Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
ஆளுமை
லலிதா

மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பன்னாட்டு வங்கியின் அலுவலகம். நீண்டு கிடந்த அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்களும் பணி மும்முரத்தில் தம்மை மறந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மதியநேரம் வருவதற்குள்ளாகவே பரபரப்பு மெல்ல அடங்கி மாலை நேரம் நெருங்கிய போது அலுவலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது.

அவ்வலுவல் அறையில் தனக்குண்டான இருக்கையில் அமர்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளங்கோ அலுவலகம் வெறுமையாவதை உணர்ந்து, நேரத்தை அறிந்து கொள்ள இடது கையின் மணிக்கட்டினைப் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது. கைக்கடிகாரம் என்னவாயிற்று? அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்றிரவு வீட்டில் நடந்த களேபரத்தில் காலையில் கடிகாரத்தை வீட்டிலேயே விட்டு வந்திருந்தான் என்பது. சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறாகி இருந்தது.

வீட்டு நினைவு அவனைச் சுறுசுறுப்பாக்கி விட்டது போலும். மளமளவென எழுந்து பைல்களை மூடியவன், தனது சிறிய சூட்கேசைச் சரிபார்த்து கிளம்பத் தயாரானான். அலுவலகத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கீழிறங்கி வந்து கொண்டு இருந்தவனின் மனது நேற்றிரவு வீட்டில் நடந்த அசம்பாவிதங்களை அனிச்சையாக அசைபோட்டது. சங்கீதாவிடம் தான் கொஞ்சம் அதிகப்படியாகவே பேசிவிட்டதாக எண்ணினான். அநேகமாக இன்று அவள் அலுவலகத்திற்குக் கூடச் சென்றிருக்க மாட்டாள். நேரே வீட்டிற்குச் சென்று அவளைச் சமாதானம் செய்ய வேண்டும். முடிந்தால் வெளியில் எங்காவது கூட்டிச் சென்று வரவேண்டும் எனவும் நினைத்துக் கொண்டான்.

பலவிதமான எண்ணங்களின் அலைமோதலில் மனது கிடந்து தவிக்க ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் இளங்கோ. வீட்டின்முன் விளக்கு எரியக் காணோம். கதவில் பூட்டுவேறு தொங்கியது. சங்கீதா இன்றும் வேலைக்குச் சென்றுவிட்டாளா... சென்றிருந்தாலும் இந்நேரம் திரும்பி இருக்க வேண்டுமே! மாற்றுச் சாவியை எடுத்துச் செல்லாமல் வீட்டிலேயே விட்டுச் சென்றதும் நினைவில் உறைத்தது. என்ன செய்வது என்று நின்றிருந்தவனின் சிந்தனையை பக்கத்து வீட்டுச் சிறுமியின் குரல் கலைத்தது.

மாமா..இந்தாங்க சாவி... அக்கா குடுத்துட்டுப் போனாங்க...

எங்க போயிருக்காங்க...

தெரியலே மாமா... அம்மாதான் சாவியை உங்ககிட்டே குடுக்கச் சொன்னாங்க. அக்காவும், அமுதாவும் காலையிலேயே ஆட்டோவிலே கௌம்பிப் போனதா அம்மா சொல்லச் சொன்னாங்க என்று விஷயத்தைச் சொல்லிச் சென்றாள் சிறுமி.

அமுதாவைப் பள்ளிக்கு அனுப்பாமல் தன்னுடனே அழைத்துச் சென்று விட்டாளா? எங்கே சென்றிருப்பாள்..? இளங்கோ இடிந்தான். எதிர்பாராத சூழல் அவனைக் கடுமையாகத் தாக்கியது. தடுமாற்றத்துடன் பூட்டினைத் திறந்து உள்ளே நுழைந்தவன் விளக்கினைப் போட்டுவிட்டு பொத்தெனச் சோபாவில் விழுந்தான். எங்கு சென்றிருப்பாள்... எப்போதும் போல் வருகின்ற வழக்கமான சச்சரவு என நினைத்தது எவ்வளவு பெரிய அறியாமை... முகத்தைக் கைகளால் தாங்கியபடி தலை கவிழ்ந்தான்.

டீப்பாயின் மீதிருந்த வெள்ளைத்தாளில் சங்கீதாவின் கையெழுத்து பளிச்செனத் தெரிய படபடப்பான இதயத்தோடு அதைக் கையில் எடுத்தான்.
நமது இருவரின் மனநிம்மதியின் பொருட்டு அமுதாவுடன் நான் வெளியேறுகிறேன். என்னைத் தேடுவதையும் சந்திப்பதையும் தவிர்த்தால், அதுவே எனக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்- சங்கீதா.

