Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை
- கோவை ஞானி

பெரியாரின் பெண்ணியம் குறித்து நேரிடையாகப் பேசுவதற்கு முன்னர் பெரியாரியம் குறித்து எனது சில விமர்சனங்களை இங்குக் குறிப்பிடவேண்டும். அப்பொழுது தான் பெரியாரிடத்தில் பெண்ணியம் எந்த தளத்தில் இடம் பெறுகிறது என்பதைத் தீர்மானிக்க முடியும். பெரியாரியத்தில் சாதி, மதம், பார்ப்பனியம் ஆகியவற்றின் எதிர்ப்புக்கே முதன்மை தருகிற போக்கை பெரியாரியத்தின் வலதுசாரிப் போக்கு என நான் கருதுகிறேன். பெருமளவில் சிந்தனைத் தளத்தில் மட்டும் இயங்குகிற இந்தப் போக்கு இன்று நிலவும் முதலாளியத்தைக் கடந்து செல்ல உதவாது என்பது மட்டுமல்லாமல் முதலாளிய எல்லைக்குள்ளேயே சுழன்று வருவதோடு முதலாளியத்தின் உள்ளியக்கமான சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் மக்கள் மீது அதிக அளவில் திணிப்பதற்கே பயன்படும். இன்றைய முதலாளியம் உலக அளவிலான ஆதிக்கங்களோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதலாளிகளும் மாநில, மைய அரசுகளும் வெட்கமில்லாமல் அந்நியர்களின் ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கின்றனர். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் நிலம், நீர், காடு முதலிய இயற்கை வளங்கள் அந்நியர்களின் தேவைக்காக நாசமாகி வருகின்றன. உழவர்கள் முதலிய அனைத்து மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்கள் அந்நியருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. அரசதிகாரம் பல மடங்கு பெருக்கிறது. பெயரளவுக்கு இருக்கிற ஜனநாயக உரிமைகளும் சிதைவுக்கு உள்ளாகின்றன. இத்தகைய சீரழிவுகள் குறித்தும் இவற்றால் யாரெல்லாம் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது குறித்தும் இங்கு விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. இயற்கையையும் மக்கள் வாழ்வையும் மக்களின் அறவுணர்வு முதலியவற்றையும் அழிப்பதன் மூலம் முதலாளிகளும் அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் இவர்களோடு ஒத்துழைக்கிற அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள், படிப்பாளிகள் என்று பலரும் பயன்பெறுகின்றனர். அரசதிகாரத்தை உள்வாங்கிக் கொண்ட திராவிடக் கட்சியினரும் இந்த அழிவுச் செயலில் ஆதாயம் பெறுகின்றனர்.

திராவிட இயக்கத்தின் வலதுசாரிப் போக்கினரைப் பொறுத்தவரை அந்நியரின் ஆதிக்கம் பற்றியோ இந்தியாவில் உடைமை வர்க்கத்தின் சீரழிவுகள் குறித்தோ நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் நம்மீது திணிக்கும் நாசங்கள் பற்றியோ இயற்கை அழிவது பற்றியோ அரசதிகாரப் பெருக்கம் குறித்தோ, சரியான கூர்மையான விமர்சனங்களில் அக்கறை கொள்வதில்லை. இத்தகைய பேரழிவுகளை இவர்கள் கண்டும் காணாமலும் இருந்து வருகின்றனர். இயன்றவரை இவர்களும் செல்வம், பதவி, அதிகாரம், புகழ் முதலியவற்றைச் சேர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளனர். தேவைப்படும் பொழுது அரசதிகாரத் தோடும் கைகோர்த்துக் கொள்கின்றனர்.

