பகுத்தறிவு பிரச்சாரம் - அரசியல் கட்சிகள் முன் வருமா?
கோவை உடையாம் பாளையத்தில் ஓட்டல் நடத்திவரும் இரகுபதி, தனது 9 மாத கைக்குழந்தையை, தனது மனைவியிடமிருந்து பிடுங்கி, கை, கால், இடுப்பில் ஓங்கி அடித்து, கட்டிலில் தூக்கிப் போட்டு, சாகடித்தான். இந்தக் குழந்தை யால், தகப்பன் உயிருக்கு ஆபத்து என்று சோதிடம் சொன்னதே இதற்குக் காரணம். கடந்த வாரம் பெரியார் முழக் கத்திலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி ‘சோதிடத்தால் வந்த மோசம்’ என்ற தலைப்பில் கலைஞர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சோதிட மோசடியைச் சாடியுள்ளார். இராமனுக்கு முடிசூட்ட நல்ல நாள் குறித்துக் கொடுத்தவர் வசிஷ்டர். ஆனால் ராமன், முடிசூட்ட முடியாமல் காட்டுக்குத்தான் போனான். இதிகாசத்தில் இதைப் படித்தப் பிறகும், ஆருடம், சோதிடம், நாள் நட்சத்திரம், சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் என்ற பஞ்சாங்க நம்பிக்கையில் அறிவைப் பறி கொடுக்கலாமா என்று கலைஞர் கேட்டுள்ளார்.
சோதிடம் உண்மையாக இருக்குமானால், இந்தக் குழந்தை பிறந்த ஜாதகப்படி அந்தக் குழந்தை 9 மாதங்கள் மட்டுமே உயிரோடிருக்கும். அதற்குள் பெற்ற தகப்பனே, குழந்தையை அடித்துக் கொன்று விடுவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் என்று, பகுத்தறிவு அடிப்படையில் வினா எழுப்பியிருக்கிறார். பகுத்தறிவுப் பிரச்சாரம் இன்னும் வேகமாகப் பரவவேண்டி யிருக்கிறது என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்’ நாளேடு (ஆக.2) பகுத்தறிவுப் பிரச்சாரம் வலுவாக்கப்பட வேண்டும் என்று ஒரு தலையங்கம் எழுதியுள்ளது.
பகுத்தறிவுப் பிரச்சாரம் வேகமாக நடைபெற வேண்டும் என்று கலைஞர் கூறியுள்ள கருத்தை வழிமொழிந்து, இதை சமூக அக்கறையுள்ள மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று அத் தலையங்கம் வலியுறுத்துகிறது. மூநம்பிக்கைகளை ஊடகங்களும், குறிப் பாக அனைத்துத் தொலைக் காட்சிகளுமே பரப்பி வருவதையும் தொலைக் காட்சிகளில் வரும் மெகாத் தொடர்கள்- இதே வேலையைச் செய்து வருவதையும், அத்தலையங்கம் சுட்டிக் காட்டுகிறது. பகுத்தறிவுப் பிரச்சாரத்தை அறிவியல் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் கலை, இலக்கிய அமைப்புகள் பரப்ப முன்வர வேண்டும் என்று அத் தலையங்கம் வலியுறுத்துகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|