இளங்கோ வெலவெலத்துப் போனான். கையில் இருந்த கடிதமும் இலேசாக நடுங்குவது போல் தோன்றியது. நேரம் மட்டும் சீராக எவ்வித சிக்கலுமின்றி ஓடிக் கொண்டிருந்தது. சங்கீதா- இளங்கோ திருமணம் முடிந்து ஆறாண்டுகளில் ஐந்து வயது அமுதா ஒரே மகள். இருவருமே வேலை பார்த்து வருகின்றனர் என்பதால் இல்லறம் அடிப்படையான பொருளாதார நெருக்கடியின்றி நல்லறம் போல் தோற்றம் தந்து கொண்டிருந்தது. சலனமின்றி இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கை, சூறாவளியாய் மாற எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் கண்ணன் என்கிற கார்முகில்.

இளங்கோ இருக்கும் வீட்டின் எதிர்க்குடித்தனக்காரர் வழக்குரைஞர் செந்தில்நாதன். அவரது தூரத்து உறவு தான் கண்ணன். தாய் தந்தையற்ற அவனுக்கு ஆதரவாகவும் தனது தொழிலுக்கு உதவியாகவும் இருக்கட்டுமேயென்று அவனைத் தனது வீட்டிற்கு வரவழைத்து இருந்தார். அவருக்கு நீதிமன்ற வேலைகளில் உதவியாக இருந்தவன் இலக்கியத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக ஒரு கவிஞனாகவும் இருந்தான். இதில் செந்தில்நாதனுக்கும் ஏகப் பெருமை. அவன் இங்கு வந்து சேர்ந்த மூன்று நான்கு மாதங்களில் தன் மகள் அமுதாவின் பிஞ்சு மனதைக் கவர்ந்திருக்கிறான் என்பதை மட்டுமே அறிந்திருந்தான் இளங்கோ. ஆனால் அண்மையில் தான் தெரிந்தது- அவன் தனது மனைவியின் மனதிலும் சலனத்தை உண்டாக்கி இருக்கிறான் என்பது.

எப்போதும் போல் அன்றிரவு குழந்தை அமுதா கண்ணுறங்கக் காத்திருந்தவன் மெல்ல சங்கீதாவை அணைக்க முயல... அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

என்ன சங்கீ.. ஏன் எந்திரிச்சுட்டே...

எனக்கு இதெல்லாம் ஒண்ணும் பிடிக்கலே...

ஏன்.. என்னாச்சு உனக்கு...

எந்திரத்தனமா இருக்கிற இந்த வாழ்க்கையே எனக்குப் பிடிக்கலே...

என்ன... என்னென்னவோ புதுசாப் பேசறே... குரலில் எரிச்சல் தெரிந்தது.

புதுசு ஒண்ணும் இல்லே...வாழ்க்கையிலே ஒரு ரசனை வேணும்னு சொல்றேன்.

ரசனையா... என்ன உளர்றே?

உளறலே.. உண்மையைச் சொல்றேன்..

என்ன பெரிய உண்மையைக் கண்டு பிடிச்சிட்டே..

சாப்பிடறதிலே ஒரு பிடித்தம் இருக்கணும். உடுத்தறதுலே பிடித்தம் இருக்கணும்.. மனுசங்க மேலே ஒரு பிடித்தம் இருக்கணும். அதுக்குப் பேரு தான் ரசனை. அதுதான் வாழ்க்கை...

எனக்கு எதுலேயும் பிடித்தம் இல்லேங்கிறயா..

ஆமா... எது மேலேயும் பிடித்தம் கிடையாது.. சொல்லப்போனா... என்னோட படுக்கறதுலே கூடப்பிடித்தம் கிடையாது. அய்யோ கடனேன்னு எல்லாத்தையும் செய்யறது எனக்குப் பிடிக்கலே..

அப்ப ரசனை உள்ள எவனையாவது பாக்க வேண்டியதுதானே குரலில் கோபம் தெறித்தது.

ஓரிரு நிமிட மவுனத்திற்குப் பிறகு சங்கீதா சொன்னாள்.

தினமும் கண்ணனைப் பார்த்துகிட்டுத்தானே இருக்கேன்...

சீ... இப்படிச் சொல்ல உனக்க வெட்கமா இல்லே...

வெட்கப்பட்டா உண்மை வெளியே வராதே... அதை மனசுக்குள்ளேயே வெச்சுக்கிட்டு என்னாலே புழுங்கிச் சாக முடியாதே!

சம்பாதிக்கிறோம்ங்கற திமிருலே பேசறியா.. உன்னைக் கவனிச்சுக்கறேன் என்று கத்தியவன் கட்டிலை விட்டெழுந்து ஆத்திரத்துடன் அறைக் கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வெளியேறினான்.

வேலை முடிந்து ஆறு மணிக்குள்ளாக வீட்டில் ஆஜராகிவிடும் சங்கீதாவிற்கு ஒரு நல்ல நண்பனாகவே அறிமுகம் ஆனான் கண்ணன். பள்ளியிலிருந்து வந்து பெற்றோருக்காகக் காத்திருக்கும் சிறுமி அமுதாவோடு மெல்லத் தன் நட்புறவைத் தொடங்கியவன் நாளடைவில் சங்கீதாவின் நட்புக்கும் ஆளானதில் ஆச்சரியமேது?

