மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி1000 கழகத்தினர் கைது
ஈழத்தில் போர் தொடருவதற்கு துணை நின்று தமிழகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு, தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பெரியார் திராவிடர் கழகம், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது.
தமிழகம் முழுதுமிருந்தும் 1000 கழகத் தோழர்கள் கருப்புக்கொடி காட்ட திரண்டு வந்தனர். பெரியார் திராவிடர் கழகம் முதலில் போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ஈழத் தமிழர் பாதுகாப்புக் குழுவின் சார்பில், அதன் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார். ஜன. 8 ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து கழகத் தோழர்கள் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட சைதை பனகல் மாளிகை அருகே திரளத் தொடங்கினர்.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், சேலம், மேட்டூர், கொளத்தூர், ஏற்காடு, பவளத்தானூர், நெமிலி, தர்மபுரி, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், புதுவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் திரண்டு வந்தனர். பகுதி முழுதும் கருஞ்சட்டைக் கடலாக காட்சி அளித்தது. துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட 900 தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி, 'மன்மோகன்சிங்கே திரும்பிப் போ!' என்ற முழக்கத்துடன் திரண்டனர். 20 பெண்களும் பங்கேற்றனர். ஈழத் தமிழர் ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு பழ. நெடுமாறன் தலைமையில் தோழர்கள் தியாகு, இராசேந்திர சோழன், தேனிசை செல்லப்பா, பாவலர் இராமச்சந்திரன், குமரிநம்பி, வைகறை, மெல்கியோர், கவிஞர் தமிழேந்தி, அற்புதம் அம்மாள், பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டிருந்தனர். அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். இரண்டு திருமண மண்டபங்களில் தோழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏ.கே. அந்தோணிக்கு கருப்புக்கொடி: 50 கழகத்தினர் கைது
கோவை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 1000க்கும் அதிகமான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு கழகம் கருப்புக்கொடி காட்டியது.
இதற்கிடையில் ஜன.18 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கோவைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். கோவை வரும் செய்தி அறிந்த கழகத்தினர், உடனே கருப்புக்கொடி போராட்டத்துக்கு தயாரானார்கள். அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிகழ்ச்சி முடித்து விமானம் மூலம் திருவனந்தபுரம் போக விமான நிலையம் போகும் வழியில் பகல் 12 மணியளவில் பீளமேடு ஹோப்ஸ் கல்லூரி அருகே கருப்புக் கொடிகளுடன் திரண்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கோபால் (கோவை மாநகர செயலாளர்), திருப்பூர் துரைசாமி (கோவை-வடக்கு மாவட்டக் கழகத் தலைவர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி நகர கழக செயலாளர்), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மாணவர் கழகம்), திருப்பூர் முகில்ராசு, யாழ். நடராசன் (உடுமலை நகர கழகத் தலைவர்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்டனர். தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்ட செய்தி அறிந்து, அமைச்சர் ஏ.கே.அந்தோணி வேறு பாதையில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக் கோரியும், மத்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|