இலக்கு சக்தி அருளானந்தம்
எமக்கும் சிறகுகள் இருக்கின்றன
எம்மினத்தவர்க்கு இருப்பது போலவே
அவற்றின் பயன் குறித்து
ஆயிரமாயிர மாண்டுகளாய்
நாங்கள் உணரவுமில்லை
எமக்கு உணர்த்தவுமில்லை.
சிற்சில சமயம் அவைகளை
சுமையாகக் கூட கருதியிருக்கிறேன்
காரணம்...
நேரமிருந்து உன்மனதில் நேசமிகுந்து
கனிவைப் பார்வையில் தேக்கி
மென்மையாய் வருடும் சுகத்திற்காக...
என் அருகாமை தேவைப்படாத நேரங்களில்
நீ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது
காதுகுடைய இறகைப்பிடுங்கிக் கொண்டபோது
பயிற்றுவித்த பொறுமையினால்
சகித்து வந்திருக்கிறேன்.
பின்னொரு நாள்...
சிறகுகள் பறத்தலுக்குரியது என்பதை
நான் விளங்கிக் கொண்டபோது
சிறுகக் சிறுக பிடுங்கப்பட்ட
என் சிறகுகள்
பறத்தலுக்கான வலுவற்றுப் போயிருந்தன
இருப்பினும் என்ன...
சிறகுகள் முளைக்கும்-
புதிய சிறகுகளோடு
பறத்தலே எனது இறுதி இலக்கு!
|