குழந்தையோடு குழந்தையாகி விளையாடும் அவனது குணம் - அந்த இளந்தளிரின் குணாதிசயத்தையும் நுணுக்கமாகக் கண்டு கொள்ளும் அந்தத் திறன், மூன்று மாதப் பழக்கத்திலேயே தன்னை முழுவதுமாகப் புரிந்து கொண்ட அந்தப் பாங்கு... சங்கீதா மெல்ல மெல்ல அவன் வசமாகிக் கொண்டிருந்தாள்.

அன்று அரசு விடுமுறை. எப்போதுமே வீட்டில் தங்காத இளங்கோ வழக்கம் போலவே வெளியே சென்றிருந்தான். சங்கீதா துணிகளைத் துவைத்து மாடியில் காயப்போட்டு விட்டு ஓய்வாகப் படுத்தவள் அப்படியே அயர்ந்து உறங்கியும் போனாள். மழை பலமாகப் பெய்யும் சத்தத்தில் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். அருகில் அமுதா ஆழ்ந்த உறக்கத்திலிருக்க தடதடவென்று ஓடிப்போய்க் கதவைத் திறந்து மாடிக்கு ஒட எத்தளித்தவள் கதவருகே ஒரு நாற்காலியின் மீது கிடந்த அந்தத் துணிக்குவியலைப் பார்த்தாள். அருகில் இன்னொரு நாற்காலியில் அமர்ந்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் கண்ணன். சங்கீதா உறக்கம் கலைந்த விழிகளில் கனிவைத் தேக்கி அவனைப் பார்த்தாள்.

உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.. கதவை இலேசாத் தட்டி இருந்தாலே நான் எழுந்திருச்சிருப்பேனே...

இதுலே என்ன சிரமம் இருக்கு... எப்பவோ ஒரு நாள் மத்தியானம் நிம்மதியாத் தூங்கறீங்க.. அதை ஏன் கெடுக்கணும்? சங்கீதா சிரித்தபடி துணியினை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

மற்றொரு நாள் மாலை... இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் சங்கீதா கேட்டாள்.

அதென்ன கார்முகில்னு ஒரு பேரு... கவிஞரா இருந்தா இதுமாதிரித்தான் பேர் வெச்சுக்கணுமா...

நானா வெச்சுக்கிட்ட பேர் இல்லே அது. என்னை வளர்த்து ஆளாக்கினதே என் மாமாதான்னு சொல்லி இருக்கேன் இல்லையா... அவரு எப்பவுமே என்னை இப்படித்தான் கூப்பிடுவாரு. கண்ணான்னு என்னைக் கூப்பிட்டதே இல்லே... சரிதான்.. நாம கார்முகில் மாதிரி கருப்பா இருக்கிறதாலே அப்படிக் கூப்பிடறாரு போல இருக்குன்னு நான் நெனச்சுக்கிட்டேன். அப்புறம் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் அதையே புனைப்பெயராவும் வெச்சுகிட்டேன்...

அதுசரி.. நீங்க கருப்புன்னு யார் சொன்னது?

அட நீங்க வேறெ... சும்மா ஒரு ஜோக்குக்குச் சொன்னேன். மாமா ஒரு தமிழ் ஆர்வலர். அதனாலே அப்படிக் கூப்பிட்டு இருந்திருப்பாரு...

அதில்லே... நான் சொல்லட்டுமா... எதனாலே அவர் உங்களை அப்படிக் கூப்பிட்டார்னு...

சொல்லுங்களேன் கேட்போம்...

உங்களோட ஈரமான மனசைப் பத்தி அவரு அப்பவே புரிஞ்சுகிட்டாரு. அதனாலே தான் உங்களுக்கு இந்தப் பேரையே வெச்சிருக்காரு...

மனதை ஈர்த்த இந்தப் பதிலில் அசந்து போனவனாய் அவளது கண்களை ஒரு கணம் கூர்ந்து நோக்கியவன் அந்தப் பார்வையின் கூர்மையைத் தாங்காது தனது கண்களை வேறிடத்தில் சுழல விட்டான். இப்படித்தான் இரு மனங்களின் சங்கமிப்புக்கு அன்று வித்திடப்பட்டது. சங்கமம் இறுகத் தொடர்ச்சியாக பல சம்பவங்கள்.

அன்று சற்று முன்கூட்டியே வீடு வந்து சேர்ந்தவளை கண்ணனே எதிர் கொண்டான். அமுதா கூட டியூஷனிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை.

என்ன... இன்னிக்கு வீட்லே இருக்கீங்க.. கோர்ட்டுக்குப் போகலையா...