பெரியாரியத்தின் வலதுசாரிப் போக்கு உண்மையில் பெரியாரியத்தின் மையமென நான் கருதவில்லை. பெரியாரியத்தினுள் வளமான ஓர் இடதுசாரிப் போக்கு என ஒன்று இருக்கிறது. ஒரு வகையில் இதைத்தான் அசலான பெரியாரியம் என்று சொல்ல முடியும். வலதுசாரிப் போக்கை போலிப் பெரியாரியம் என சொல்லத்தான் வேண்டும். பெரியாரியத்தில் மையமென சமதர்மத்தைத்தான் சொல்ல முடியும். பெரியாரின் மெய்யியல் எது என ஆராய்ந்தால் பெரியாரின் சுயமரியாதை என்ற கொள்கைதான் பெரியாரின் மெய்யியல் என்று உறுதியாகச் சொல்லலாம். பெரியார் இதை அற்புதமாக விளக்கியுள்ளார். தொழிலாளிக்குச் சுயமரியாதை என்பது முதலாளியத்தை மறுப்பதாகும். பெண்ணுக்குச் சுயமரியாதை என்பது ஆணாதிக்கத்தை மறுப்பதாகும். இப்படியே பெரியார் தொடர்கிறார். இறுதியில் அனைத்து ஆதிக்கங்களிலிருந்தும் மக்கள் முற்றாக விடுதலை பெறும்போதுதான் மக்கள் தன்மானத்தைப் பெறமுடியும். சுரண்டலும் ஒடுக்குமுறையும் மனிதர்களின் தன்மானத்தை அழிக்கும். சமத்துவமும் சமதர்மமும்தான் மனிதர் தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கையாக இருக்க முடியும்.

தோழர் சிங்காரவேலரோடு பெரியாரும் இணைந்து ஈரோடு திட்டம் என வெளியிட்டதை இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அந்நியர் ஆதிக்கம் நமக்கு வேண்டாம். ஜமீன்தார்களும் லேவா தேவிக் காரர்களும் நமக்குத் தேவையில்லை. இது மட்டுமல்ல தனியுடைமை பற்றியும் அரசு அதிகாரத்தில் இடம் பெறுவது பற்றியும் பெரியாருக்குக் கூர்மையான விமர்சனங்கள் இருந்தன. பெரியார் பேசிய நாத்திகம் என்பது சாதி, மதம் முதலியவற்றை மட்டுமல்லாமல் தனியுடைமையையும் அரசதிகாரத்தையும் மறுப்பதுமாகும். பெரியார் சமதர்மம் என்பதை என்றும் கைவிடவில்லை. கைவிட்டதைப் போலத் தோன்றினாலும் அவர் பேசிய சுயமரியாதைக்குள் சமதர்மமும் அடங்கியே இருந்தது. உண்மையில் இவர்தான் நமக்கான பெரியார். நாம் போற்றுகிற பெரியார். வலதுசாரிப் போக்கில் பெரியாரைச் சிறைப்படுத்துகிறவர்கள் பெரியாரியத்தை முதலாளியத்திற்கு விட்டுக் கொடுப்பவர்கள். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட நிலையில் சாதி என்றும் மதம் என்றும் பார்ப்பனியம் என்றும் பேசுகிற பெரியாரியம் நம் விடுதலைக்கு உதவாது. இதைப் போலவே முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியமும் நம் விடுதலைக்குப் பயன்படாது.

பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப்போக முடியாது என்று எங்கெல்ஸ் எழுதியதை உலகஅளவில் வெளிப்படையாகப் பார்க்கிறோம். பெரும்தொழில் வேண்டுமென்றால் பெருமளவில் மூலதனம் வேண்டும். பிரம்மாண்ட இயந்திரங்கள் வேண்டும் நவீன அறிவியலும் தொழில் நுட்பங்களும் வேண்டும். மையத்தில் வலிமையான அரசாங்கம் வேண்டும். அதிகாரம் வேண்டும். உழைக்கும் மக்கள் மீது கூடுதலான சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் திணிக்க வேண்டும். அரசோடும் அதிகாரத்தோடும் ஒத்துழைக்கும் படிப்பாளிகள், விஞ்ஞானிகள் வேண்டும். நவீன நாகரிகம், நகரங்கள் வேண்டும் பெரிய ராணுவம், காவல்துறை வேண்டும். இவர்களை எல்லாம் தாங்க உழைக்கும் மக்கள் வேண்டும். சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் வேண்டும். இயற்கை நாசம் பற்றிப் பேசக்கூடாது. சோவியத் யூனியனில் இவையெல்லாம் நடந்தன. இதைச் சோசலிசம் என்று கூறினார்கள். இறுதியில் தன் சுமையைத் தானே சுமக்க முடியாமல் தேசம் அழிந்தது. சோசலிசம் என்ற பெயரில் அங்கு நடைபெற்றது பெருமளவில் முதலாளியம். முதலாளிய வளர்ச்சிக்கே நாம் உயிர் தரமுடியாது. நமக்கு வாழ்வு வேண்டும். விடுதலை வேண்டும். போலி மார்க்சியம் நமக்கும் வேண்டாம். இது வலதுசாரி மார்க்சியம்.

