந்தக் கட்சியினர் கருநாடகத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் புறக் கணித்து தமிழகத்தின் பக்கம் நின்று, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர் தான் வி.பி.சிங். (பலத்த கைதட்டல்)

இப்படி, ஒரு தலைவரை அரசியலில் பார்க்க முடியுமா?அண்ணல் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான். அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி அவரது எழுத்து பேச்சுகளை இந்தியில் வெளியிட்டதும் வி.பி.சிங் ஆட்சியின் போதுதான். நாடாளுமன்ற வளாகத் திலே அம்பேத்கர் படமும், அப்போது தான் திறக்கப்பட்டது. அப்போது வி.பி.சிங் பேசினார். 'கடவுள் சிலையை வடிக்கும் சிற்பி கோயில் கர்ப்பகிரகத் துக்குள் நுழைய முடியாததைப் போல், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் படம் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாமலே இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் இடமிருந்தது. ஆனால் ஆட்சியல் இருந்தவர்கள் இதயத்தில் தான் இடமில்லாமல் போய்விட்டது' என்றார். நிர்வாக கட்டமைப்பை பரவலாக்கிட மாநிலங்களுக்கிடை யிலான கவுன்சிலை உருவாக்கியது வி.பி.சிங் தான். இன்றைக்கு மக்களுக்குக் கிடைத் துள்ள மகத்தான ஆயுதமாகிய தகவல் உரிமை பெறும் சட்டத்துக்கு காரண மாக இருந்தவரும் வி.பி.சிங் தான். அவர் தான், இந்தக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் டெல்லியில் வாழும் குடிசைப்பகுதி மக்களுடன்தான் கொண் டாடினார். நபிகள் நாயகம் பிறந்த நாளை மத்திய அரசின் விடுமுறை நாளா கவும் அவர்தான் அறிவித்தார். அவர் மிகச் சிறந்த ஓவியர். மிகச் சிறந்த கலை ஞர். ஒன்றிரண்டு கவிதைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 'கடவுள்' பற்றி வி.பி.சிங் எழுதிய கவிதை இது:

கடவுள்
எங்கும் இருக்கிறார்
அதனால் தான்
என் கை பிடிக்குள்
அடக்கி
வைத்துள்ளேன்
நீயும்
அவ்வாறு
செய்து கொள்
இந்த இரண்டு கைக்குள்
இருக்கும்
கடவுள்களில்
பெரியவர் யார்?
அது அவரவர்
கை வலிமையைப்பொறுத்தது.

- என்ன அற்புதமான பகுத்தறிவு சிந்தனை.
சோதிடர் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இது.

ஜோதிடர்
எனது
வருங்காலம்
பற்றிவகை
வகையாய்சொல்லி
வைத்தார்நான்
கேட்டேன்அவ்வளவு
தூரம் வேண்டாம்.
இன்று இரவு -
ஆம்இன்று
இரவு எனக்கு
என்ன கனவு
வரும்?
ஜோதிடர் மவுனமாகிப் போனார்.

விண்மீன்கள்
ஆதிக்கத்தால்
கண்ணுறக்கம்
இல்லாமல்...
நான்
மட்டும்
இருக்கிறேன்...
என்
கனவுகள்
இல்லை...
எனவேதான்
ஜோதிடர்
மவுனமாகிப் போனார்.

சோதிடம் பொய் என்பதை இவ் வளவு அழகாக படம்பிடித்தார். அவர் பகுத்தறிவாளர் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையான மானுடப் பற்றுக் கொண்ட எவரும் இயல்பாகவே பகுத்தறிவாளர் களாகத் தானே இருக்க முடியும்?இந்திய அரசியலை மண்டல் மய மாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை அரசிய லில் வீழ்த்தியவர் வி.பி.சிங் தான். எந்த ஆணைக்காக வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தினார்களோ, அவர் களாலேகூட வி.பி.சிங் ஆணையை வீழ்த்த முடியவில்லை. அந்த ஆணை யில் கை வைத்துவிட்டு - எவரும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது. அந்த சமூக நீதிகளை நிலைத்திருக்கும் வரை வி.பி.சிங் வரலாற்றில் நிலைத்திருப்பார்.

(நிறைவு)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com