இன்னக்கிப் போகலே.. நாளைக்கு ஒரு கவியரங்கத்துலே கலந்துக்கப் போறேன். அதுக்குக் கொஞ்சம் சிறப்பான கவிதையைத் தயாரிக்கணுமே.. காலையிலிருந்து அதுதான் வேலை இப்பத்தான் எழுதி முடிச்சேன்.

அடடே அப்படியா.. எனக்குப் படிச்சுக் காட்டுவீங்களா...

ஓ... தாராளமா இதை விடப் பெரிய சந்தோஷம் இருக்க முடியுமா.. என்ன...

சங்கீதா புன்னகைத்தபடி இருங்க.. ஒரு பத்து நிமிஷத்துலே வந்துடறேன் என்று கூறியவாறு கதவின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவள் முகம் கழுவித் துணி மாற்றிச் சொன்ன நேரத்தில் வெளியில் வந்து அவனருகில் நாற்காலியைப் போட்டமர்ந்தாள்.

கவிதைக்குத் தலைப்பு என்ன...

கவிதைத் தலைப்பு இல்லே... கவியரங்கத் தலைப்புதான்

என்ன தலைப்பு

சமூக வளர்ச்சிக்கு திரைப்படங்களின் பங்களிப்பு என்றான் சிரித்தபடியே.

இவள் எதிர்க்கேள்வி தொடுத்தாள்

சமூக வளர்ச்சிக்குத்தானா... சமூக மாற்றத்துக்கு இல்லையா?

வளர்ச்சி அடைஞ்ச சமூகம்தான் மாறுதலுக்குத் தயார் ஆகும்னு அவங்க நெனச்சிருக்கலாம்...

இந்தத் தத்துவார்த்த பதில் அவளுக்கும் பிடித்திருந்தது. மலர்ந்த முகத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரி.. அதிருக்கட்டும், கவிதையைப் படிக்கிறேன்.. கேளுங்க என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையை ஏற்ற இறக்கங்களோடு அவளிடம் படித்துக் காட்டினான். மலர்ந்த முகத்தில் உற்சாகம் பொங்கியதைக் கண்டு அவனும் மகிழ்ச்சியுடனேயே கேட்டேன்.

எப்படி இருக்கு... அடியேனுடைய கவிதை...

அற்புதமா இருக்கு... நாளைக்குக் கவியரங்கத்துலே இதுதான் முத்திரை பதிக்கப்போகுது.

மனத்தின் குதூகலம் அவனது முகத்தில் தெரிந்தது. அவன் கேட்டான்.

உங்களுக்கு கவிதையெல்லாம் பிடிக்குமா?

கவிதை பிடிக்கும்.. பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும்..

எதுமாதிரிப் பாட்டு... சினிமாப் பாடல்களா...

அதுவும் பிடிக்கும்.

அதுவும்தான்னா.. எதுமாதிரிப் பாட்டு...?

பழைய சினிமாப்பாடல்களைத் தான் நான் எப்பவுமே விரும்பிக் கேட்பேன். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு எல்லாமே எனக்கு அத்துப்படி. அந்தக் காலத்து காதல் பாட்டுகள் கூட நல்ல இருக்கும்... சங்கீதா தனது ரசனையைச் சொன்னாள்.

ஏதாவது ஒரு பாட்டைச் சொல்லுங்க... பார்க்கலாம்...

ம்... ஏதாவது ஒரு பாட்டா.. என்று இழுத்தவள் நீங்க அடிக்கடி ஒரு பாட்டை முணுமுணுத்துக்கிட்டு இருப்பீங்களே.. அந்தப்பாட்டு கூட ரொம்பப் பிடிக்கும். எதிர்பாராத இந்த பதிலில் திக்குமுக்காடிப் போனான் கண்ணன். இருந்தும் ஒன்றும் தெரியாதவன் போலக் கேட்டான்.

என்ன பாட்டு...

ஓராயிரம் பார்வையிலே... உன் பார்வையை நானறிவேன்...

சரேலென உடலெங்கும் மின்னல் பாய்ந்த உணர்வு ஏற்பட்டது அவனுக்கு

அது எனக்குப் பிடிச்சது... உங்களுக்குப் பிடிச்சது ஒண்ணு சொல்லுங்க... குரலில் உற்சாகம் கரைபுரண்டோடியது.

எனக்கா... ஓரிரு நொடிகள் கண்ணை மூடி யோசித்தவள் பிறகு மெல்லச் சொன்னாள் கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்.. நீயில்லையேல் நானில்லையே... ங்கிற இந்தப் பாட்டும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

தலைமுதல் கால்வரை புது இரத்தம் ஊற்றெடுப்பது போல் தோன்றியது கண்ணனுக்கு. இருவரின் நெருங்கிய நட்பும் காதலாக உருமாற்றம் பெற இந்தச் சம்பவமே அடி கோலிவிட்டது. இரண்டு மூன்று தினங்கள் மாயமாய் மறைந்து வேகமாய்க் கரைந்து போயின. அன்று மாலை இருவரும் சந்தித்த போது கண்ணன் கேட்டான் சங்கீதா...