இப்பொழுது இடதுசாரி மார்க்சியம் பற்றியும் சிலவற்றைச் சொல்லவேண்டும். உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தருவதன் மூலம் மாபெரும் தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள் நிபுணர்கள், மையத்தில் வலிமையான அரசு முதலியவற்றின் ஆதிக்கத்தில் மக்கள் வாழவேண்டி வரும். உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை தருகிற மார்க்சியம் சிறு தொழில்கள், உழவுத் தொழில், இயற்கையை வாழ்வித்தல், அதிகாரத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கல் குறைந்த அளவுக்கே வாழ்வியல் தேவைகளில் நிறைவடைதல் ஆகியவற்றில் நிறைவுபெறும். முதல்வகைப்பட்டது ஸ்டாலினிய மார்க்சியம் என்றால் அடுத்த வகைப்பட்ட மார்க்சியத்தை மாவோவின் மார்க்சியம் என்று குறிப்பிடலாம். தொழில் பெருக்கம், மைய அரசு ஆதிக்கம், பொருளுற்பத்திக்கு முதன்மை முதலியவற்றுக்கு அழுத்தம் தருவதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் திணிக்க வேண்டி வரும். இயற்கை நாசமாகும். வாழ்வின் ஆதாரம் அழியும். மையத்தில் பெருகும் அதிகாரம் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் அறப்பண்பு ஆகியவற்றை அழிக்கும். இது முதலாளியத்தின் இன்னொரு வகைச் சமூகமே அன்றி மக்களுக்கான சோசலிச சமூகமாக இருக்கமுடியாது. இங்கு தொழிற்சங்க உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு மரியாதை இல்லை.

மனிதனுக்கு அவனது சமூக உறவுகளுக்கு அவனது ஆக்கத்திறன்களுக்கு முதன்மை தருகிற சமூகம்தான் மனிதர் வாழ்வுக்கான சமூகம். உழைப்பு மனிதனின் ஆக்கத் திறன்வகைகளை வளர்ப்பதைப் போலவே அவனுக்குள் எல்லாவற்றையும் எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும். அரசை, அதிகாரத்தை, பொருள் திரட்டலை, நுகர்வு வெறியை, போதையைப் பெருக்குகிற சமூகம் இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுகிற சமூகம். மனிதனுக்கு இருக்கிற மரியாதை இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் இருக்கத்தான் வேண்டும். நெடுங்கால வரலாற்றின் வழியே பலகோடி மக்களின் ஆக்கச் செயல்கள் மூலம் மனிதன் தனக்கான மாண்பை, கலை, இலக்கியங்களை வளர்த்துக் கொண்டவன். பிரபஞ்சம் வரை தன் பார்வையை தன் ஆளுமையை பெருக்கிக் கொண்டவன். தன்னை முதன்மைப்படுத்தி இவனால் வாழ முடியாது பொது நலத்துக்காக இவன் தன்னை அழித்துக் கொள்வான். இவன்தான் அசலான மனிதன். இவனுக்குள் நுகர்வு வெறி இல்லை. அதிகார வெறி இல்லை. இவன் எவரையும் அடிமைப்படுத்த மாட்டான். இவன்தான் சோசலிச மனிதன். இத்தகைய மனிதனைக் கருவாகக் கொண்டதுதான் மார்க்சியம். இவன் தனியன் இல்லை இயற்கை அளவுக்கு, வரலாற்று அளவுக்குத் தன்னை விரித்துக் கொண்டவன் இவனை ஆண் பெண் என்றோ பிரித்துப் பேசமுடியாது.

