‘ஆகம’ப் படியே உரிமை இல்லை!
(காஞ்சி சங்கராச்சாரி ராமேசுவரம் கோயில் கருவறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் ஜெயேந்திரர் வழக்கு தொடர்ந்துள்ளார். நூறு ஆண்டு காலமாக, கோயில் கருவறைக்குள், சங்கராச்சாரிகளை அனுமதித்து வரும் மரபை கோயில் நிர்வாகம் மீறிவிட்டது என்று, சங்கராச்சாரி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார். சங்கராச்சாரிகள் மரபுப்படி, கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே உண்மை வரலாறு. இதுபற்றி திருவிதாங்கூர் பி.சிதம்பரம் பிள்ளை எழுதி 1935-ல் வெளியிடப்பட்ட ஆலயப் பிரவேச உரிமை எனும் நூலில் இடம் பெற்றுள்ள கருத்து இது: )
“பிராமணர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைவதாலும், அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் ஜன சமூகத்துக்கும் கேடு விளையுமென ஆகமங்கள் வெளிப்படையாகப் பிராமணர்களைத் தடுத்திருந்த போதிலும், நாம் இப்பொழுது என்ன காண்கின்றோம்?
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் குறித்திருக்கின்றார்.
“ஒரு நூற்றாண்டுக்கு முன் வரையிலும் பழனிக்கோயில் பூசாரிகூட பார்ப்பனரல்லாதாவனாகவேயிருந்தான்” என்று ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் அவர்கள் குறிப்பிட்டார். இப்பொழுது, அதாவது அந்தக் கோவில் பிரிட்டிஷாரிட மிருந்து பிராமண ஆதிக்கத்துக்கு மாறிய பிற்பாடு, அங்குள்ள பூசாரி ஒரு பிராமணன் தான் என்பது இதினின்றும் வெளிப்படையாகின்றது.
“உதாரணமாக திருச்செந்தூரில் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பூசை செய்ய ஆதி சைவப் பூசாரிகளுக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட மாத்துவ அல்லது ஸ்மார்த்தப் பூசாரிகளுக்கு,(பார்ப்பனர்கள்) அந்தக் கோவில் வழிபாட்டுக்காக ஆதிகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட குமார மந்திரம் என்ற ஆகமத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.” கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து பூசை செய்யப் பல இடங்களிலும் பல தடவைகளில் ஸ்ரீ சங்கராச்சாரியார் முயற்சித்ததுண்டு. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய “லோககுரு”வான சங்கராச்சாரியாருக்குக் கூடச் சில கட்டுப்பாடுகளுண்டு என்பதாகத் திருவிதாங்கூர் அரசாங்கச் சரித்திரக் குறிப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது.
“ஸ்ரீ சங்கராச்சாரியார் தீட்சை பெறாதவரானபடியால், ஆகமவிதிப்படி அவர் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.” “ஆதி சங்கரரின் விக்கிரகத்தை சைவக் கோவில்களில் பிரதிஷ்டை செய்ய பலத்த முயற்சி செய்யப்பட்டது; செய்யப்பட்டு வருகிறது.” சில சந்தர்ப்பங்களில் பிராமணர்களால் தூண்டப்பட்டு சங்கராச்சாரியார் “கோவிலுக்குள்ளேகூட தங்குவதுண்டு.” இவையெல்லாம் ஆகம சாஸ்திரங்களுக்கு முற்றும் விரோதமானவையாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|