நாம இப்படி ஒரு எண்ணத்தை வளர்த்திகிட்டுப்போறது தப்பில்லையா...?

எங்கேயோ போய்த் தேடிக் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்தா வளர்த்தறோம்... அதுவா வந்தது... வளருது...

அவரு... இளங்கோ என்னைப் பத்தி என்ன நெனைப்பாரு... கடைஞ்செடுத்த அயோக்கியன்னு நெனைக்க மாட்டாரா... அவரோட மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுலே புகுந்த அரக்கன்னு என்னைக் கேவலமாத் திட்டுவாரே...?

அயோக்கியன்னு நெனைப்பாரு... ஆனா அரக்கன்னு திட்டமாட்டாரு... சங்கீதா சற்றே சிரித்தபடி சொல்ல கண்ணன் குரலில் கண்டிப்பைக் காட்டினான்.

என்ன சங்கீதா... நான் சீரியசாய் பேசறேன். நீங்க என்னவோ ஜோக்கடிக்கிறீங்களே...

இல்லே கண்ணன்... நான் உண்மயைத்தான் சொல்றேன். மகிழ்ச்சியான குடும்ப வாழ்வைக் குலைச்சாத்தானே அரக்கன்னு சொல்லுவாரு.

அவருக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானது இல்லே. எதுவுமே அவருக்கு மகிழ்ச்சியைத் தராது. அப்பப்ப குடிச்சிட்டுத் தன்னை மறந்து கெடப்பாரே... அது ஒண்ணுதான் அவரோட மகிழ்ச்சி...

என்ன சங்கீதா இப்படிச் சொல்றீங்க... நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...

விருப்பம் இல்லாமே எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஆனா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்கலே. திருமணம் நிச்சயமானதுக்கப்புறம் ஒரு நாள் என்னைக் கேட்டாரு- என்னைப் பிடிச்சிருக்கான்னு. இருபத்து மூணு வயசுப் பொண்ணுக்கு ஒரு இருபத்தெட்டு வயசு ஆணைப் பிடிக்காமல் போகுமா... பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தாள். என்னைப் பிடிச்சிருக்கான்னு நான் கேட்டேன். உன்னோட நடை பிடிச்சிருக்கு... நீ புடவை கட்டற அழகு பிடிச்சிருக்குன்னாரு. நடையும் உடையும் பிடிச்சுப் போறதுக்குப் பேரு காதல் இல்லேன்னு நான் தெரிஞ்சுக்கறதுக்குள்ளே அமுதா பொறந்துட்டா... என் மனசோட வாழற ஓர் ஆணா இளங்கோ எப்பவுமே இருந்ததில்லே.. எந்திரத்தனமா ஒரு வாழ்க்கை நடந்துகிட்டு இருக்கு...

சொல்லும் போதே சங்கீதாவின் குரல் உடைந்ததைக் கண்ட கண்ணன் மனம் உருக தவிப்புடன் முதல் முறையாக அவளின் கரங்களைப் பற்றினான். அந்தத் தவிப்பிலும், பற்றுதலிலும் பரிவு வழிந்து கொண்டிருப்பதை முழுமையாக உணர்ந்தாள் சங்கீதா.

இப்ப என்ன பண்ணறது சங்கீதா எனக்கு ஒரே குழப்பமா இருக்கே...

நீங்க குழம்ப வேண்டிய தேவை இல்லே. இந்த விஷயத்தை நான்தானே ஆரம்பிச்சேன். நானே தான் இதை முடிக்கணும். இந்த விஷயத்தை நம்ம மூணு பேரோட விஷயமா நான் நெனைக்கலே. எங்க ரெண்டு பேரோட பிரச்சினையாத்தான் பார்க்கறேன். இதை சுமுகமாத் தீர்த்துட முடியும்னு நான் நம்பறேன். கண்ணன்.. என்மேலே உங்களுக்கு நம்பிக்கை இருக்கா...

சமீப காலமா நான் என்னை விடவும் உங்களைத்தான் அதிகமாக நம்ப ஆரம்பிச்சிருக்கேன் சங்கீதா... சொன்னவனின் குரலில் உறுதி தெரிந்தது.
நிலை கொள்ளா மகிழ்ச்சியில் சங்கீதா மிதந்தாள்.

அன்றைய இரவில் தான் இளங்கோவிடம் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொன்னாள் சங்கீதா. அப்போதிருந்தே இளங்கோவின் குடும்ப வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதே சண்டைக்கான காலம் ஆனது. படுக்கையறையே போர்க்களம் என்றாயிற்று. இன்றிரவும் அப்படித்தான் ஆரம்பித்தது ரகளை. இளங்கோ உரக்கக் கேட்டான்.

