தலையங்கம் - சரியான தீர்ப்பு!
பார்ப்பனப் பண்ணையமாய் திகழும் அய்.அய்.டி. நிறுவனத்துக்கு எதிராக முதன்முதலாக ஒரு சமூகநீதி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் தங்களது பூணூலுக்குள் சுருட்டி வைத்திருப்பவர்கள் அய்.அய்.டி. நிர்வாகப் பார்ப்பனர்கள் என்பதை இந்தத் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அய்.அய்.டி.யின் இயக்குனராக உள்ள எம்.எஸ்.அனந்த் எனும் அய்யங்கார் பார்ப்பனர் நியமன முறையே சட்ட விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, முனைவர் ஈ.முரளிதரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளதோடு வழக்குச் செலவுக்காக இயக்குனர் எம்.எஸ். அனந்த் ரூ.5000-த்தை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
1961 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டத்தின் கீழ் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.கள்) செயல்படுகின்றன. இந்த சட்டத்தின் 17(1)வது விதியின்படி இயக்குனர் தேர்வு நடைபெற வேண்டும். இதன்படி இயக்குனர் தேர்வு செய்யப்படவிருப்பதை அரசிதழில் (கெசட்) வெளியிட வேண்டும். பிறகு குடியரசுத் தலைவர் முன் அனுமதி பெற்று (அவர்தான் அய்.அய்.டி.யின் தலைவர்) குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தொடர்புடைய துறையின் அமைச்சர், தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் இயக்குனர், பல்கலைக்கழக மான்யக் குழு தலைவர், விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இயக்குநர், பெங்களூர் விஞ்ஞான கழகத்தின் தலைவர், மற்றும் முன்னாள் இயக்குநர், மத்திய அரசு நியமிக்கும் 3 பிரதிநிதிகள், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற் கல்வி தொடர்புடைய மத்திய அரசு அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற வேண்டும். இயக்குனராகும் தகுதியுடையோர் பட்டியலை குழு தயாரித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு அறிவிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். இவ்வளவு கடுமையான தேர்வுமுறைகளை புறக்கணித்து சட்டத்தை மதிக்காமல், மனித வளத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு சிறு செல்வாக்குள்ள குழுவே இயக்குனரை தேர்வு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவலில் குழு அமைக்கப்படாததும் சுட்டிக்காட்டப் படவில்லை. பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை என்பதுபோல் தொடர்ந்து நாட்டின் உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் நியமனம் நடந்து வந்துள்ளது.
பதவி தனக்குத்தான் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிந்த எம்.எஸ்.அனந்த் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நியமனத்துக்கான பத்திரங்களை வாங்கி வைத்துள்ளது நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமாக முறைகேடுகள் நடந்த நிலையிலும்கூட ஏதோ சில நிர்வாக நடைமுறைகளால் பதவி நியமனம் ரத்தாகிவிட்டதுபோல் பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. "இந்த இயக்குனர் மீண்டும் இப்பதவியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு சூடாகவே காலியான இடத்தை அனந்த் வைத்துக் கொண்டிருந்தார்" என்று நீதிபதி சந்துரு தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தற்போது இயக்குநர்களாக உள்ள அனைவருக்குமே பொருந்தக் கூடியதாகும். காரணம் அனைத்து இயக்குனர்களுமே கொல்லைப்புற வழியாகவே நுழைந்துள்ளனர். இது நாட்டின் மிகப் பெரிய மோசடியாகும்.
57 வயதுக்குட்பட்டவராகவே புதிய இயக்குநர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மீறப்பட்டு 62 வயதுள்ள அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே சட்டவிரோதமாக பதவி பெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இவர்கள் காலத்தில் நடந்த பேராசிரியர்கள் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும். வெகு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய தீர்ப்பை வழங்கிய நீதிபதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உறுதியோடு போராடிய முனைவர் முரளிதரன் அவர்களை பாராட்டுகிறோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|