இத்தகைய மார்க்சியப் புரிதலைத் தமிழகச் சூழலில் முதன்முறையாக முன்வைத்தவர் தோழர் எஸ்.என்.நாகராசன். உற்பத்தி சாதனங்களுக்கும் பகை முரண்பாடுகளுக்கும் முதன்மை தருகிற மார்க்சியத்தை இவர் ஆணியம் என்றும் உற்பத்தி உறவுகளுக்கு நட்பு முரண்பாட்டிற்கு உழவர் முதலிய உழைக்கும் மக்களுக்கு முதன்மை தருகிற மார்க்சியத்தைப் பெண்ணியம் என்றும் வகைப்படுத்தினார். வர்க்க முரண்பாட்டில் வகை முரண்பாட்டுக்கு இடம் இல்லாமல் இல்லை. ஆனால் முதலாளி என்பவனும் பொருளுக்கு, அதிகாரத்துக்கு நுகர்வியத்திற்கு இடம் கொடுத்து இவற்றிற்கு அடிமைப்பட்டு இதன் காரணமாக இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் இறுதியாக தன்னிலிருந்தும் இவன் அந்நியமானவன். பொருளியல் சூழலினால் அந்நியப்பட்ட இவனை பாட்டாளி வர்க்கம்தான் மனிதனாக மாற்றம் செய்ய வேண்டும்.

பொருளியல் சூழல் காரணமாக முதலாளி ஒரு வகையில் தனக்குள் அந்நியமாவதைப் போலவே, தொழிலாளியும் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாகி தன் உற்பத்தியும் உழைப்பும் தனக்கு என்று இல்லாமல் தனக்கே எதிரான நிலையில் தனக்குள்ளும் அந்நியப்பட்டு அவலத்தோடு வாழ்கிறான். பொருளியல் சூழலை முற்றாக மாற்றுவதன் மூலமே இருவரது அந்நியமாதலும் அகலும். நிலம் முதலியவற்றை தனிப்பட்டவர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து மக்களது நிர்வாகத்திற்குள் கொண்டு வரவேண்டும். நிலம் மட்டுமில்லாமல் நிர்வாகத்திலும் அனைவருக்கும் பங்கு உண்டு. இப்படிச் சொல்லுகிறது அந்நியமாதல் குறித்த மார்க்சின் விளக்கம். ஆணியம், பெண்ணியம் என்று பேசுவதற்கு இன்னும் ஆழமான பொருளுண்டு. ஆண் ஆதிக்கம் என்று நாம் பேசும்பொழுது ஆதிக்கத்திலிருப்பவர் ஆண்கள் என்று பொருள்படுகிறது. உண்மையில் ஆதிகத்திலிருப்பவை தனியுடைமை, அரசு முதலியவை. மனிதன் உடைமை ஆள்வதில்லை. மனிதனைத்தான் உடைமை ஆள்கிறது. இதைப்போல ஆதிகாரம் செய்து பழகியவனை நாளடைவில் அதிகாரம் ஆள்கிறது.

வரலாற்றுக் காலம் முழுவதும் மனிதர்களே தன் ஆளுகைக்கு உட்படுத்தி, அவர்களைச் சிதைத்து, குறுக்கி, வெறியேற்றி மனிதத் தரத்திலிருந்து தாழ்த்துகிறது. கோபத்தில் மனிதன் எதையும் செய்கிறான். வெறி கொண்டவனும் எதையும் செய்கிறான். முதலாளியும் இப்படித்தான் பொருள், உற்பத்தி, இலாபம் என்பதைக் குறியாகக் கொண்டு அதற்காகவே தான் வாழ்வதாக எண்ணி தன்னை அழித்துக் கொள்கிறான். இராணுவத்தில் அரசதிகாரத்தின் உச்சியில் தொழில் முதலிய நிறுவனங்களில், மத பீடங்களில், மையத்தில் அல்லது தலைமையில் இருப்பவன் பெரும்பாலும் ஆண் என்பதால் அவன்தான் திட்டமிடுகிறான். அதிகாரம் செய்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அதிகாரத்திலிருப்பதாலேயே இவன் தன்னை அழித்துக் கொள்வது போலவே தனக்குக் கீழுள்ள தொழிலாளிகள் முதலியவர்களையும் அதிகாரம் செய்து சுரண்டலுக்கு உள்ளாகி, அவர்களுக்குள் மனச்சிதைவை ஏற்படுத்தி அவர்களின் ஆக்கத் திறனை அழித்து தான் வெற்றியடைந்தது போல நினைத்துக் கொள்கிறான்.