வரிஞ்சு கட்டிகிட்டு நீ பண்றதே நியாயம்னு காட்டுக் கூச்சல் போடறியே... நான் என்ன பண்ணணும்னு சொல்றே..

எத்தனையோ முறைசொல்லியாச்சு... இனிப் புதுசா என்ன சொல்றது...

சொல்லு... கடைசியா உன் திருவாய் மலர்ந்து சொல்லித் தொலை

சங்கீதா கோபத்தில் உலரும் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு பின் அழுத்தமாகச் சொன்னாள்.

ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்...

நான் ஒத்துக்க முடியாதுன்னு சொல்றேன்.

அப்ப சொல்லாம கொள்ளாம நான் ஒதுங்கிக்குவேன்

அப்படீன்னா கோர்ட்டுக்குப் போ.. கேஸ்போடு... எனக்கு என் புருஷனைப் பிடிக்கலே... இன்னொருத்தனைத் தான் பிடிச்சிருக்கு. அவனைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு டைவர்ஸ் வேணும்னு. முதல்லே எங்கிட்டே இருந்து டைவர்ஸ் வாங்கு.

பொண்ணுகளுக்குப் பாதகமா இருக்கிற சட்டத்தைக் கையிலே வெச்சுக்கிட்டு காலம் கடத்திடலாம்னு நெனைக்கறது எனக்குப் புரியுது. எனக்கு டைவர்ஸ் தேவையில்லே. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஆசைப்படலே. ஏன்னா... இந்த ஆறு வருஷ அனுபவத்திலே என்னைப்பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கிற விஷயம் அதனோட நம்பகத் தன்மையை இழந்திடுச்சு. அப்படித் தேவைப்படும்போது நான் அதப்பத்தி யோசிச்சுக்கிறேன். இப்ப என்னை டைவர்ஸ் செய்ய நீங்க வேணும்னா கோர்ட்டுக்கு போகலாம்...

எனக்கெதுக்கு டைவர்ஸ்... எவளோ ஒருத்தி பின்னாலே நானா நாய் மாதிரி அலையறேன்...

சங்கீதா மிகுந்த நிதானத்தோடு சொன்னாள்.

மூணு வருஷத்துக்கு முன்னாலே அந்த ஆனந்திப் பொண்ணோட படுக்கறதுக்கு முன்னாடி எங்கிட்டே இருந்து டைவர்ஸ் வாங்கணும்னு தோணலியா...

இளங்கோவின் முகம் சட்டென்று இருளடைந்தது. சுதாரித்தவனாகச் சொன்னான்.

அது பழைய கதை...

பழையதா இருந்தாலும் தாம்பத்திய உறவுலே விரிசலை ஏற்படுத்தின பயங்கரக்கதை...

ஆம்பளை அப்படி நடந்தான்னு பொம்பளையும் அப்படி இருக்க முடியுமா

ஏன்- பொம்பளையும் மனுஷி தானே?

இது ஆம்பளையோட உலகம்... தெரிஞ்சுக்க...

இன்னும் கொஞ்ச காலத்துலே பொம்பளைக்கும் சொந்தமாயிடும் அதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்றது நல்லது

அப்ப வேணும்னா பாத்துக்கலாம். இப்ப அடக்க ஒடுக்கமா ஒரு பொண்ணா இருக்கப் பாரு...

அதுக்கு இது ஆணோட உலகம்ங்கிறதை ஆமோதிக்கிற ஒரு பொண்ணைத்தான் பார்க்கணும்.

இயலாமையினால் இளங்கோ சீறினான்.

அறிவுகெட்ட தனமா பேசிகிட்டே போகாதே... ஏதோ தப்பு நடந்திருச்சி... எப்பப்பாரு அதையே சொல்லிகிட்டு... உலகத்திலே யாருமே பண்ணாத காரியத்தை நான் மட்டும் பண்ணின மாதிரி... பொண்ணுன்னா கொஞ்சமாவது ஈவிரக்கம் வேணும்...

ஈவு இரக்கம் இருக்கிறதாலேதான் முழுக்கதையையும் சொல்லி இன்னும் கடுமையா வாட்டாம இருக்கேன்...

இளங்கோவின் முகம் மாறியது. என்றாலும் கேட்டான்.

என்ன... என்ன முழுக்கதை

எனக்குத் தெரியாதுன்னு நெனைக்க வேண்டாம். அதை நான் என் வாயாலே சொல்லத்தான் வேணுமா...

என்ன தெரியும்... சொல்லு...

