தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
வெறுப்பைத் திணிக்கும் மதவெறி கோட்பாடு
'காம்பட் கம்யூனலிசம்' ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீஸ்டா செதல்வாட் டிச.11 அன்று 'மதச்சார்பற்றோர் மாமன்றம்' சார்பில் சென்னையில் ஆற்றிய உரை.
நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் என்ன என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமேயானால், நம்முன் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, பெரிய அளவில் கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி தான். நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்களும், நம்முடைய மதவெறி தத்துவங்களும் தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துக்கானதாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப்படுத்துதலையும், தன் மதக் கொள்கைக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித்துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் கொள்கை தத்துவம், சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின.
நமது பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந்தத்தை துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் காந்தியைக் கொன்றதா? அல்லது ஆப்கனில் பாமியான் புத்தர்களை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியான் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள் மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படைவாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பு வாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றாகவே தெரியும். ஜாதியத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மத அமைப்பின் கொடூரமான தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக் கடுமையான தொழில்களை எல்லாம் அவர்கள் செய்யும்படிச் சொன்னது.எனவே ஜாதியும், ஜாதிக்கு அடிப்படையிலான வன்முறையும் ஒன்றேதான்.நமது பாராளுமன்றத்தைப் போலல்லாமல், நம் பஞ்சாயத் ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது.
தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப்பட்டது?ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தாலும் சரி, இதே கதைதான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேசப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக் கூடாது என்று அது கருதுகிறது. சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்படு கிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்துபோகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றூம் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும்பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜனநாயகம் எந்த வகையானது? இந்த தருணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைக்கச் செய்யும் அமைப்பின் நீதித்துறை பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம்.
நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத்தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதி மன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்குகளில் நீதியை மறுத்துக்கொண்டே இருக்கின்றன. வரலாற்றில் கும்பல் கும்பலாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதிகளைப் பார்ப்போம். அத்தகைய வன்முறைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்யும் பிரிவினர், ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் 3006 பேர் கொல்லப் பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்! புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக்கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது.
சட்டத்துக்குப் புறம்பாக பன்னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர்களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகளால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த இழப்பு ஈடும் தரப்பட வில்லை. பல அரசாங்கங்கள் மாறி மாறி வந்து போயின. இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான ரசாயனம் மகாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள்ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.
ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகள் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப் பட்டுள்ளனர்?
(தொடரும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|