காங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது!
காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அண்மைக்காலத்தில் தோன்றிய விடுதலை சிறுத்தைகளால் வீழ்த்த முடியாது என்று, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சன் பேசியுள்ளார்.
உண்மை தான். காங்கிரசை வெளியிலிருந்து வீழ்த்துவதற்கு அக்கட்சி எவரையும் அனுமதிக்காது. அந்த உரிமையை காங்கிரசாரே தங்களின் 'ஏகபோகமாக' வைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1967 இல் கடையை கட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சி, இன்னும் கோட்டைக் கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று மாநில கட்சிகளின் தோளின் மீது சவாரி செய்து, அவர்கள் கருணையோடு வழங்கும் இடங்களில் தான் 125 ஆண்டு காங்கிரஸ் போட்டி யிட்டு வருகிறது.
சத்தியமூர்த்தி பவன் வரலாற்றிலேயே முதல்முறையாக வேறு ஒரு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுகூட அண்மையில்தான் நடந்திருக்கிறது. அந்த உரிமையையும் காங்கிரசாரே தங்கள்கைகளை விட்டுப் போய்விடாமல் தேசபக்தியோடு பாதுகாத்து வைத்திருந்தனர். சத்தியமூர்த்திபவனிலே நடந்த கட்சிக் கூட்டங்களிலே அரிவாள் வெட்டு விழுவதும், கட்சி மேலிடப் பார்வையாளர்களை உள்ளாடையுடன் உதை கொடுத்து ஓட வைப்பதும், தமிழக காங்கிரசாரின் தேசபக்தி திருப்பணிகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன.
இப்படி எல்லாம் 'உட்கட்சி ஜன நாயகத்தை' ஆயுதங்களுடன் கட்டிக் காத்து காங்கிரசை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வரும் காங்கிரசார், பிற கட்சியின் மூலம் அழிவதற்கு அனுமதிப்பார்களா? ஒரு போதும் மாட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில்கூட, சில மாநிலங் களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்குக் காரணம் கட்சிக்குள் நிகழ்ந்த உட்பகை தான் என்று அவர்கள் கட்சியின் தலைவர் சோனியாவே கூறியிருக்கிறார்.
எனவே, தோழர் திருமாவளவன் - காங்கிரசை காணாமல் ஒழித்திடும். காங்கிரசாரின் முயற்சிகளைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை. பெரியவர் சுதர்சனத்துக்கு எவ்வளவு கோபம் வருகிறது, பாருங்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|