அந்தப் பெண்ணோட படுத்தது மட்டும்தான் எனக்குத் தெரியும்னு நெனைக்கறதே தப்பு. என்னோட குறைப்பிரசவத்தினாலே மூணு மாசம் எங்கம்மா வீட்டுலே இருந்து குழந்தை இறந்த சோகத்தோட நான் திரும்பி வந்தபோது என்னென்ன கூத்து இங்கே நடந்துச்சுன்னு அந்தப் பொண்ணோட அம்மாவே வந்து எங்கிட்டே சொல்லீட்டாங்க.. அந்தச் சின்னப்பொண்ணு கர்ப்பம் ஆன செய்தியைச் சொல்லி என்கால்லே வந்து விழுந்தாங்க... அது தெரியுமா?..

இளங்கோ வாயடைத்துப் போயிருந்தான்.

அப்பவே நான் அந்தம்மா கிட்டே சொன்னேன். ஆனது ஆயிடுச்சு பேசாம உங்க பெண்ணை இந்த ஆளுக்கே கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. நான் வேலை பாக்கிறவ. நானும் என் குழந்தையும் எப்படியும் பொழச்சுக்குவோம்னு சொன்னேன்.

அவன் தலைகவிழ்ந்து கிடந்தான். சங்கீதா தொடர்ந்தாள்.

அதுக்கு அந்த அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா... ஒன்னோட குணத்துக்கு இப்படியா ஒரு மனுசன் வந்து வாய்க்கணும். நாங்க கிராமத்தை விட்டு இங்க வந்தது ஏதோ வயித்துப் பொழுப்புக்குத்தான். உன்னோட பொழப்பைக் கெடுக்க அல்ல தாயி. வந்த எடத்துலே அவளை வேலைக்கு அனுப்பி வெச்சேன். நாகரிகம் கத்துகிட்டா. பக்கத்துவீட்டு ஆளு பசப்பு வார்த்தையிலே மயங்கி ஒடம்பு அரிப்பைத் தீர்த்துகிட்டா. பதினாறு வயசு தாம்மா ஆச்சு அவளுக்கு. இவரை எம் பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்டா என் சாதி சனம் எங்கள ஊருக்குள்ளேயே விடாது தாயி. நாங்க நாளக்கே எங்க கிராமத்துக்குப் பொறப்படறோம். அதைச் சொல்லத்தாம்மா வந்தேன்னு சொல்லி என் கையைப் பிடிச்சுகிட்டு அழுதது தெரியுமா? எனக்காக எம் மகளையும் மன்னிச்சிடு தாயின்னு கெஞ்சினாங்க. அப்பத்தான் தெரிஞ்சது அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அவளை வலையிலே சிக்கவைச்சது... இது போதுமா இன்னும் சொல்லவா...

அவனது பேயறைந்த முகம் அவளது பேச்சை நிறுத்தச் செய்திருக்க வேண்டும். எப்படியோ மூன்று தினங்கள் ஓடிவிட்டன. இளங்கோவின் சிந்திக்கும் சக்திக்கேற்ப அவனும் ஏதேனும் யோசித்திருக்க வேண்டும். அதுதான் நேரே கண்ணனிடம் சென்று நின்றான். அவன் உடனே இந்த இடத்தை விட்டுக் கிளம்பி ஆக வேண்டும் என்கிற தனது முறையீட்டையும் முன்வைத்தான். மாலையில் சங்கீதாவைச் சந்தித்த கண்ணன் இளங்கோ தன்னிடம் வந்ததைச் சொன்னான்.

சங்கீதா... விஷயம் ரொம்ப சீரியஸ் ஆயிடுச்சு... இளங்கோ என்னைத் தேடி வந்தாரு. நான் ஊரை விட்டுக் கௌம்பணும்னு சொல்றாரு...

உங்ககிட்டே வருவார்னு நான் நெனைச்சேன். என்கிட்டே பேசி ஜெயிக்க முடியலேன்னா அவருக்கு இருக்கிற ஒரே வழி நீங்க தானே... நான் அன்னக்கிச் சொன்ன மாதிரி இது எங்க ரெண்டு பேரோட பிரச்சினைதான். நீங்க ஒதுங்கி இருக்கிறதும் நல்லதுதான். ஒரு பத்து நாளைக்கு நீங்க ஊருக்குப் போயிடுங்க அல்லது இங்கேயே எங்கேனும் பிரெண்ட்ஸ் வீட்டுலே தங்குங்க. பக்கத்துலே இருக்கிறதைத் தவிர்க்கிறது நல்லதுதான்னு எனக்கும் தோணுது. கண்ணன்... எனக்காக இதைச் செய்வீங்களா...

இதை மட்டும் இல்லே சங்கீதா... உங்களுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன் என்றவன் சட்டென்று அவளது கைகளைப்பற்றி மென்மையாக முத்தமிட்டான். சங்கீதா உடல் சிலிர்க்கத் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள்.

நான்கு நாட்கள் சென்றிருக்கும். அன்றிரவும் படுக்கையறை போர்க்களமாகிக் கொண்டிருந்தது.

