வரலாற்றுப் பக்கங்களில் பகுத்தறிவு
பதவிகள் கிடைத்தும் லட்சியத்தை மறவாத பேராசிரியர் ராபர்ட் ஆடம்சன்
வாழ்க்கையில் வசதிகளின்றி, அல்லது வசதிகள் மிகக் குறைந்த அளவில் இருக்கின்ற காலத்தில் மிகச் சிறந்த பகுத்தறிவாளர்களாக இருந்தவர்கள் சிலர். பட்டங்கள், பதவிகள், வசதிகள், வாய்ப்புகள் வர துவங்கியதும் பகுத்தறிவை மூட்டை கட்டி மூலையிலே தூக்கி வீசி எறிவதை நாம் நன்றாகக் கண்டிருக்கிறோம்.
அதே வேளையில் சிறைச்சாலையும் சிரச் சேதங்களும்கூட இம்மியளவு தங்கள் இலட்சியத்தில் பிசகாதபடி வாழ்ந்து காட்டிய பகுத்தறிவு சிகரங்களும் மனித குல வரலாற்றில் இல்லாமல் இல்லை. பதவி கிடைத்ததும் லட்சியத்தை மறந்துவிடாத பகுத்தறிவுச் செம்மல்களில் ஒருவர் பேராசிரியர் ராபர்ட் ஆடம்சன். 1852 இல் பிறந்த இவர் தத்துவத் துறையில் 19 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பேராசிரியராக மதிக்கப்பட்டவர். அத்துடன் அரசியல் கலையிலும் வல்லுநர்; தர்க்கவியலில் வித்தகர். 1902 ஆம் ஆண்டு அவர் உயிர் பிரியும் வரை பல்வேறு பல்கலைக் கழகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேராசிரியர் ஆக்கிக் கொண்டன. இறந்த பிறகும் கூட அவரது நினைவைப் பாராட்டும் வகையில் மான்செஸ்டர் பல்கலைக் கழகம் ‘ஆடம்சன் விரிவுரைகள்’ என்று இன்றுவரை சிறப்புச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது.
இத்தனைச் சிறப்பையும் பெற்ற அவர் கடைசி மூச்சுள்ளவரை “நான் ஒரு பகுத்தறிவாளன்” என்று துணிந்து பகிரங்கமாகக் கூறி வந்தார். இப்படிப்பட்டவர் தான் இவர் என்று தெரிந்திருந்தும்கூட இவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு முன் வந்தனவென்றால் அவரது அறிவாற்றலுக்கு இதைவிடப் பெரிய சான்று வேறென்ன?
சமய முறையில் அவர் கடவுள் பற்றி கவலைப்படாத Agnostic. ஒழுக்க விஷயத்தில் அவர் Utilitarian. அதாவது எந்த ஒரு தார்மீகக் கொள்கையையும், அது மனித குல நல்வாழ்வுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை வைத்தே அதை ஏற்பவர், பரப்புபவர். தத்துவத்தில் அவர் Monist, அதாவது அத்துவைதவாதி. கிறிஸ்துவ உலகத்தையே கலக்கியடிக்கும் வண்ணம் ஓர் உண்மையை இவர் தமது தள்ளாத வயதில் 1700 ஆம் ஆண்டில் கூறினார். “தார்மீகக் கொள்கையும் நடைமுறையும்” என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இந்த கருத்து காணப்படுகிறது.
கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப உலகம் எங்கும் லட்சோப லட்சம் பிரச்சாரகர்களை மேனாடுகள் அனுப்பிக் கொண்டிருந்த காலம் அது. “தேவனுடைய மக்களாகவும், கர்த்தருடைய பிள்ளைகளாகவும்” உலகின் பிற மத மக்களை மதம் மாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. ‘உலகத்தையே கிறிஸ்துவம் வென்று வருகிறது’ என்று பாதிரிகளும் பிற மதவாதிகளும் கொக்கரித்து வந்தனர்.
“உலகத்தை கிறிஸ்துவம் வெல்லவில்லை; கிறிஸ்துவத்தை தான் உலகம் வென்று விட்டது” என்று வெடிகுண்டுக் கருத்தை வீசினார் பேராசிரியர் ஆடம்சன். உலக மக்களுக்கு வசதியாக இருப்பதால பிற மதங்களை விட்டு விட்டு கிறிஸ்துவத்தை தழுவுகிறார்களே ஒழிய பரமண்டல ஆசையோ, மத நம்பிக்கையோ அல்ல என்று தன் Utilitarian கொள்கை அடிப்படையில் கூறினார் இவர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|