அதிகாரம் இப்படி முதலாளியை மட்டுமல்லாமல் தொழிலாளிக்குள்ளும் நுழைந்து தானும் தனக்குக் கீழ் உள்ளவர்களை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கற்பித்து அவன் தன் மனைவியையும் குழந்தைகளையும் தன் அதிகாரத்திற்கு உள்ளாக்கி அவர்கள் உள்ளத்திலும் அதிகாரம்தான் மனித ஆளுமைக்கு ஓர் அடையாளம், அதிகாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறான். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் அதிகாரம் தன்னை எல்லா இடங்களிலும் எல்லோருடைய மனங்களிலும் உற்பத்தி செய்கிறது. இதைப்போலத் தான் உடைமை என்பதும் அரசு என்பதும் மதம் என்பதும் சாதி என்பதும் கூட மனிதர்களை தன் வயப்படுத்தி தனக்குச் சேவகம் செய்ய வைத்து அவர்களைச் சிறைப்படுத்தி முடமாக்குகிறது. இத்தகைய ஆதிக்கத்திற்கு காலம் காலமாக உள்ளாகிய பெண்ணும் தன்னை இழந்து தானும் அதிகாரியாவதன் மூலமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாள்.

சுருக்கமாகச் சொன்னால் ஆணாதிக்கம் என்பது ஒரு தவறான சொற்றொடர். ஆணாதிக்கம் தான் பெண்ணை அடிமைப்படுத்தியது என்று சொல்வது உண்மையில்லை. அதிகாரத்திலிருப்பது முதலாளியம் என்றால், அதனோடு கைகோத்துக் கொள்கிற அரசு அதிகாரம் என்றால், இவற்றோடு ஒத்துழைக்கிற மதபீடம் என்றால் இவைதான் தம் ஆதிக்கத்திற்கு மக்களை உட்படுத்துகின்றன. அடிமைப் படுத்துகின்றன. மக்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் இந்த அதிகார பீடங்களை, பொருளியல் முறையை தகர்க்கத்தான் வேண்டும். அதிகாரம் தன்னை பெருக்கிக் கொள்ள என்னவெல்லாமோ செய்கின்றன. தன் தேவைக்கு ஒத்த முறையில் கல்வித் திட்டத்தை தயாரிக்கிறது. உற்பத்தி முறையைத் தீர்மானிக்கிறது. நாகரிகப் பெருக்கத்தை பெருக்குகிறது. ஆண்-பெண் உறவு உட்பட அனைத்தையும் தீர்மானிக்கிறது. தன் தேவைகளுக்கு ஒத்தமுறையில் கலை, இலக்கியம், கலாச்சாரம் முதலியவற்றைப் படைக்கிறது. பெரிய அணைக்கட்டுகள், மின்னிலையங்கள், பல்கலைக் கழகங்கள், போக்குவரத்து சாதனங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் என்று எல்லாவற்றையும் தன் தேவைகளை நிறைவேற்றத் தகுதியுடைய நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளைக் கொண்டு அவர்களுக்கும் கொஞ்சம் கூலியைக் கூடுதலாகக் கொடுத்து, அதிகாரத்தையும் கொஞ்சம் வழங்கி நிறைவேற்றிக் கொள்கிறது. இறுதியில் அடித்தள மக்கள் இவர்கள் எல்லோரையும் சுமக்க வேண்டும். இவர்களின் ஆதிக்கங்களை உள்வாங்கிக் கொண்டு தமக்கான வாழ்வு எது என்று தெரியாமல் மேலிருந்து தம்மீது கொட்டப்படும் குப்பைகளையே வாழ்வுக்கான சாதனங்கள் என நம்பி இறுதிவரை உழைக்க வேண்டும். உழைக்கும் மக்களில் பெரும்பகுதி பெண்கள், தலித் மக்கள், பழங்குடிகள் என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ளலாம்.

- தொடரும்




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com