எங்கிட்டே பேசி ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறதாலே கண்ணன்கிட்டே போய் சரண்டர் ஆயாச்சா...

ஆமா... வேறெ வழி...

இதைச் சொல்ல வெட்கமா இல்லே...

பொம்பள உனக்கே வெட்கமில்லே.. நான் எதுக்கு வெட்கப்படணும்?

இந்த ஆம்பளை பொம்பளை பேச்செல்லாம் வேண்டாம். அவரை அனுப்பி வெச்சிட்டா வாழ்க்கை சுகப்பட்டுடுமா...

சுகப்படுதோ.. இல்லையோ... என்னோட குடும்ப கவுரவம் பாழாப் போகாமே இருக்குமே...

அந்த ஆனந்திப் பொண்ணோட சுத்தித் திரிஞ்சப்போ என்னோட குடும்ப கவுரவமும் இப்படித்தானே பாழாய்போயிருக்கும்...

நீ பொம்பளை உனக்கென்ன கவுரவம்...?

சீ... அறியாமையோட உச்சகட்டப் பேச்சு இது. நான் நெனச்சிருந்தா அன்னிக்கே சந்தி சிரிக்க வெச்சிருப்பேன். வேண்டாத புருஷனைக் கையும் களவுமாப் பிடிச்சு ஆம்பளையோட கவுரவத்தைக் காத்துலே பறக்க விட்டிருப்பேன் ஆனா... ஒரு அறியாப் பொண்ணோட வாழ்க்கை பாழாயிடக் கூடாது.. ஒரு ரெண்டுங்கெட்டான் ஆம்பளைக்கிட்டே ஒரு சின்னப் பொண்ணு மாட்டிக்கக் கூடாதுன்னு நெனச்சேன். அழுதுகிட்டே நின்ன அவ அம்மா கையிலே பொண்ணு கர்ப்பத்தைக் கலைக்க ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பிச்சேன். நான் நெனச்சிருந்தா கண்ணன் விஷயத்தைக் கூட மறைச்சு வெச்சிருக்கலாம். ஆனா நான் நம்பிக்கைத் துரோகம் செய்ய விரும்பலே. அதோட உடம்பு மேலே வந்த ஈர்ப்பு இல்லே. மனசு ரெண்டும் கலந்ததாலே வந்தது. எத்தனையோ பொண்ணுக இது மாதிரி சூழலுக்கு ஆட்பட்டு என்ன செய்யறதுன்னு புரியாமே இலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு நாய்படாதபாடு படறாங்க. அவங்களிலிருந்து என்னோட வாழ்க்கை மாறுபட்டு இருக்கணும்னு நெனச்சேன்..

எவ்வித சலனத்தையும் காட்டாமல் கேட்டான்.

அதனாலே அவனோட ஓடிப்போயிடுவேன்னு சொல்றியா

சங்கீதா நிதானத்தைக் கைவிட்டாள். ஓங்கிய குரலில் உறுதியாகச் சொன்னாள்.

அவரோட ஓடிப் போயிடுவேன்னு சொல்லலே. உன்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவேன்னு சொல்றேன். இனி உன்னோட வாழ என்னாலே முடியாதுன்னு சொல்றேன்

இளங்கோவின் மூர்க்கம் தலைக்கேறியது உரத்துக் கத்தினான்.

அதுவரைக்கும் நீ உயிரோட இருந்தால்தானே...? உன்னைக் குழியிலே போட்டு மூடிட்டு இல்லே வேறெ வேலை பார்ப்பேன்

அந்தக் கத்தலின் சத்தத்தில் உறக்கம் கலைந்து அமுதா சிணுங்க ஆரம்பிக்க அறையில் மெல்ல நிசப்தம் நிலவ ஆரம்பித்தது. இப்படித்தான் இளங்கோ-சங்கீதாவின் நேற்றைய சண்டை முடிவுக்கு வந்தது. சங்கீதாவின் கடிதத்தைப் படித்தவன் இரவு முழுவதும் உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தான். படுக்கையிலிருந்து எழுவதும், நடப்பதும், உட்காருவதுமாக இரவுப் பொழுது அவனைப் பாடாய்ப் படுத்தியது. காலைப் பொழுது மெல்லப் புலர்ந்து கொண்டிருந்தது.

கதிரவனும் அடிவானிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்து எங்கெங்கும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, உயர்ந்து வளர்ந்திருந்த அந்த மாமரத்தின் உச்சியிலிருந்து குயில் ஒன்று ஓயாது கூவிக் கொண்டிருந்தது. கட்டிலினின்றும் எழுந்த இளங்கோவின் முகத்திலும் புதிதான ஒளி... இருள் நீங்கிய தெளிவின் வெளிப்பாடு தானே இந்த ஒளிமுகம். அப்படியானால்... சங்கீதாவின் காதலை அங்கீகரிக்க இவனும் ஆயத்தமாகி விட்டானா.... என்ன?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com